செவ்வாய், 7 ஜூன், 2022
செவ்வாய், 15 மார்ச், 2022
என் சித்தி
எனது அம்மாவிற்கு இரண்டு தங்கைகள், அதில் இரண்டாவது தங்கையை பற்றித்தான் இன்று எழுதுகிறேன்.
எனது சித்தி எங்களை கண்டிப்புடன் வழிப்படுத்தினார். எங்கள் முன்னேற்றத்தில் சித்தியின் பங்கும் இருக்கிறது. மாலை ஆறு மணி என்றால் புத்தகத்துடன் மேசையில் இருக்கோணும், எட்டு மணி வரை படிக்கோணும். சித்தியும் அதே மேசையில் இருந்து படித்துக்கொண்டு இருப்பார். நாங்கள் பாடசாலை வகுப்பில் முதலாம் பிள்ளையாய் வரும்போது அவவிடமிருந்து பரிசு கிடைக்கும். சித்தியிற்கு எஸ் எஸ் சியில் 16 பாடங்களில் திறமைச்சித்தி இருப்பதாக மாமாமார் கதைப்பார்கள். அம்மா சொல்லுறவ "சித்தி ஒரேதடவையில் எஸ் எஸ் சி பூர்த்தி செய்தவ " ஆனால் அவவிற்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவில்லை இரண்டு தடவையில எஸ் எஸ் சி பூர்த்தி செய்த அயலிலுள்ள பெண் ஒருவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்ததாய். சித்தி ஒவ்வொரு வருடமும் இரண்டு மூன்று புதிய பாடங்களை எஸ் எஸ் சி பரீட்சையிற்கு போட்டு திறமைசித்திகள் எடுப்பா. அவவிற்கு வழமையான பாடங்களைவிடவும் தட்டெழுத்து சுருக்கெழுத்து, ரேடியோ மெக்கானிசம், விவசாயம், தையல், சமையல் என்று திறமைசித்திகள் வைத்திருந்தா. முன்பள்ளி கற்கையில் பட்டயகற்கையை நிறைவுசெய்து முன்பள்ளி ஆசிரியராயும் உரிமையாளராயும் இருந்தார். பெரிய வகுப்புகளில் கல்விகற்பவர்களுக்கு தனியார் கல்வி ஆசிரியராகவும் இருந்தார். அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடந்த சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர். சித்தி வயலின் வாத்தியத்தை முறையாக கற்றிருந்தாலும் வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சையில் ஆறாம் (ஆசிரியர் தரம்) தரத்தில் செய்முறை பரீட்சையை சித்தியடையவில்லை என்பது எங்களுக்கு அப்போது ஒரு அபூர்வமாகவே இருந்தது.
நான் எனது வாழ்நாளில் பல ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன் அதில் பலர் என் சித்தியின் திறமை, தகுதிகளைவிட குறைந்தவர்கள். ஒவ்வொரு தடவையும் இந்த ஆசிரியர்களை பார்க்கும்போது என் சித்தி ஞாபகத்தில் வந்துபோவார்.
எனக்கு எப்போதும் ஒரு கேள்வி இருக்கும் ஏன் என் சித்தி உயர்தரம் படித்து பல்கலைக்கழகம் போகவில்லை ? அம்மா சொல்லுவா " வழமையா அந்தக்காலத்தில எஸ் எஸ் சி இருந்தால் வேலை கிடைக்கும் அப்ப பலர் தொடர்ந்து படிக்கிறதில்லை. சித்தி திருமணம் முடித்து தெல்லிப்பழையிற்கு போய்விட்டா, அதற்கு பிறகு வேலையிற்கு விண்ணப்பித்திருக்கமாட்டார்.
