|
செவ்வாய், 24 டிசம்பர், 2024
நான் அழ விரும்பவில்லை
தானாக வருகிறது அழுகை
சிவப்பு கம்பள வரவேற்பில்லை
இருந்தாலும்
கரைந்து போகிறது துயர்
கருமுகில்கள் கலைந்துபோகின்றன
வழிப்போக்கனின் கனவில்
சடைத்த மரங்களே இருக்கிறது
தரைக்கீழ் நீரோ வேர்களோ இல்லை
திங்கள், 23 டிசம்பர், 2024
கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு
அருகில் ஒரு சிறு கட்டற்ற கிணறு
50 குடும்பங்கள் நேற்று இங்கு இருந்திருக்கும்
அழைப்பிற்காய் காத்திருக்கிறேன்
சுதர்சன்
ஆள் அரவத்திற்கு காது கொடுக்கிறான்
வீரனொருவன்
குழந்தையை கொஞ்சி மனைவியிடம் கொடுத்தனுப்பிவிட்டு
தோள் சுமக்க திரும்புகிறான்
வீரனின் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது
சுதர்சனின் கண்களிலும் கண்ணீர் நிரம்புகிறது
எங்களிடம்
field compressor வாங்கிப்போகிறா ஜனனி அக்கா
சன்னங்களின் பாடலுக்கு குறைவில்லை
பயம் இல்லை பசியிருக்கிறது
கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு

கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு
வெள்ளி, 20 டிசம்பர், 2024
திரும்பிப்பார்க்கிறேன்
எமது வன்னிப்பிரதேசத்தில் யுத்தகாலத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவசுகாதார பணியும் மக்களுக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இயங்கிய நடமாடும் மருத்துவசேவை , சுகாதார நிலையங்கள் இடர் தீர்க்க உதவின.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் பணிபுரிந்த community health worker (CHW ) ற்குரிய சேவைக்கால பயிற்சிகளை நானும் மருத்துவர் ஜெயகுலராஜா ஐயாவும் மூத்த பொது சுகாதார பரிசோதகர் குணரட்ணம் ஐயாவும் வழங்கி அவர்களுக்கான தர உயர்வு வாய்மொழி பரீட்சையை (1999 ஆம் ஆண்டு ) ஆணைவிழுந்தானில் இயங்கிய தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தினோம்.
சமாதான காலத்தில் community health worker களுக்கு ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி அதில் சித்தியடைந்தவர்களுக்கு community health promoter என்ற உயர்வு வழங்கப்பட்டது. இதில் நண்பன் சிவமனோகரனின் பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
என்னைப்பொறுத்தவரையில் எவ்வளவு மருத்துவ சுகாதார அறிவுள்ளவர்களை எங்கெங்கு உருவாக்க முடியுமோ அதை செய்வதே எனது நோக்காக இருந்தது.

திரும்பிப்பார்க்கிறேன்
திரும்பிப்பார்க்கிறேன்
மாத்தையா என்றும் சங்கேத மொழியில் மைக் அல்fவா என்றும் அழைக்கப்பட்டவர். இவருக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கமாக இருந்ததில்லை , தொண்ணூறுகளில் எங்களது பொறுப்பாகவும் இருந்தார்,அவரது பொதுச்சந்திப்புகளில் சந்தித்து இருந்தாலும் ஒருமுறை கூட மனம் விட்டு கதைத்ததில்லை . எண்பத்தியேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய நேரம் , யாழில் குளப்பிட்டி சந்திக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடைப்பட்ட பாதையில் மாத்தையா அண்ணை நின்று தாக்குதலுக்கான கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.நான் இன்னுமொரு போராளியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் கேட்டதின் பேரில் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுபோய் அவர் சொன்ன இடத்தில விட்டேன், போகும் போதும் அவர் ஏதும் கதைக்கவில்லை, என்னை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அது ஒரு பதற்றமான சூழலும்தான்.
கொக்குவிலில் இருந்த முகாம் ஒன்றில் தனி சந்திப்பை முடித்துவிட்டு அண்ணையுடன் வெளியில் வந்தேன். அண்ணை சந்திப்பு கொட்டிலை நோக்கிப்போனார். சந்திப்பு கொட்டிலிலிருந்து மாத்தையா அண்ணை வெளியில் வந்தார் , என்னைக்கண்டவுடன் அவரின் முகம் மாறியதை அவதானித்தேன். பின் அவர் அண்ணையுடன் கொட்டிலுக்குள் போய்விட்டார்.
தொண்ணூற்றியோராம் ஆண்டு ஆனையிறவு சண்டை நேரம் நான் மருதங்கேணியில் எனக்குரிய கள மருத்துவக்குழுவுடன் நின்றிருந்தேன். சண்டைக்களத்திலுள்ள கள மருத்துவக்குழுவின் மருத்துவர் காயமடைந்து பின் அதை பிரதி செய்த மருத்துவரும் காயமடைந்துவிட்டார். நான் எனது மருத்துவக்குழுவில் இருந்த மூத்த மருத்துவப்போராளியிடம் எனது அணியை வழிநடாத்த சொல்லிவிட்டு அதை மேலிடத்திற்கு அறிவித்துவிட்டு ஒரு மருத்துவப்போராளியையும் அழைத்துக்கொண்டு நேரடி களத்திலுள்ள கள மருத்துவக்குழுவை நோக்கி செல்வீச்சுகளுக்கிடையில் போய்க்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தூரம் சென்றுகொண்டிருந்தபோது மாத்தையா அண்ணையின் அறிவிப்பு வந்தது " அங்கு போவது பாதுகாப்பு இல்லை,நின்ற இடத்திற்கே திரும்பவும்" .
மாத்தையா அண்ணையிற்கு கீழிருந்த தாக்குதல் அணி பப்பா அல்fவா என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்டது. அந்த அணியிலிருந்த பலர் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். மாத்தையா
அண்ணையுடனான எனது இறுதி சந்திப்பை நான் எழுதப்போவதில்லை.

