வியாழன், 27 டிசம்பர், 2012

முல்லை மண்ணின் இன்றையநிலை




Share/Save/Bookmark

புதன், 26 டிசம்பர், 2012

ஹைக்கூ கவிதைகள்


01,

ஒரே பத்திரிகையில் 
பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் 
வாழ்க்கை 

02,

வீடு எரிகிறது 
ஒளி கிடைக்கிறதாம் 
வடக்கில் வசந்தம் 

03,

நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள்  
அழிக்கப்படுகின்றன
கிழக்கில் உதயம் 


Share/Save/Bookmark

வியாழன், 20 டிசம்பர், 2012

இவர்களை தெரியுமா



   கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம்
செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள்.  பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள்.
இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி
விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள்.
ஒரு அதிகாலைப்பொழுதில்  அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள்.
தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும்
இயக்கத்திற்கு போனான்.கமலம் சுருண்டு போனாள்.அடுத்த வருடமே
தம்பி வித்துடலாய் வீட்டுக்கு வந்தான்.கமலம் துயிலும் இல்லமும் வீடுமாய் இருப்பாள்.இடப்பெயர்வோடு வன்னிக்குப்போனாள் .
காலம் உருண்டோட மூத்தவன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம்
செய்தான்.மருமகள் கமலத்திற்கு மகள் இல்லா குறையை தீர்த்துவைத்தாள்.மூத்தவனுக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள்
பிறந்தன. கமலத்திற்கு சந்தோசத்திற்கு குறைவில்லை.வாழ் நாள் சந்தோசத்தை அனுபவித்தாள்.
வன்னி மீது போர் கட்டவிழ்த்துவிட துயரம் அவர்களையும் துரத்த
தொடங்கியது.பத்தாவது இடப்பெயர்வில் மாத்தளனுக்கு வந்தார்கள்.
மூத்தவன் பல நாட்களாய் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.அன்று வீழ்ந்த செல் ஒன்றில் மருமகள் சிதறிப்போனாள் .கமலம் நீண்ட நாட்களுக்குப்பின்
குளறினாள் .மூன்றாம் நாள் மூத்தவன் வந்து நிலத்தில் வீழ்ந்து கதறினான்.
இரண்டு பிள்ளைகளையும் கொஞ்சி தாயிடம் கொடுத்து சனம் செய்யிற
மாதிரி நீயும் செய்யம்மா!அழுது அழுது போனவனை பின்பு காணவேயில்லை.அவன் வீரச்சாவு என்று சொல்கிறார்கள்.
கமலம் மாத்தளனில  இருந்து வவுனியா வந்து இப்ப சொந்த ஊருக்கு
வந்திட்டா.இரண்டு பேரக்குஞ்சுகளோடையும்   பொழுது நல்லா
போகுது.  
போனகிழமை மூத்தவன் திடீரென கேட்டான் . அப்பா எப்படி இருப்பார்?
அம்மா எப்படி இருப்பா? சித்தப்பா எப்படி இருப்பார்? கமலத்திட்ட ஒரு
படமும் இல்லையே காட்ட . கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு மூத்தவனைப்பார்த்து அப்பா
சரியாய் உன்னை மாதிரி இருப்பார்.சின்னவன் சிரிச்சுக்கொண்டு உண்மையாவா எண்டான்.கமலம் ஆம் என தலையாட்டினாள்.அம்மா
சரியா சின்னக்குட்டி மாதிரி இருப்பா.மூத்தவன் உண்மையாவா உண்மையாவா என கெக்கட்டச் சிரிப்புடன் கேட்டான்.அந்த சிறுசுகளின்
புளுகத்திட்கு அளவில்லை.அந்த சிறுசுகள் அன்றிலிருந்து சண்டை பிடித்ததை கமலம் காணவில்லை.இன்றைக்குக்கூட ஒரு கோப்பையில்தான் சோறு வாங்கிச்சாப்பிட்டாங்கள். 


