செவ்வாய், 26 அக்டோபர், 2021

 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவிதமாக இரத்தவங்கியில் அப்பாவை சந்தித்தேன். அப்பா இரத்தம் வழங்கிவிட்டு அமர்ந்திருந்தார். நானும் இரத்ததானம் வழங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். நான் இரத்தம் கொடுத்துவிட்டுவரும்வரை எனக்காக காத்திருந்தார். வைகாசி  2009 வரை இருபத்தியாறு தடவைகள் இரத்ததானம் வழங்கியிருந்தேன். எனக்கு முன்பு மலேரியா காய்ச்சல் வந்தது என்ற காரணத்தால் நான் தற்போது வசிக்கும் இந்த நாட்டில் எனக்கு இரத்ததானம் வழங்க அனுமதியில்லை.  இரத்தத்திற்கு மாற்றீடு எதுவும் இல்லை, இரத்ததானம் செய்வதில் நன்மைகளே அதிகம், தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்றும் சொல்லப்படுகிறது .  



Share/Save/Bookmark

திங்கள், 25 அக்டோபர், 2021

 என் குடும்பப்பின்னனி விவசாயத்தோடு ஒன்றியது. எனது தந்தை, தாய் வழிப்பேரன்கள் விவசாயிகளாகவும் இருந்தாலும் இவர்கள் இருவரின்  விவசாயமும் வேறுபட்டது. தாய்வழிப்பேரனின் பிரதான விவசாயம் நெல் விதைப்பு. தந்தைவழிப்பேரனின் பிரதான விவசாயம்  மிளகாய், வெங்காயம், புகையிலை. எனது தந்தையார் இவற்றிலிருந்து வேறுபட்டு மலைநாட்டில் வற்றாளைக்கிழங்கு,கோவா, கரும்பு மாங்குளத்தில் உளுந்து, பயறு, எள்ளு, கௌப்பி என அவரது விவசாயம் மாறுபட்டிருந்தது. எனது இளைய தம்பி கொய்யா கொடித்தோடை மா பப்பாசியென நல் இனக்கன்றுகளை உருவாக்கி  மக்களுக்கு சென்றடைவதை தொழிலாக கொண்டிருந்தான். எனக்கும் விவசாயத்தில் நாட்டம் இருந்தது ஆனால் அது கைகூடவில்லை. எனது பிள்ளைகளுக்கு விவசாயத்தில் நாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை, இது கவலை தருகிறது. எனது தாய் நிலம் எவ்வளவு வளமானது. எனது சகாக்களுக்கு தம் தேசம்மீது எவ்வளவு கனவு இருந்தது. உலகில் நூறுகோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன, இது எவ்வளவு கொடுமையானது.    



Share/Save/Bookmark

சனி, 16 அக்டோபர், 2021

முற்றுப்பெறா கனவுகள்

 மலரவன் எனது தம்பி. மலரவனின் இழப்பு என்பது எனது மனதில் ஒரு பெரிய இடைவெளியை அல்லது ஒரு பெரும் பாறாங்குழியை வைத்திருக்கிறது. மலரவன் இருபது வருடங்கள்தான் இந்த உலகில் எங்கள் கண்ணுக்குமுன் வாழ்ந்தான். எப்போதும் நகைச்சுவை ததும்பும் அவனது உரையாடல்கள், அவரவருக்கு ஏற்றதுபோல் கதைசொல்லும்  திறன் , அவனது வீரம் அறிவு அன்பு எல்லாவற்றையும் எப்படி மறக்கமுடியும். அவனது இறுதிக்காலங்களில்  கெலிக்கொப்டர் செய்யும் அவாவிலும் அவன் திரிந்தான். அதற்குரிய அறிவை சேகரிப்பதில் அவனது ஓய்வுநேரம் கழிந்து கொண்டிருந்தது. முற்றுப்பெறாத பல கனவுகளுடன் அவன் கண்மூடிப்போனான்.     



Share/Save/Bookmark

வியாழன், 23 செப்டம்பர், 2021

மானிடத்தின் அழுக்கு

சரணடையுங்கள்!  விடுவிக்கிறோம்!!