திரும்பிப்பார்க்கிறேன்
சனி, 7 டிசம்பர், 2024
வியாழன், 5 டிசம்பர், 2024
எனது " கண்ணீர்த்துளிகள்" என்ற கவிதைத்தொகுதி சகோதர நண்பன் தமிழ்ச்செல்வன் அவர்களின் 45 வது நினைவுநாளில் 2007 ஆம் ஆண்டு மார்கழியில் வெளிவந்தது. சகோதரன் தனோஜன் இக்கவிதைகளை நூல்வடிவமாக்கினான். இக்கவிதைத்தொகுதி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சமர்பித்திருந்தேன் , அதில் " சகோதரா! உன் அருகில் ஒரு இடம் வை அருகில் வந்து உறங்குவதற்கு " என்றே எழுதியிருந்தேன். இன்று எங்கோ நிற்கிறேன் , மாவீரர்களுக்கும் எங்களுக்குமான தூரம் அருகிலில்லை, உயிரிழை அன்பில் மட்டும் இணைந்திருக்கிறேன்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2024
சனி, 2 நவம்பர், 2024
வெள்ளி, 1 நவம்பர், 2024
ஒரு சகோதர நண்பராகவும், எமது பொறுப்பாளராகவும் எங்களோடு ஒன்றி வாழ்ந்த தமிழ்ச்செல்வன்
ஒரு சகோதர நண்பராகவும், எமது பொறுப்பாளராகவும் எங்களோடு ஒன்றி வாழ்ந்த தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்து இன்றுடன் 17 வருடங்களாகிறது. அவர் எங்களை பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முந்திய நாளில் நான் அவரை இறுதியாக சந்தித்திருந்தேன்.இறுதி யுத்தம் ஆரம்பித்தபோது பூநகரி பிரதேசத்தின் பாதுகாப்பினையும் தமிழ்ச்செல்வன் அவர்களே பொறுப்பெடுத்திருந்தார். தமிழீழ சுகாதார சேவையினரான நாங்கள் சுட்டதீவு பகுதியில் காவல்க்கடமையையும் பூநகரிப்பிரதேசத்திற்குரிய களமருத்துவத்தையும் பொறுப்பெடுத்திருந்தோம். சுட்டதீவுப்பகுதியில்த்தான் இறுதியாக அவரை சந்தித்திருந்தேன்.அவர் ரேகா, மனோஜ் உள்ளிட்ட சிலருடன் அங்கு வந்திருந்தார். இறுதி சந்திப்பின் அத்தனை உரையாடல்களும் என் மனதில் அப்படியே இருக்கிறது. அவரது இழப்பு தாங்கமுடியாமல் உழன்று திரிந்த அந்தநாட்கள், அண்ணனின் கண்ணீரை பார்த்த அந்த கடின நொடிகள் யாவும் என்றும் எங்களோடு பயணிக்கும். சகோதரனின் நினைவுகளுடன் கைகூப்புகிறேன்.

ஒரு சகோதர நண்பராகவும், எமது பொறுப்பாளராகவும் எங்களோடு ஒன்றி வாழ்ந்த தமிழ்ச்செல்வன்
செவ்வாய், 29 அக்டோபர், 2024
ஆயுளின்
முற்றுப்புள்ளிக்கு முன்
மீள சந்திக்க விரும்பிய
பால்ய நண்பர்கள்
வாசிக்க விரும்பிய
பல புத்தகங்கள்
எழுத நினைத்தும்
எழுதாத கவிதை
என் சகாக்களின் வாரிசுகளை
பார்த்து மனம் நிறைய
தொட்டு ஒற்றிக்கொள்ள
அவர் பாதம் பட்ட மண்
வயல்களின் பசுமையில்
கண்கள் குளிர்ந்துபோக
கடற்கரையில் காற்று வாங்கி
கையசைத்துபோனவரை நினைந்து
ஒரு பறவையைப்போல
திசையறிமால் பறக்கிறது மனது