-          சுருதி -  


Share/Save/Bookmark

வியாழன், 13 டிசம்பர், 2012

இவன் அவனேதான்



         (1)

கிளிநொச்சி முந்தி மாதிரி இல்லை.செருப்பில குத்தி 
இருக்கிற முள் உடன் மிச்ச காலத்தை கடக்க வேண்டியிருக்கு.அவன் தொடர்ந்து 
கதைத்துக்கொண்டு இருந்தான்.அவன் முன்னாள் போராளி.பதின்ஐந்து 
வருடங்கள் இயக்கமாய் இருந்து முள்ளிவாய்க்காலில்   சரணடைந்து ,
புனர் வாழ்வு பெற்று ?சமூகத்தோட வாழ்கிறான்.அவனுக்கு மனைவியும் 
ஒரு பிள்ளையும் இருக்கு.இது போதாதென்று அவனது தங்கையும் தங்கையின் இரண்டு 
பிள்ளைகளும் அவர்களோடு இருக்கிறார்கள்.தங்கையின் மனுஷன் போராளியாய் 
இருந்து ஒரு காலை இழந்து சமாதானத்தோட இயக்கத்தில இருந்து விலத்தி,
சண்டை தொடங்கி இயக்கத்திற்கு ஆளணி பிரச்சனை பெரிதாக தானாய் 
போய் மீள இணைந்து ஆனந்த புரத்தில வீரச்சாவு.


  அவனுக்கு பெரிய படிப்பு இல்லை.படிக்கிற காலத்தில இயக்கத்திற்கு போனா 
அது எப்படி இருக்கும். கொஞ்சக்காலம் மிதி வெடி அகற்றுற வேலை செய்தான்.
அந்த வேலை அவன்ர மனிசிக்கு பிடிக்கவில்லை.இப்ப அதை விட்டிட்டு கட்டிட 
வேலைக்கு போறான்.மேசனுக்கு உதவி.முட்டாள்.ஆனால் ஒரு நாளைக்கு ஆயிரம் 
ரூபா கிடைக்குது.இப்ப சாமான் எல்லாம் விலைதானே எவ்வளவு உழைத்தும் 
கட்டாது.
உழைப்பு கிடைத்தாலும் நிம்மதி இல்லை.முன்னாள் போராளிதானே.
எல்லாத்திற்கும் பதிவும் விசாரனையும்தான்.அவன் இயக்கத்தில வேவு பிரிவில 
இருந்தவன்.தளபதி வீரமணியின்ர வளர்ப்பு.சமாதான காலம் அரசியல் துறையில 
இருந்ததில ஒரு வருட புனர்வாழ்விலேயே   வெளியால வந்திட்டான்.இவங்கட 
பதிவில எல்லாம் அரசியல் துறை என்றுதான் இருக்கு.


அவனுக்கு தாயில சரியான விருப்பம் ..அவன்ர தாய் வவுனியா 
இராமநாதன் முகாமில நோய்வாய்ப்பட்டு, வவுனியா ஆஸ்பத்திரிக்கு 
தாயை மட்டும் கொண்டு போய் ,முகாமில தங்கியிருந்த இவையின்ர 
குடும்பத்திற்கே இரண்டு கிழமையாலதான் அவ இறந்ததை சொன்னவை.
இவனுக்கு மூன்று மாதத்தாலதான் தெரியும். தாய் இருக்கைக்க இவனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 
 church இற்கு போகச் சொல்லுறவ.அவ இருக்கைக்க போறதில்லை .இப்ப போகோணும் மாதிரி 
இருக்கு அதால போன கிழமை அந்த church இற்கு போயிருந்தான்.அந்த church இல அவனைக்கண்டான்.
வன் அவனேதான். church முடிய மெதுவாய் அவனை பின்தொடர்ந்து போய்ப்பார்த்தான். இப்பவும் அவனின்ர வேவு மூளைதான் வேலை செய்யுது . அவன் 
முந்தி கிளிநொச்சி பொன்னம்பலம் இயங்கிய கட்டிடத்திற்குள் போயிட்டான்.அது 
இப்ப ஈ பீ டி பீ யின் அலுவலகம். பொன்னம்பலம் மருத்துவமனையிட்கு முந்தி ஒருக்கா 
போயிருக்கான்.தாயிற்கு கடுமையான வருத்தம் வந்து கிளிநொச்சி 
ஆஸ்பத்திரியில வைச்சிருந்தது.ஆஸ்பத்திரியில சொல்லிப்போட்டினம் 
செப்டீசீமியா நோய் உடன அம்புலன்சில வவுனியாவிற்கு ஏற்றப்போறம்  என்று.
தாயோட போக ஒருத்தரும் இல்லை.தங்கச்சியிட்கு போக பயம் .மனுஷன் இயக்கம்தானே.
அப்ப துண்டு வெட்டிக்கொண்டுவந்து பொன்னம்பலத்திலதான் வச்சிருந்தவை .
அப்ப ஒருக்கா தாயை பார்க்க பொன்னம்பலம் மருத்துவமனையிட்கு போயிருந்தான்.

