வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
மலேரியா அற்ற பிரதேசம்
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டம் உள்ளீடாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிற்குள் மலேரியா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்தது , 1998 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி ஒட்டுமொத்த இலங்கையின் மலேரியா நோயாளர்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தொகை அதில் எழுபது வீதமாக இருந்தது. சிறுவர்,கர்ப்பிணிகள் உள்ளீடாய் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வருடம் எமது பகுதிற்குள் இறந்திருந்தார்கள். அந்த நேரத்தில்த்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரியாக நான் பொறுப்பெடுத்தேன்.
அந்த நேரம் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளராக இருந்த DR சிவகுரு ஐயாவுடனான முதலாவது சந்திப்பு இப்போதும் நினைவிருக்கிறது. நான் கேட்டேன் எப்படி மலேரியா நோயினை எமது பிரதேசத்திலிருந்து இல்லாமல் ஆக்கலாம்? அவர் சொன்னார் " மலேரியாவை இந்த பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஆக்க முடியாது, உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த பிரதேசத்தில் இருந்து மலேரியாவை அகற்றமுடியாது என பிகடனப்படுத்தப்பட்டுள்ளது, முயற்சி செய்தால் கட்டுப்படுத்தலாம் ". நான் சந்திப்பை முடித்து நேரடியாக மலேரியா தடுப்பு காரியாலயம் சென்றேன். காரியாலய நிர்வாக கடமையாற்றிய எங்களின் சிவகுரு ஐயாவை சந்தித்தேன்.எமக்கு தேவையான ஆளணியில் பத்து வீதம் கூட இல்லை, பொருளாதார மருந்து தடை வேறு . இருப்பவர்களை நாளையே கூப்பிடுங்கள்.
ஐந்து வருடத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை மலேரியா அற்ற பிரதேசம் ஆக்கினோம். உண்மையில் இலங்கையில் முதலில் மலேரியாவை இல்லாமல் ஆக்கியது நாங்கள்தான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகே இலங்கை மலேரியா அற்ற நாடாகியது.
வெள்ளி, 26 டிசம்பர், 2025
நான் வாழ்ந்த சூழல் எனக்கு கலைத்துவமான பரிச்சியத்தை தந்தது உண்மைதான் இருந்தாலும் எழுபதுகளில் சுதந்திரன்
வாரப்பத்திரிகையின் தாக்கமும் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தையும் உருவாக்கியது.1977 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜகம் எனக்குள்ளும் தாக்கத்தை செலுத்தியது. அப்பொழுது "வேதனை சோதனை சாதனை" என்ற தலையங்கத்தில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன். அது பாடசாலையிலும் வெளியிலும் ஒரு சுற்றுவட்ட வாசிப்பிற்கு வரவேற்புடன் போய்வந்து. பின்பு இப்படி கட்டுரைகளை இடைக்கிடை எழுதுவது என்னை சமநிலைப்பத்தியது ஆனால் இவை அச்சாகியிருக்கவில்லை. என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. "ஓ எங்கள் அருணன் " என்ற கட்டுரை திலீபனுக்கு பிடித்திருந்தது.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025
ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.
1998 ஆம் ஆண்டு எமது பொறுப்பாளராகவும் இருந்த சு ப தமிழ்செல்வன் அவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.எமது மருத்துவ அணியினர் கிளிநொச்சி தென்னியன்குள காட்டுப்பகுதியில் அமைந்திருந்த மருத்துவமுகாமொன்றில் தம்பதியினரிற்கான சிறு வரவேற்பு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தோம். அந்த நிகழ்வில் சகோதர நண்பன் சத்தியா நாங்கள் தம்பதியினருக்கு வழங்கவிருந்த
வாழ்த்துமடலில் இருந்த கவிதையை தனக்கேயுரிய பாணியில் அமோக வரவேற்புடன் வாசித்தான்.கவிதையை வாசித்து முடித்தவுடன் என் அருகில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வன் நீங்கள்தான் இந்த கவிதையை எழுதியது என்று சிரித்தபடி சொன்னார்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எங்கள் தமிழ்செல்வன் எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்தார். அடுத்தநாள் ஈழநாதம் தினசரியில் மருத்துவப்பிரிவு சார்பாக எனது பாடல்வடிவ துயர் கவிதை வெளிவந்தது. ஒரு படைப்பாளி மகிழ்விற்கும் துயருக்கும் எழுதவேண்டியிருக்கிறது.
பத்மலோஜினி அக்கா (Dr அன்ரி ) அவர்களுக்கு திருமணம் முற்றாகியதை அறிந்து அவருக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அந்த கவிதையை மதி அக்காவிற்கும் காட்டியதாய் மதி அக்கா பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொன்னார். முள்ளிவாய்க்காலில் நானும் பத்மலோஜினி அக்காவும் ஒன்றாக கடமையில் இருந்தோம் , அப்போது அக்கா சொன்னார் அந்தக்கவிதையை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்வளவு இடப்பெயர்வுகளுக்கு பிறகும் அக்கவிதையை பத்திரப்படுத்தியதாய் சொன்னது ஒரு படைப்பாளியாய் அந்நேரத்திலும் இனித்தது.
இப்பொழுதெல்லாம் ஒன்றாக வாழ்ந்தவர் பற்றி சிறுகுறிப்பாவது எழுத முனைந்தும் முடியாமல் எழுந்துபோவது வழக்கமாகி போயிற்று. ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.

ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025
சனி, 2 ஆகஸ்ட், 2025
திங்கள், 14 ஜூலை, 2025
போர்ச்சூழல் , அதற்குள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுவது மக்களின் சுகாதார போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நாளும் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொருநாள் வேலைத்திட்டங்களுக்கு பின்னும் புதுப்புதுச் செய்திகளை விழிப்புணர்வினை தாயக ஊடங்கங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த கடமையிற்கு சென்றேன். அந்தக்காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று எனது செய்தியாக்கம் தாயக ஊடங்கங்களில் நாளும் வந்துகொண்டிருந்தன.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