சித்தியிற்கு அஸ்த்மா நோயிருந்தது. நோயின் தீவிரத்தில் மருத்துவமனை செல்லும்வழியில் எங்களை பிரிந்துவிட்டார். இறுதி நிகழ்வில்கூட பங்குபற்றாதது இன்றுவரை எனக்கு கவலைதான்.சித்தியிற்கு மூன்று பெண் பிள்ளைகள், சித்தி எங்களை பிரியும்போது ஒருவரும் திருமணம் கூட செய்யவில்லை. இன்று பிள்ளைகள் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள், சித்தியிற்கு ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். சித்தப்பா அண்மையில் எங்களை பிரிந்துவிட்டார்.
என் சித்தி
புதன், 23 பிப்ரவரி, 2022
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022
புதன், 5 ஜனவரி, 2022
வருடம் போகிறது வருகிறது
ஒரு டசின் வருடங்களாய் தினக்குறிப்பு எழுதவில்லை
அந்த அழகான கையெழுத்துக்களுடன்
தினக்குறிப்பு ஏடு கிடைப்பதில்லையே!
கனவுகளுடன் விதைக்கப்பட்டவர் நினைவில்
நாளும் பொழுதும் கழிகிறது
எதிர்பார்ப்புகள் இல்லா எஞ்சிய வாழ்விலும்
கொள்கையில் சமரசங்கள் இல்லை
தாயகத்தில் மரம் நிறை பறவைகளில் ஒன்றாய்
களித்திருந்த நாட்கள் போய்
அந்நியதேசத்தில் தனி(வி)த்து வேகும் விதியை
ஒருபோதுமே நினைத்திருக்கவில்லையே !
செவ்வாய், 26 அக்டோபர், 2021
1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவிதமாக இரத்தவங்கியில் அப்பாவை சந்தித்தேன். அப்பா இரத்தம் வழங்கிவிட்டு அமர்ந்திருந்தார். நானும் இரத்ததானம் வழங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். நான் இரத்தம் கொடுத்துவிட்டுவரும்வரை எனக்காக காத்திருந்தார். வைகாசி 2009 வரை இருபத்தியாறு தடவைகள் இரத்ததானம் வழங்கியிருந்தேன். எனக்கு முன்பு மலேரியா காய்ச்சல் வந்தது என்ற காரணத்தால் நான் தற்போது வசிக்கும் இந்த நாட்டில் எனக்கு இரத்ததானம் வழங்க அனுமதியில்லை. இரத்தத்திற்கு மாற்றீடு எதுவும் இல்லை, இரத்ததானம் செய்வதில் நன்மைகளே அதிகம், தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்றும் சொல்லப்படுகிறது .
திங்கள், 25 அக்டோபர், 2021
என் குடும்பப்பின்னனி விவசாயத்தோடு ஒன்றியது. எனது தந்தை, தாய் வழிப்பேரன்கள் விவசாயிகளாகவும் இருந்தாலும் இவர்கள் இருவரின் விவசாயமும் வேறுபட்டது. தாய்வழிப்பேரனின் பிரதான விவசாயம் நெல் விதைப்பு. தந்தைவழிப்பேரனின் பிரதான விவசாயம் மிளகாய், வெங்காயம், புகையிலை. எனது தந்தையார் இவற்றிலிருந்து வேறுபட்டு மலைநாட்டில் வற்றாளைக்கிழங்கு,கோவா, கரும்பு மாங்குளத்தில் உளுந்து, பயறு, எள்ளு, கௌப்பி என அவரது விவசாயம் மாறுபட்டிருந்தது. எனது இளைய தம்பி கொய்யா கொடித்தோடை மா பப்பாசியென நல் இனக்கன்றுகளை உருவாக்கி மக்களுக்கு சென்றடைவதை தொழிலாக கொண்டிருந்தான். எனக்கும் விவசாயத்தில் நாட்டம் இருந்தது ஆனால் அது கைகூடவில்லை. எனது பிள்ளைகளுக்கு விவசாயத்தில் நாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை, இது கவலை தருகிறது. எனது தாய் நிலம் எவ்வளவு வளமானது. எனது சகாக்களுக்கு தம் தேசம்மீது எவ்வளவு கனவு இருந்தது. உலகில் நூறுகோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன, இது எவ்வளவு கொடுமையானது.