                            (2)

 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதி எங்கட ஏழு பேர் கொண்ட வேவு அணி ஜெயபுரத்தில ஆமியின்ட கட்டுப்பாட்டுக்குள்ள நின்டது.அன்றிரவு
பதினொரு மணிபோல எங்கிட அசுமாத்தம் ஆமிக்கு தெரிஞ்சிட்டுது.
பிறகென்ன பராலைட்டை அடிச்சுக்கொண்டு துளைக்கத்தொடங்கினான்.
நாங்கள் தென்னியங்குளம் பக்கமாய்ப்போய்  கோட்டைகட்டியகுளம்
வந்து ஆரோக்கியகுளம் பகுதிக்குவந்து பிரிஞ்சு படுத்துட்டம்.விடிய
நாலரை மணியிருக்கும்.நானொரு பத்தைக்குள வந்து படுத்து
நித்திரையாகிட்டன்.விடிய வெளிச்சம் வரத்தான் தெரிஞ்சுது அது ஆமியின்ர ஒருமுகாம்.  நான் படுத்திருந்ததுக்கு இடக்கை பக்கமாய் ஐம்பது மீட்டர் தூரத்தில
ஒரு கிடுகால மேய்ஞ்ச கொட்டில் அது ஒரு சந்திப்பிடமாய் இருக்கவேணும் .நாலு ஐந்து பேராய் அங்க இடைக்கிடை வந்து போய்க்கொண்டிருந்தினம்.ஆமி உடுப்போடையும் சிவில் உடுப்போடையும். திடிரென ஐந்து பேர் என்னுடைய பத்தைக்கருகால வந்து சிவில் உடுப்போடை தாண்டிப்போய்ச்சினம் .அவை எங்கட தமிழில கதைச்சுக்கொண்டு போய்ச்சினம்.  அந்த கொட்டிலுக்கு போயிட்டு
அரை மணித்தியாலத்தில வெளியால வந்திச்சினம்.அதில ஒருத்தன்
வந்து என்ர பத்தைக்கு முன்னால நிற்க மற்றவங்கள் போயிட்டாங்கள் .  அவன் ஒரு மனித்தியாலத்திட்கு கிட்ட அதில நின்றான்.நான் அவன்ர
முகத்தை நல்லாய் பார்த்தேன்.ஒருக்கா இயக்கம் செல் அடிக்க பத்தைக்கு
முன்னால விழுந்து படுத்தான்.என்னை அவன் கண்டாலும் அதுக்க
இருந்து குண்டு அடிக்க ஏலாது.துவக்கு வழமை மாதிரி சேம்பரிலேயே இருந்தது.
எனது பத்தைக்கு அருகால இன்னும் நாலு பேர் வந்தாங்கள் .அவங்களின்  
தமிழை வைச்சு யார் என்று பார்த்தேன்.அது கருணான்ர ஆட்கள்
ஒருத்தனுக்கு ஒருகால் கட்டை அவன் ஜெயசுக்குறுவிக்குள்ள
நின்டவன். அவன் ஒரு மாஸ்டர்.ஒரு வயது போன ஐயாவை பின்னுக்கு
கைகட்டினபடி கொண்டுவந்தாங்கள் .எனக்கு முன்னால நின்றவன்
இவையைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருக்கோணும். டேய் கிழடு என்று அந்த ஐயாவை அதட்டினான்.விறகு வெட்டவந்தவர் பிடிச்சிட்டோம்
என்று இவனுக்கு சொன்னாங்கள்.எனக்கு முன்னால நின்றவன் அந்த ஐயாவின் முகத்தில் ஓங்கி குத்தினான்.இரத்தம் ஊற்றிற்று.அந்த
மாஸ்டர் தொடர்ந்து அடிக்கவிடயில்லை.அவங்கள் அந்த ஐயாவை ஒரு மெல்லிய மரம் ஒன்றோட கட்டிப்போட்டு சந்திப்புக்கு போயிட்டாங்கள். அரை மணித்தியாலத்தால வெளிய வந்தாங்கள் .அவங்களோட இன்னும்
இரண்டு ஆமி உத்தியோகத்தர்கள் வந்தாங்கள் .அந்த ஐயாவோட கதைக்கிறது பட்டும் படாமல் கேட்டுக்கொண்டிருந்தது.டேய் எங்கட ஆட்கள் கிளிநொச்சிக்குள்ள இருக்கிறாங்கள் அது தெரியுமாடா?இவன் கதைச்சது தெளிவாய் கேட்டுது.அந்த ஐயாவிற்கு ஐம்பது வயதுதான்
இருக்கும் ஆனால் ஏழ்மையால எழுவது வயது மதிப்பில் இருந்தார்.
ஒரு ஐந்து நிமிட விசாரனைக்குப்பிறகு வாயிட்குள்ள துவக்கு நுனியை வைச்சு சுட்டான்.மரத்தில கட்டினபடி தலை தொங்கிச்சுது.பிறகு எல்லோரும் கலைஞ்சிட்டாங்கள்.
அந்த மாஸ்டர்  இரணைப்பாலையில புலிகளின்ர கட்டுப்பாட்டு பிரதேசத்திட்குள்ள ஊடுருவி இருக்கைக்க பிடிபட்டிட்டார்.அவருக்கு
ஒரு கால் கட்டை என்ர படியால ஒடேலாமல் போய்ச்சு.இன்னும் இரண்டு பேர் அவரோட நின்றவங்கள் அவங்கள் ஓடித்தப்பிட்டாங்கள்.        
                                 (3)

