வியாழன், 25 ஏப்ரல், 2024
அன்று
கடன் பட்டார் நெஞ்சம் போல
கலங்கினான் இலங்கை வேந்தன்
இன்று
மரணச்சடங்குகளே
கடன் வாங்கி நடக்கிறது
சுய பொருளாதாரம்
கப்பலேறிவிட்டது
கப்பலே இலங்கை வேந்தனுடையதுதான்
சனி, 20 ஏப்ரல், 2024
நினைவுகளில் தொக்கி நிற்கும்
கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை
இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும்
சன்னங்கள் சுடும் காயங்களும்
ஆறுவதில்லை
பிறந்தோம் வளர்ந்தோம்
தாய்(மண்)மனம் அறிந்தோம்
இலகு வாழ்வு துறந்தோம்
இலக்கு வாழ்விற்காய்
நாலு பேர் சுமந்து போனார்கள்
சாம்பலாய் பூத்தது வாழ்வு
யாரோ ஒருவன் நினைவை சுமப்பான்
இதுதான் நியதி
வெள்ளி, 19 ஏப்ரல், 2024
பசேலென்று
குடைபோல் விரிந்திருந்த ஆலமரம்
விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது
வழிப்போக்கருக்கு ஓய்விடம்
சிறார்களுக்கு ஒரு சிறுவானம்
திடீரென சந்தையாகும் ஆலடி
சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம்
ஆச்சியும் அறிந்த இடம்
எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
காலையும் மாலையும் ஊர்சுற்றி
மதியம் இங்கு சந்திப்போம்
இன்று
பிரதேசபை தறித்துவிட்டது
வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும்
எங்களுக்குள்ளும்
ஊருக்கே இணைப்பாக இருந்தது
இன்றில்லை
நாளை
பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர்
பறவைகள்
தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன
ஞாயிறு, 14 ஏப்ரல், 2024
வெள்ளி, 12 ஏப்ரல், 2024
வேடர்கள் வருகிறார்கள்
வன அமைதியை கிழித்து செல்கிறது
ஒரு பறவையின் கூச்சல்
வேடர்கள் வருகிறார்கள்
வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது
பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது
தொங்குநாக்குகளுடன் நாய்கள்
அங்குமிங்கும் திரிகின்றன
நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை
இறைச்சியோடு வரும் வேடர்களை
வரவேற்கும் இருகால் உயிரினங்கள்
வேடரின் நாய்களை கவனிப்பதில்லை
வேடர்கள் வருகிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)