கூவி அழைத்து 

கைகளை பின்புறமாய்  கட்டி 

பின் நின்று சுடும் கோழைகள்   

சிங்கங்கள் என்ற பெயரோடு 

உலவும் நவீனயுக நரிகள் 

கொண்டாடும் வெற்றி 

தர்மத்தின் இழுக்கு 

மானிடத்தின் அழுக்கு



      



Share/Save/Bookmark

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

தரையில் துடிக்கின்றன மீன்கள்

 வெற்றுத்தாளில் 

இதயச்சுமையை கவிதையாய் எழுதி 

சோகம் பீறிட கிழித்து எறிகிறேன் 

தரையில் துடிக்கின்றன மீன்கள்







Share/Save/Bookmark

திங்கள், 6 செப்டம்பர், 2021

முன்னறிவிப்பு அற்று 
அகாலமாய் துயிலெழுப்புகின்றன 
மரணச்செய்திகள் 

நிதானிப்பதற்குள் 
படபடத்து விடுகிறது இதயம்  
இழப்பையும் தாண்டி 
குடைகிற மனதில் எஞ்சியிருப்பது
இ(மு)யலாமை   



Share/Save/Bookmark

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

பாடையும் இல்லை ஊர்வலமும் இல்லை

 ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான் 
தனக்குரிய கிடங்கை தானே வெட்டி 
ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான்
பொத்திவைத்திருந்த கனவுகள் எரிகின்றன - மகன் 
கொள்ளிவைக்காமலே ஆச்சி அப்புவும் - அவர் கொண்ட 
ஆயுள்க்கால ஆசைகளும் சாம்பலாகிறது   
இற(ர)க்கமற்று ஏறிக்கொண்டிருக்கிறது விலைவாசி
குடிசைகளை நினைக்கையில் பதறுகிறது மனம் 
நம்பி (க்) கை  கொடு ! விழி ! இதுவும் கடந்து போகும்



Share/Save/Bookmark

சனி, 14 ஆகஸ்ட், 2021

 கொரோனா தொற்று சம்மந்தமான இலங்கை செய்திகளை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த   மருத்துவமனையில்  2001 -2008  ஆண்டுகாலப்பகுதிகளில் பல நூறு நோயாளிகள் எனது கிளினிக் பராமரிப்பில் இருந்தார்கள். வன்னியின் பலபாகங்களில் இருந்தும் சிரமத்தோடு வந்து போவார்கள். அவர்களில் எத்தனை பேர் இப்போது உயிரோடு இருப்பார்களோ தெரியவில்லை. 



Share/Save/Bookmark

ஞாயிறு, 25 ஜூலை, 2021

எந்தவித குற்ற உணர்வும் இல்லை

 எந்தவித குற்ற உணர்வும் இல்லை 

விண்ணுக்கு ரொக்கட் விடட்டும் 

இயற்கையை அழித்து சந்ததியை கொல்லட்டும் 

நீதியை கொழுத்தி குளிர் காயட்டும்  


குழந்தைகளின் கனவுகளை பறித்து 

வீட்டுவேலைக்கு அமர்த்தும் ராட்சகம்  

லயங்களின் நீண்ட துயர் மாற்றாது  

மாளிகைகளில் அரசியல் அரக்கர்கள் 


இழப்புக்களின் வலியை அளந்துவிட

தொழில்நுட்பம் போதவில்லை- அதனால் 

நாளையும் வலி ஏறும் - வழமைபோல 

விடிவற்று காலை வரும் மாலை போகும் 

   

கூர்ப்பில் மனம் ஊனமாகி உலாவரும் 

கொம்பு முளைத்த மனிதர்களிடம்  

இரக்கம் பஞ்சமாகி போக - எஞ்சியிருப்பது 

காவடி தூக்கும் இலையான்கள்  

    




Share/Save/Bookmark

ஞாயிறு, 7 மார்ச், 2021

திருப்பிப்பார்க்கிறேன்

  


1985 இன் ஆரம்பகாலமாக இருக்கவேண்டும். காலை பதினொரு மணியளவில்  அம்மம்மா வீட்டிற்கு களைத்து வீழ்ந்து போனேன். அம்மம்மா காலை சாப்பாடு தந்து கேட்டார் " சந்தையிற்கு போய் மீன் வாங்கி தருவீரா ?. ஓம் அம்மம்மா , ஏன் என்று கேட்டேன். என்னெண்டா குஞ்சு " இரண்டு பெடியள் வந்து மத்தியானத்திற்கு ஐந்து சாப்பாடு பார்சல் கேட்டவங்கள்" . அப்படியா அம்மம்மா " நான் வாங்கி தருகிறேன்".