  நாங்கள் இப்ப ஒரு பள்ளிக்கூட கட்டிட வேலை செய்யிறம்.அந்த பள்ளிக்கூடத்திற்கு அவன் வந்தான்.அவன் sun glass அணிந்திருந்தான்.அவன் இப்ப ஈ பீ டி பி யின் பிரமுகர்.அவனோட
வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆள் ஒருத்தரும் வந்திருந்தவர்.அவர்
வெளி நாட்டில அரசாங்கத்திற்கு வேலை செய்யுற ஆளாய் இருக்கோணும்.இவையளோட முந்தி இயக்கத்திற்கு விசுவாசம் போல நடித்த இருவரையும் காணக்கூடியதாய் இருந்தது.இவன் அவன்தான்
மனசு மட்டும் திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டிருந்தது.

-       சுருதி  -



  






Share/Save/Bookmark

திங்கள், 15 அக்டோபர், 2012

மனிதன்

மனிதன் வாழும் காலத்தில்
அது இல்லை இது இல்லை
தேடி அலைகிறான்
சாகும் காலத்தில்
ஒ!இவ்வளவையும்
விட்டு போகிறேனே !
தேம்பி அழுகிறான் 



Share/Save/Bookmark

சனி, 13 அக்டோபர், 2012

உருவகக்கதை

அது ஒரு பெரிய குடும்பம்.அந்த குடும்ப நீட்சியில் பேரன் பேத்தி பூட்டன் பூட்டி தாய் தகப்பன் எல்லாருமே
உண்டு.அந்த பூர்வீகக் குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியான போது
குடும்பத்தை காக்க ஒருவனே அர்ப்பணிப்பாய் உழைத்தான்.அவனுக்கு
குடும்பத்தின் தாய் முழு ஆதரவு கொடுத்தாள்.  இன்னும் சிலரும் சேர்ந்து
உழைத்தனர்.இன்னும் சிலர் எதிரியோடு இணைந்து செயட்ப்பட்டனர்.
அந்த ஒருவன் இறுதிவரை உழைத்தான்.குடும்பத்தின் பெருமையை
உலகெங்கும் பரப்பிவிட்டு ,உலக வஞ்சனைக்கு எதிரான சமரில்
நிரந்தரமாய் கண்மூடினான்.



