சனி, 30 மார்ச், 2024
பாதங்களை போரில் தொலைத்தவன்
சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன்
துயரங்களை வெளிக்கு மறைத்தாலும்
மனது வேர்த்துவிடுகிறது
இப்போதெல்லாம்
நினைவுகள் மறந்துபோகின்றன
ஆனாலும்
என் அண்ணனுடன் கதைக்க
நிறைய வைத்திருக்கிறேன்
வெள்ளி, 29 மார்ச், 2024
ஒளியும் இருளும் குழைந்திருந்த
மாலைப்பொழுதில்
பறவைகளின் வரிசை
குலையாதிருந்தது
குருதி உண்ணும் நுளம்புகளை போல
மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன
மின்மினி வெளிச்சத்தில்
சட்டென உயிர்கள் பிரிந்தன
முடிந்த நாட்களைப்போல
போன உயிர்களும் மீளவருவதில்லை
உயிர்த்தானம் கொடுக்க
வரிசைகுலையா அவதானம் தேவை
குழந்தையொன்று
பொத்து பொத்தென நடந்து வரும்
சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது
புதிய எதிர்பார்ப்புகளோடு

முள்ளிவாய்க்கால் இறுதிநாள்
இளைய போராளிதான் நீ
அரச கட்டுப்பாட்டுக்குள்
யாவும் அடங்கிக்கொண்டிருந்தது
கைக்குழந்தையை
இருகைகளால் தூக்கி முத்தமிட்டு
மனைவியுடன் அனுப்பிவிட்டு
போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய்
அவர்கள் போய்முடியும்வரை
தோளில் இருந்த துப்பாக்கியை
கைகளில் மாற்றியபடி
ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய்
ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம்
பிரிந்து நீ போனாய்
சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய்
நான் உனைப்பார்க்க
நீ கையசைத்துவிட்டு போனாய்
பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை

வியாழன், 28 மார்ச், 2024
சனி, 23 மார்ச், 2024
காலை விடிகிறது
அம்மா
அன்பிலான அழகான கவிதை
ஆண்டவன் எழுதியது
கவிஞனின் குழந்தை கவிதையா ?
வறுமையா?
பட்டிமன்றில் கவிஞன்
காலை விடிகிறது
மொட்டு பூவாக மலர்கிறது
இலைமீது பனித்துளி முகப்பரு போல
சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட
மனதில் கோலம் படிகிறது
நீலக்கடல் வானில் ஏறுகிறது
கடலலைகளில்
மனம் ஏறி இறங்குகிறது
கைவிடப்பட்ட ஒற்றைப்படகில்
என் இதயம் இருக்கிறது

காலை விடிகிறது
வியாழன், 21 மார்ச், 2024
உங்கள் நண்பனல்ல
எந்த இலட்சியத்திற்காய்
உங்களை தந்தீர்களோ
அந்த இலட்சியத்திற்கு
மாறாய் போபவன்
உங்கள் நண்பனல்ல
விலைபோகமுடியாதவனே போராளி
கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்

உங்கள் நண்பனல்ல
ஞாயிறு, 17 மார்ச், 2024
அவன்
என்னோடு பள்ளியில் படித்தவன்
வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான்
ஒரே அடிவாங்குவான் அழுவான்
அடுத்தநாளும் அப்படித்தான்
வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான்
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான்
ஊரடங்கு நேரத்தினுள்
இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான்
அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது
பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ
அது தெரிந்திருக்கவில்லை
பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை
காலப்புண் ஆறுவதில்லை

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
நான் எழுதியதை நீயோ
நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை
நண்பா !
நீ புலம்பெயர முடிவெடுத்தாய்
புகையிரத நிலையம்வரை வந்தேன்
நாற்பது வருடங்கள்
நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும்
நான் குருதி தொட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறோம்
நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய்
வலியின் விசாலம் நீ அறியாய்
பல உயிருறவுகளை பறிகொடுத்தேன்
இனி புது உலகம் சாத்தியமில்லை
நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல
வேறுமல்ல

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
திங்கள், 11 மார்ச், 2024
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
என் அனுபவங்கள் எனக்கானவை
அதேபோல் உங்களதும்
நெருப்பு மழைக்குள் இறங்கியும்
ஏதோ ஒரு கரை சேர்ந்தேன்
உள்காயங்களோடு
ஆற்றுப்படுத்த
இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன்
நினைவு சோரும்வரை
இழப்புகளின் வலி திணறி எழ
மூச்சுத்திணறி மீள்வேன்
யாருமறியாமல்
நாளையும் விடியுமா?
கசியா இரகசியமாய்
மூடியிருந்த வாழ்வு
எரிந்துபோகுமா?
இதயசிறகு படபடக்க
உயிர் காவுகிறேன்
வழிப்போக்கனாக
மலையடிவாரத்தில்
ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன்
வழிமாறிய குயிலொன்று
அதை பாடுகிறது
இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
சனி, 2 மார்ச், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)