அப்போது புளொட் இயக்கத்திற்கும் எங்கட இயக்கத்திற்குமான பகை கொதிநிலையில் இருந்தது. புளொட் இயக்கத்தவர்கள்தான் சாப்பாடு பார்சல் கேட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயுறவு இருக்கவில்லை. புளொட் இயக்கம் எமது இயக்கத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த சிவா சின்னசிவா உட்பட ஆறு பேரை சுழிபுரத்தில் கொலைசெய்து புதைத்து சிலமாதங்கள்தான். அம்மம்மாவின் சாப்பாடு பார்சல் என்பது ஒரு சாதாரண சாப்பாடு பார்சல் இல்லை, ஒரு சாப்பாடு பார்சலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவு பெரியது. அப்படியிருந்தும் கட்டும்போது ஆறு சாப்பாடு பார்சல் வந்துவிட்டது. அவர்கள் இரண்டு மணியளவில்தான் சைக்கிலில்வந்து பெல் அடித்தார்கள். அவர்களுக்கு என்னைக்கண்டதும் முகத்தில் திகைப்பு தெரிந்தது, எனக்கு அதிலொருவரைதான் தெரிந்திருந்தது, அவன் ஒரு நல்ல போராளி. மன்னிக்கவும் அண்ணை " இது உங்கட வீடு என்று தெரியாது". அது பிரச்சனை இல்லை என்றவாறே சாப்பாடு பார்சல்களை கொடுத்தேன், அவர்கள் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.   



Share/Save/Bookmark

வெள்ளி, 5 மார்ச், 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்வியை நான் எனக்குள் பலதடவைகள் கேட்டிருக்கிறேன். உண்மையில் இனங்களுக்கிடையிலான பகைமையை ஆரம்பித்தவர்கள் சிங்களத்தலைவர்கள்தான். அதற்கு தமிழர்களின் சிறப்பான  முன்னேற்றம்தான் காரணமாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அரசு தலைமையிலான வன்முறையை எதிர்கொள்ளமுடியாமல் இருந்தது. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே போராடவேண்டிவந்தது. நல்லிணக்கத்திற்கு மொழி தெரியாமை காரணம் என்று சொல்லுவது ஏற்புடையதில்லை. எனது தந்தை, தாய்வழி பேரன் ஆகியோர் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மூன்றுமொழிகளையும் பேசும் வல்லமையுடன் வாழ்ந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு சிங்கள அரசுடன் இணங்கிவாழலாம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர் மீதான இன அழிப்பை ஜனநாயக முறைகளில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. 



Share/Save/Bookmark

செவ்வாய், 2 மார்ச், 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 

2009  போர் முடிந்தபின் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை உலகிற்கு மறைக்க முழுமுயற்சி எடுத்தது. அதற்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களையும் பயன்படுத்தியது. இலங்கையரசின் இச்செயற்பாட்டை முறியடிக்க நேரடி சாட்சி என்ற வகையில் நானும் என்னால் முடிந்தவரை முயன்றேன். உண்மையிலேயே அந்தக்காலங்கள்தான் என்வாழ்க்கையில் அதிக துன்பகாலங்களாய் உணர்ந்தேன். ஒவ்வொருமுறையும் நடந்தவிடயங்களை மீள நினைத்து வெளிப்படுத்தவேண்டியிருந்தது. நான் மனநிலையிலேயும் மிகவும் மட்டமானநிலையிலும் இருந்தேன். இரவுகள் நித்திரை இல்லாமல் கழிந்தன. ஒரு போராளியாக வாழும்போது மகிழ்வும் துன்பமும் இருக்கும் ஆனால் அதற்கு பின்னான இரண்டு மூன்று வருடங்கள் எனக்கு துன்பம் மட்டுமான காலமாய் இருந்தது. ஆனாலும் இன்று நினைக்கையில் ஏதோ சிறுதிருப்தி இருக்கிறது.   