Share/Save/Bookmark

வியாழன், 4 அக்டோபர், 2012

போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?




இறைக்க இறைக்க 
கிணற்றில் மட்டுமல்ல 
கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று
துயரப்பெருங்கடலில் 
அலைகளாய் 
உடல்களற்ற தலைகள் எழுந்தன 
உறைந்த குருதியை 
மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?
நவீன உலகம் 
புலியை கொல்ல காட்டை எரித்தது 
அதனால்  அனைத்தும் எரிந்தது 
 போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிரும் சிலிர்த்தது

உலகமயமாக்களில் கரைந்து,
காணாமல் போயிற்று 
எம் வாழும் சுதந்திரம் 




Share/Save/Bookmark

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வீரர்களுக்கு சோதனை அதிகம்

பேடி 
எப்போதும் 
அதிகம் கதைப்பான் 
வீரன் 
செயலில் கதைப்பான் 
பேடி 
தக்க தருணத்தில் 
ஒளிந்துகொள்வான் 
தன் உயிரைக்காக்க 
யாரையும் காட்டிக்கொடுப்பான் 

சுமை தூக்கையில்
வீரன் தோள்கொடுப்பான் 
தேவையெனில் 
உயிரையும் கொடுப்பான் 
வீரர்களுக்கு சோதனை அதிகம் 
பேடிகள் 
பச்சோந்திகளாய் வாழ்ந்துவிடுவர்    


Share/Save/Bookmark

சனி, 15 செப்டம்பர், 2012

கிளிநொச்சி நினைவுகள்


கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் 
வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் 
இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 
தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி 
உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் 
கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று 
இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில்  
போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் 
உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட்டார் சைக்கிளை 
நிறுத்தி உற்றுப்பார்த்தோம்.கிட்டத்தட்ட பாம்புகளும் குட்டிக்களுமாய் 
சுமார் இருபது இருந்திருக்கும்.உடல் புல்லரித்தது.   

