சனி, 18 பிப்ரவரி, 2017

மனதில் கசியும் குருதித்துளியில்
உங்களோடு நானும்
நினைவுகள் உரசி எழும் ஆவியில்
கொதிக்கிறது ஆத்மா
கவிதையில் கரையா உரிமை
மிதக்கிறது வாழ்வில் 



Share/Save/Bookmark

வெள்ளி, 13 ஜனவரி, 2017

ஊருக்கு உணவுதரும் விவசாயி
தூக்கில்,
" பொங்கல் "புதுப்பட வெளியீடு
மக்கள் வானத்தில் ,
வெடியோசையில் மறைகிறது ஓலம் 

 சொந்த வீடு உயர்பாதுகாப்புவலயத்தில் 

பொங்குகிறது கண்ணீர் 

பொங்க வேண்டியவன் சிறைக்குள் 

பொங்கியும் தணியவில்லை நெஞ்சு 

பொங்க வசதியில்லை    

ஏக்கம் பொங்குகிறது பிஞ்சுகளில்  


விடுதலைக்காய் பொங்கியவர் வாழ்வில் 
மங்களம் போயிற்று  - அவர் கண்ணில் 
மங்கலாய்  தெரியும் பொங்கல் 

       பொங்குவதில் தவறில்லை

 "பொங்கல்" தமிழரின் திருநாள்

  நன்றிமறவாதவரின் பெருநாள் 




Share/Save/Bookmark

வியாழன், 12 ஜனவரி, 2017

வேண்டாதவை வருகின்றன போதைப்பொருள்களாய்

காணாமல்போனவர் தான்
வரவில்லை
அவர்பற்றிய செய்தியும் வரவில்லையே
வருவார் என்றால் எப்போது?
இல்லை என்றால் என்ன நடந்தது?
தாய் காத்திருந்தே இறந்துபோனாள்
மனைவி உருக்குலைந்துபோனாள்
பிள்ளைகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
புதுக்குடி சிங்களவருக்கு
நாவற்குழியில் வீடுகள் வருகின்றன
யாரும் அழைக்காமலே
புத்தர் சிலைகள் முளைக்கின்றன
தமிழரை இலங்கையில் கரைக்கும்
அமிலம் வெல்லமென ஊற்றப்படுகிறது
தேவையானவை வரவில்லை
அரசியல் தீர்வு ,சிறைக்கைதிகள்
காணாமல் போனவர்
தேவையானவை வரவில்லை
வேண்டாதவை வருகின்றன  
போதைப்பொருள்களாய்      



Share/Save/Bookmark

புதன், 11 ஜனவரி, 2017

என்றோவொருநாள்

நடக்கிறேன்
பின்நோக்கியல்ல
நினைக்கிறேன்
பின்நோக்கியேதான்
ஏன்?
ஆயிரம் கனவுகள் எரிந்துபோயின
வாழ்வே
புதியதேசத்திற்காய் ஒப்புக்கொடுத்திருந்தும்
கண்ணுக்குமுன்னால் யாவும் சாம்பலாயிற்று
தேசத்திட்டம் நீள்தூரம் சென்றிருந்தும்
அத்திவாரம் சிதைக்கப்பட்டது உலகத்தால்
எல்லாம் இழந்துபோனோம்
இருந்தும் வாழ்கிறது இலட்சியம்
இன்றில்லாவிட்டாலும் என்றோவொருநாள்
தாகம் தீரும் கருமேகம் விலகும்         



Share/Save/Bookmark

திங்கள், 9 ஜனவரி, 2017

நாங்கள் இருந்தும் இல்லை

தேசத்திற்காய்
பாசப்பாய்விரித்து
அதன்மீது குடியிருந்தோம்
வேஷம் யாரிடமுமில்லை
காசைப்பற்றி இம்மியும் கவலையில்லை
உயிர்கள் நேசமாய் கூடியிருந்தன
சந்தோசம் வாசமாய் பூத்துக்கிடந்தது
பார்க்கும் இடமெல்லாம்  

  
நேற்றுவந்த செய்தி
ஏற்றுக்கொள்கிறேன்
இளம் விதவையின் மறுமணம்
ஏற்றுக்கொள்கிறேன்
குழந்தையை நினைக்க
என் இதயம் ஓடித்திரிகிறது
நிம்மதி இழந்து
அவன் இல்லை
அவள் இனி இல்லை
நாங்கள் இருந்தும் இல்லை
குழந்தையை நினைக்க
என் இதயம் ஓடித்திரிகிறது
பற்களுக்கிடையிலும் 



Share/Save/Bookmark

சனி, 7 ஜனவரி, 2017

நண்பர்களே! போய்வாருங்கள்

சரணடைந்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள்
காணாமல் போனார்கள்
யாரை நம்பிப்போனோம்?
இராணுவ அறிவும் அனுபவமும்
ஏன் கைகொடுக்கவில்லை
எங்கே ? எதிர்பார்த்த இறுதிச்சண்டை
குழம்பிப்போகிறேன்  
வீரரின் இறுதிமணித்துளிகள்
வீணாகிப்போனதா?
நண்பர்களே! கண்மூடமுன் என்னநினைத்தீர்?
கண்ணீர் உருள்கிறது கண்களிலிருந்து,
போய்வாருங்கள் 

தாய்மண் உங்கள் நினைவுகளை சுமக்கும் 
நாளையசந்ததி உம்கனவுகளை சுமக்கும்


Share/Save/Bookmark

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வலியையே நானறிவேன்

தலைவனின் தனிப்பட்ட மருத்துவனாய்,
தலைவனின் குடும்பமருத்துவனாய் ,
கரும்புலிகளின் மருத்துவனாய் ,
போராட்டசுமையை  
தோள்களில் மட்டுமல்ல
இதயத்தாலும் சுமந்தேன்  
உயிரை தேசத்திற்காகவே சுமந்தேன்
வழி மாறியது எப்படி? நானறியேன்
வலியையே நானறிவேன்
  

ஒரு கூட்டின் உறவுகளே, 

அழுவதற்கான நேரமல்ல 

தொழுகிறேன் 

கடல் துயரில் மூழ்கினும் 

உம் நினைவுகளுடனேயே வேகுவேன்



Share/Save/Bookmark
Bookmark and Share