Share/Save/Bookmark

சனி, 20 பிப்ரவரி, 2021

 அண்ணையின் அம்மாவை நாங்களும் அம்மா என்றுதான் கூப்பிடுவோம்.  அண்ணையின் அப்பாவையும் நாங்கள் அப்பா என்றுதான் கூப்பிடுவோம் ஆனால் அண்ணை "ஐயா" என்றுதான் கூப்பிடுவார். அம்மாவும் அப்பாவும் அண்ணையை துரை என்றுதான் கூப்பிடுவார்கள். துரை என்பது அண்ணையின் வீட்டுப்பெயர். அம்மாவிற்கு பல உபாதைகள் இருந்தன. அப்பா அவரை நன்கு கவனித்துவந்தார். அப்பாவிற்கு எந்தவித நோய்களும் இருக்கவில்லை. அவரது மருத்துவ குருதி பரிசோதனையில் எந்த குறைபாடுகளையும் நான் அறிந்ததில்லை. அப்பா இராணுவ சிறைக்குள் இறந்துபோனதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்பா ஒரு நல்ல நேர்மையான மனிதர். 



Share/Save/Bookmark

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  


நான் ஒரு நிர்வாகியாய் வாழ்ந்திருக்கிறேன். நான் இராணுவ முகாமைத்துவத்தையும் மருத்துவ முகாமைத்துவத்தையும் முறையாக ஓரளவு கற்றிருக்கிறேன். நான் முகாமை செய்த துறைகளில் வெறும் முகாமையாளனாய் நான் இருக்க விரும்பியதில்லை, அதை நானும் ஒருவனாய் செய்யக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன். ஒருபோதும் இன்னொருவரின் திறமையில் குளிர் காய்பவனாக இருந்திருக்கவில்லை. எப்போதும் அடுத்தவர்களிடம் உள்ள சிறப்புக்களை கற்பவனாகவும் அவர்கள் மேலும் வளர உறுதுணையாய் இருந்திருக்கிறேன்.எனது அணியில் உள்ள ஒவ்வொருவரும் தகுதியில் வளரவேண்டும் என்ற அவாவுடன் இருந்திருக்கிறேன். ஒரு முகாமையாளன் அடுத்த முகாமையாளர்களை அடையாளப்படுத்தி தரவேண்டும், அதை நான் செய்திருக்கிறேன். எப்போதும் ஒரு அணியை வெற்றிகரமாக உருவாக்க கூடிய வல்லமையுடன் இருந்திருக்கிறேன். என்னால் முடிந்த பலவற்றை செய்துகாட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போயிருக்கிறது.  குறைந்தளவு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்திருக்கிறேன். என்னால் செய்ய கடினமான ஒன்றை இன்னொருவரை வைத்து எப்போதும் செய்ய விரும்புபவனல்ல.  ஒவ்வொருவரின் பரஸ்பர மதிப்பளிப்புடனாகவே எனது முகாமைத்துவம் அமைந்தது.நான் ஒருபோதும் மற்றையவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி  நினைத்ததில்லை ஆனாலும் சூழ உள்ளவர்களுடன் தேவைக்கேற்ப கலந்தாலோசித்துக்கொள்வேன். நல்லவிடயங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பின்நிற்பதில்லை. எப்போதும் எனது பதவிகளுக்காக இறங்கிப்போனவனல்ல , எனது முகாமையின் வெற்றியென்பது நிஜமாகவே ஒவ்வொரு பங்காளியினதும் வெற்றியே, எனக்கானதல்ல.  எனது முகாமையின் மையப்புள்ளி மக்கள்நலனே.



Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

 


எனது இளையதம்பியார் ( மலரவன்) , அவருக்கு சிறுவயதில் இருந்தே இயற்கையுடன் ஒரு பிணைப்பு இருந்தது. அவரது செய்கைகள் அபரீதமானவை. அவர் இயற்கையை இரசித்து வாழ்ந்தவர். அவருக்கு தரமான பழக்கன்றுகளை உருவாக்குவதில் பெரும் ஈடுபாடு இருந்தது. நல்ல சுவையில் பழங்கள் இருந்தால் அந்த விதைகளை கன்றாக்குவதில் அவர் கைதேர்ந்தவர். அக்கன்றுகளை எல்லாருக்கும் வழங்கவேண்டும் என்பது அவருக்கே உரிய விருப்பு.அவர் ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே தேசிக்காய் கன்று, பசன் புரூட் கன்று, பெரிய கொய்யா கன்று என பலவகை கன்றுகளை தரமான முறையில் உருவாக்கி பொலுத்தீன் பைகளில் மண்ணிட்டு ஓரளவு பெரியளவில் மலிவான விலையில் விற்றுவந்தார். அப்போது எமது குடும்பம் இராமலிங்கம் வீதியில், நல்லூர் பாதையோரமான வீடொன்றில் வாடகைக்கு இருந்தார்கள். வீட்டு படலையில் இந்த கன்றுகள் விற்பனைக்குண்டு என்ற பதாகை எப்போதும் தொங்கும். எனது வீடு தெரியாதவர்களுக்கு நான் இந்த அடையாளத்தைத்தான் சொல்லிவிடுவேன். எனது இளையதம்பியார் தனது தேவைக்குரிய  பணத்தை வீட்டில் கேட்பதில்லை.   இன்று அவர் உயிரோடு இல்லை. நிச்சயமாக அவர் உருவாக்கிய மரக்கன்றுகள் மரங்களாய் அல்லது அதன் வழித்தோன்றல்கள் இருக்கும்.     



Share/Save/Bookmark

திங்கள், 15 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 


இரண்டாயிரம் ஆண்டுகளில் கிளிநொச்சியின் மீளுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தேன். கிளிநொச்சி சந்தை எங்களது வரைபடத்திற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டது. அநேகமாக காலையில் கிளிநொச்சி சந்தையையும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக சுற்றி பார்த்துவருவேன். அப்போதெல்லாம் சந்தையிற்கு விவசாயிகள் மரக்கறி வகைகளை சைக்கிளில் பின் கரியலில் உறைப்பையில் அல்லது சாக்கில்  உள்வைத்து கட்டி கொண்டுவருவார்கள். சிலர் மோட்டார் சைக்கிளில் கொண்டுவருவார்கள். சந்தையிற்கு மரக்கறிகளை கொடுத்துவிட்டு அநேகமானவர்கள் கிளிநொச்சியில் இயங்கிய பாண்டியன் உணவகத்தில்தான் உணவருந்துவார்கள். பாண்டியன் உணவகத்தில் உணவு தரமாக மட்டுமல்ல மலிவானதாகவும் இருக்கும். பலர் உணவுண்ணும் இடமாகையால் அங்கும் சுகாதார நடைமுறைகளை மறைமுகமாய் பார்த்துதான் எனது காரியாலயம் செல்வேன்.





Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

  

1990 - 1995 காலப்பகுதியில் வட இலங்கையில் நடைபெற்ற   இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முனையில் கள முன்னணி மருத்துவராக பணிபுரிந்தேன். துப்பாக்கி ரவைகளுக்கும் ஷெல் எறிகணைகளுக்கும் விமான குண்டு வீச்சுக்கும் நடுவில் பணிபுரிந்தது எப்போதும் எனக்கு ஒரு சவாலான அனுபவம்தான்.   பலதடவைகள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். களப்பணியில் பல உயிர்களை காத்திருக்கிறேன் என்பதுபோல் என்மடியில் என் கண்முன்னால் உயிரிழந்தவர்களின் நினைவும் என்னில் ஆழமாய் படிந்துபோய் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு தடவையும் களமுனையில் பணியாற்றி பாதுகாப்பான பகுதியிற்கு மீள்கையில் தப்பிவிட்டோம் என்ற உணர்வு வந்து போகும். சில களச் சம்பவங்களை நினைக்கையில் இப்போதும் மயிர்க்கூச்செறிகிறது.  எனது களமருத்துவப்பணியில் எப்போதும் நேர்த்தியுடன் இயங்கியிருக்கிறேன். எனக்கு மிகப்பொருத்தமான பணி களமருத்துவம்தான் என்ற நினைப்பும் எனக்குண்டு. சிலநேரம் எனது தந்தையும் களமருத்துவர் என்பது காரணமாய் இருக்குமோ தெரியவில்லை .      