ஒருநாள் முன்னிரவு எட்டு மணியிருக்கும் தமிழ்செல்வனின் 
பரவிப்பாஞ்சானில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த திலீபன் முகாமில்
முற்றத்தில் நாற்காலியில் இருந்து  கதைத்துக்கொண்டிருந்தோம்.
சிறிய ஜெனரேட்டர் போட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.
ஜெனரேட்டர் சத்தத்தையும் தாண்டி உஷ் என்ற சத்தம் வர வர கூடிக்கொண்டே 
வந்தது.ஒ ஒரு பெரிய நாகபாம்பு .தமிழ்செல்வன் தனது பிஸ்டலை 
உருவி சுட்டார்.வெடி பட்டது ஆனால் நாகம் சாகவில்லை.தமிழ்செல்வனின் 
பெடியங்களும் சுட்டார்கள்.இரண்டு மூன்று நிமிடங்களுக்குப்பின்தான்
நாகம் செத்தது.ஒன்பது அடி நீளம் வரும்.அப்ப கிளிநொச்சி முழுக்க ஒரே பாம்புதான்.    
  கிளிநொச்சியில் ஆங்காங்கே மிதிவெடிகளும் தமது 
வேலையைக்காட்டின.மிதிவெடிகளுக்காகவும் பாம்புகளுக்காகவும் 
கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனை இருபத்திநான்கு 
மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்தது.வேறு மருத்துவமனைகள் 
அப்போது கிளிநொச்சி நகரில் இயங்கவில்லை.மிதி வெடி வெடிக்கும் 
சத்தம் கேட்டால் யாரோ மக்கள் காலைக்கொடுத்துவிட்டார்கள் என்று 
அர்த்தம் .போராளிகளின் வாகனம் அந்த இடம் நோக்கி விரையும். 
 ஒருநாள் தமிழ்ச்செல்வன் ,கிளி father உடன் திலீபன் முகாமில் 
கதைத்துக்கொண்டிருந்தோம்.தமிழ்ச்செல்வனின் பெடியங்கள் 
சலசலப்புடன் ஓடினாங்கள் .தமிழ்ச்செல்வன் என்ன ?என்று வினவினார்.யாரோ 
வீடு திருத்த வந்த ஆள் பக்கத்தில இருந்த கால்வாயில(கிளிநொச்சி குளத்தில இருந்து வாற) இறங்கி 
குளிச்சிருக்கு முதலை பிடிச்சிட்டுது.  தமிழ்ச்செல்வன் : ஆளுக்கு பிரச்சனையோ?
பிரச்சனையில்லை தொடையிலதான் பிடி .தமிழ்ச்செல்வன் தன்ர வாகனத்தை 
கொண்டு போகச்சொன்னார். வலது தொடையில எலும்புதான் வெள்ளையாய் 
தெரிஞ்சுது.பொன்னம்பலத்தில சேர்த்தம்.அவருக்கு குருதிக்குழாய் 
மாற்று சத்திரசிகிச்சை செய்து கால் தப்பிட்டுது.தமிழ்ச்செல்வனின் 
பெடியங்கள் நாலு பேர் இரத்தம் கொடுத்தாங்கள்.நானும் கொடுத்தன். 
கிளிநொச்சி மக்களின் மீள்குடியேற்றம்,கிளிநொச்சி நகரின் 
திட்டமிடல் ஆகியவற்றில் எனக்கும் பங்கு தரப்பட்டிருந்தது.
அதனால் என் மோட்டார்சைக்கிள் ஒழுங்கை ஒழுங்கையாய் 
ஓடிச்சு.
அன்று 2008ஆம் ஆண்டின் இறுதிநாள் எனக்குரிய அனைத்தையும் 
பின் நகர்த்திவிட்டு டிப்போ சந்தி, காக்கா கடைச்சந்தி ,கரடிபோக் ,
பரந்தன் சந்தி என போய் மீண்டும் திரும்பி காக்கா கடைச்சந்திவரை 
வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விழுந்து கிடந்த தண்ணீர்த்தொட்டிக்கருகில்  
ஏக்கத்துடன் ஆளையாள் பார்த்தோம்.இனி நிற்பது உகந்தது அல்ல என்று 
என் பிரியமானவர்கள் ஆய்க்கினைப்படுத்தினார்கள்.எமது வாகனம் 
காக்கா கடைச்சந்தியால் வட்டக்கச்சி நோக்கி நகர்ந்தது.கிளிநொச்சி 
குளத்தருகில் பரவிப்பாஞ்சான் உள் வீதியைக்காண   தமிழ்ச்செல்வனின் 
ஞாபகம் நெஞ்சை அழுத்திற்று.    


-  நிரோன்-





Share/Save/Bookmark

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது?


அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு 
எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு 
பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் 
உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு 
எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் 
இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். 
தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து 
மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு 
வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்
விதைக்கப்பட்டது.தாய் அந்த சிறிய காணியில் மரக்கறி தோட்டம் செய்தாள். 
அவன் ஒரு பத்திரிகையில் செய்தி வழங்குனராய் இருந்தான்.அவனுக்கு 
சிறு தொகை ஊதியம் கிடைத்தது.அது குடும்பத்தை இழுக்க போதுமாயும்
இருந்தது.செய்தியாளராய் போர்ப்பிரதேசத்தில் கடமை செய்வது மிகக்கடினமானது.
சைக்கிளில்தான்  சென்று செய்தி சேகரிப்பான். குறிப்பிட்ட இடம் 
சென்று வோக்கியில் காரியாலயத்திற்கு  செய்தி அறிவிக்கப்படும்.கூட்டம் என்றால் புதுக்குடியிருப்புக்கு 
போகவேணும் மல்லாவி வந்து மாங்குளம் போய் ஒட்டிசுட்டான் போய் அங்க இருந்து 
புதுக்குடியிருப்பு போவான் சைக்கிளில்தான்.சிலநேரம் மாற்று வழிகளும் பாவித்திருக்கிறான்.
ஜெயசுக்குறு நேரம் கடினகாலம்.பட்டினி ஆரம்பிக்கைக்கேயே 
சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டம் ஆரம்பித்திட்டினம்.அதனால 
பட்டினியும் போசாக்கு குறைபாடும் வராமல் தவிர்க்கப்பட்டுவிட்டது.
எல்லா செய்திகளையும் அவன் உடனுக்குடன் வழங்கிவந்தான்.
சமாதானம் வந்தவுடன் கொஞ்சம் வசதிகள் கூடிட்டுது.மோட்டார் 
சைக்கிள் பாவனை வந்தது.அவன் தாயின் நகைகளை விற்று 
வெளிநாடுவந்தான்.மூன்று தடவையும் அவனது அகதி 
அந்தஸ்து கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இப்ப ஆறு வருசமாய் அவன் ஒளித்து வாழ்கிறான். தாயிற்கு 
இவனது உண்மை நிலை தெரியாது.
2008 ஆம் ஆண்டு நடமாடும் மருத்துவசேவையில தாயின் உடலில 
ஒரு புற்று நோய்க்கட்டி வளர்வதை அவர்கள் கண்டுபிடித்து   
உடனடியாய் ஒபரேசன் செய்யோணும் என்றிருக்கினம்.தாய் 
தொடுவிலும் மாட்டன் என்றிட்டா.மகன்ரை தொடர்பில்லை 
அவனிட்ட கேட்காமல் செய்ய மாட்டன் என்றிட்டா.ஆனால் 
அவையும் விடயில்லை.நாங்களும் உங்கட பிள்ளைகள் தானம்மா.
அன்றைக்கே அவை போகேக்க தாயையும் கூட்டிப்போய் 
கிளிநொச்சி பொன்னம்பலத்தில ஒபரேசன் செய்து மாற்றி 
அனுப்பிட்டினம்.தாய் பிறகு புது மாத்தளன் மட்டும்போய் 
வவுனியா முகாமுக்கு வந்திருந்தா.
தாய் வரயிக்க ஒரு படமும் கொண்டுவரயில்லை.
அண்ணனின்ர ஒருபடமும் இப்பயில்லை. அதோட 
அந்த காலத்தில ஒரு (ZONIKA )கமரா பத்தாயிரம் ரூபாயிட்கு வாங்கி 
வவுனியாவிற்கு போய் தொழில் செய்யிற ஒரு ஐயாவைக்கொண்டு 
கழுவி வைச்சிருந்த சுமார் நூறு அந்த நேரப்படங்கள் இல்லை.

சுமார் இரண்டு வருசமாய் ஒரு பெண்ணை விரும்பி 
கணவன் மனைவியாய் வாழுறான்.தாய் நினைச்சுக்கொண்டிருக்கிறா 
கல்யாணம் கட்டிட்டான் என்று.அவனும் நிறைய படங்கள் அனுப்பிட்டான்.
நேற்றும் தாய் கதைக்கைக்க அவனிட்டையும் அவன்ர மனிசியிட்டையும் 
சொன்னா எங்கட குடும்பத்திற்கு வாரிசுவேணும் என்று.எப்படி அவர்கள் 
பிள்ளை பெறுவது?தகப்பன்ர பெயரை எப்படி பதியிறது?  
போதாதிட்கு அவன்ர சித்தி ஒராள் போன கிழமை தாயிற்கு வந்த மாதிரியே 
புற்று நோய்க்கட்டிவந்து உரிய நேரம் கண்டுபிடிக்காமல் பெருத்து இறந்து 
போனா.அவவிற்கு காசு அனுப்பட்டாம்.தாயிற்கு தெரியுமோ?எவ்வளவு 
கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அரைவாசிக்காசுதான் கிடைக்குது என்று.  







Share/Save/Bookmark
Bookmark and Share