Share/Save/Bookmark

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  

 பிள்ளைகளின் உடல் உளநலன் மிகமுக்கியமானது. பிள்ளைகளின் கல்வி எவ்வளவு முக்கியமானதோ அந்தளவிற்கு விளையாட்டு / உடற்பயிற்சிகளும் முக்கியமானவை. இவை பிள்ளைகள் பண்புடன் சமூகத்துடன் இணைந்து வாழ மட்டுமல்ல ஆளுமை விருத்திற்கும் அடிப்படையானவை. 


இரண்டாயிரம் ஆண்டுகளின் சமாதானக்காலம், வன்னியில் பாடசாலை மட்டத்தில் தற்காப்புகலையில் ஒன்றான கராட்டியினை ஆரம்பித்துவைத்தோம். இதற்கான ஆலோசனைக்கூட்டம் கிளிநொச்சி திலீபன் முகாமில் அரசியல் பொறுப்பாளர் தலைமையில் நடந்தது. இதில் கல்விக்கழக பொறுப்பாளர் பேபி அண்ணை, விளையாட்டுத்துறை பொறுப்பாளர், கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப்பணிப்பாளர்கள், கராட்டி மாஸ்டர் சோதி அண்ணை போன்ற சிலருடன் ஆலோசகராக நானும் பங்குபற்றினேன். இச்செயற்திட்டத்திற்கு விளையாட்டுத்துறையை சேர்ந்த இன்பன் அவர்கள் இணைப்பாளராக நியமிக்கப்பட்டு குறிப்பிட்ட சிலபாடசாலைகளில் ஆறாம் வகுப்பிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தற்காப்புக்கலையின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.   


உண்மையில் பிள்ளைகள் ஒரு தற்காப்புக்கலையினை , யோகக்கலையினை பாடசாலை காலத்திலேயே ஓரளவு கற்றிருப்பது அவர்களது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.



Share/Save/Bookmark

புதன், 27 ஜனவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  

இன்று எனது அம்மப்பாவின் 26 வது வருட நினைவுநாள். எனது அம்மப்பாவும் , எனது அப்பப்பாவும் (தாத்தா) எனக்கு முன்னுதாரணமானவர்களாய் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பழக்கவழக்கங்களில் வேறுபட்டவர்கள். இருவரிடமும் காணப்பட்ட ஒற்றுமை எனின் இருவரும் சிவதீட்சை பெற்றவர்கள். 

அம்மப்பாவை நினைக்கும்போது அம்மம்மாவின் நினைவு வருவதை என்னால் எப்போதும் தவிர்த்துவிட முடியாது. நான் பாலர் பாடசாலையிற்கு போன ஞாபகம் இல்லை, அம்மம்மா சொல்லித்தந்தவைதான். அம்மம்மா மலையகப்பாடசாலை ஒன்றில் ஆறு வருடங்கள் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.  அவர் கதைகளை சொல்வது, நேரடியாய் பார்ப்பது போன்று இருக்கும். அம்மப்பாவின்  அம்மம்மாவின் பேரப்பிள்ளைகளுடனான வாழ்வு பெறுமதியானது, அன்பாலானது, மிகவும் மகிழ்வானது. தாய்மண்ணின் அழைப்பை ஏற்று இவர்களது மூன்று பேரப்பிள்ளைகள் மாவீரர்களாய் வாழ்கிறார்கள்.



Share/Save/Bookmark

சனி, 23 ஜனவரி, 2021

குருந்தூர்மலையில் அமைந்துள்ள புராதன ஆதிசிவன் ஐயனார் ஆலயப்பகுதி இன்று இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டது.


 



Share/Save/Bookmark

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி


 கண்களுக்கு தெரியாமல்
கண்ணீரில் எரியும் விளக்குகளை
காற்று அணைப்பதில்லை
காலமும் மறப்பதில்லை
கலியுகம் நிலைப்பதில்லை



Share/Save/Bookmark
Bookmark and Share