வெள்ளி, 25 அக்டோபர், 2024
திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
எங்களுக்கான யாழ் மாவட்ட கிறிக்கற் நடுவர் சங்கத்தின் கிறிக்கற் நடுவர்களுக்கான வகுப்புகள், பரீட்சை மற்றும் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை , செய்முறை பரீட்சை யாவும் யாழ் இந்துக்கல்லூரியில் வார இறுதி நாட்களில் நடைபெற்றது. எனது சக மாணவர்களாக அமரர்களான பத்மநாதன் ஐயா ( யாழ் பல்கலைக்கழக விளையாட்டு உத்தியோகத்தர்), சண்முகலிங்கம் அண்ணை ( இரும்பர்), றொகான் ராஜசிங்கம் ( விளையாட்டு உதவி கல்விப்பணிப்பாளர்) உள்ளிட்ட குறிப்பிட்ட பிரபலமானவர்கள் சிலர் இருந்தார்கள்.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை யாழ் ஸ்ரான்லி கல்லூரியில் நடைபெற்றது, ஆறு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம்.யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கப்டன் குணசிங்கம் இருந்தார்.
1995 ஆம் ஆண்டிற்கு பின் இவர்களது தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
2000 ஆண்டுகளின் சமாதானகாலத்தில் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான எழுத்துப் பரீட்சையை வவுனியாவிலும், செய்முறை பரீட்சையை கிளிநொச்சி சென் திரேசா பெண்கள் கல்லூரியிலும் எடுத்தோம், ஆறு அல்லது ஏழு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம். பரீட்சையை நடத்துவதற்காக விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவி உட்பட சிலர் கொழும்பில் இருந்து வந்திருந்தார்கள்.
சில விடயங்கள் நேற்றுப்போல் இருக்கும் ஆனால் உண்மை அப்படியல்ல. எனக்கு விருப்பமான தொழில் sports journalism .

திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)
வியாழன், 17 அக்டோபர், 2024
சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !
சகோதரனே!
அருகில்த்தானே இருந்தாய் எங்கு போனாய்?
பதினைந்து வருடமாயிற்று
மக்கள் நலனைவிட வேறு என்ன நீ அறிவாய்?
எதையும் காணாமல் போய்விட்டாய்
சிதறி உடைந்த கண்ணாடியில்
என் தாயகம் தெரிகிறது
செழித்து வளர்ந்திருக்கிறது
நெருஞ்சிமுட்கள்
நீ தப்பிவிட்டாய் !
சிறு வயது எண்ணங்கள்
இங்கு இறந்தவர்
வேறு உலகில்
ஒன்றாய் வாழ்வர்
அங்கு இறப்பவர்
இங்கு வருவர்
ஆத்மாவிற்கு
இறப்பில்லையெனில்

சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !
திங்கள், 14 அக்டோபர், 2024
உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு
நீ
ஏற்றுக்கொள்கிறாயோ இல்லையோ
எனக்கு இன மத வெறியில்லை
நீ கூட
எனக்கு நண்பனுமில்லை பகைவனுமில்லை
ஆனானும்
உன்னோடு என்வாழ்வும் சிலவேளை ஒத்துப்போகிறது
உன் தந்தை இறந்தபோது இறுதிநிகழ்விலும்
நீ பங்குபற்றமுடியவில்லை
உன் ஒன்றுவிட்ட சகோதரனையும் தோழமைகளையும்
அரச பயங்கரவாதத்திற்கு இழந்ததுபோல்
நானும்
என் சகோதரனையும் ஒன்றுவிட்ட சகோதரர்களையும்
தோழமைகளையும் களத்தில் இழந்தேன்
உன் வலி உனக்கு வலிமை தந்தது
நான் நூலகம் எரித்த சாம்பலிலிருந்து
வந்தவர்களிலொருவன்
வந்த வழி மறந்தவனில்லை
உன் எழுச்சி எனக்கு மகிழ்வுதான்
என் தேசத்தை அழித்தவர்களுள் நீயுமொருவன்
என்றபோதும்
உன் கொள்கை மாறா வாழ்வு என்னை ஈர்த்தது
உன் செயலால்
அழிக்கப்பட்ட என் தாயக அடையாளங்களை
மீளுருவாக்கம் செய்தபின்னாவது
வா! வாக்கு கேட்க
இப்போது போய்விடு
உன் தலைவனை கூட
என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு

உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு
சனி, 12 அக்டோபர், 2024
சனி, 31 ஆகஸ்ட், 2024
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024
வியாழன், 1 ஆகஸ்ட், 2024
நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமத்தில் ஒருவரிடமும்
மோட்டார்சைக்கிள் இருக்கவில்லை, வீட்டுக்கொரு சைக்கிள் இருந்தது. கிராமத்தில் ஒருவரிடம் கார் இருந்தது, அந்தக்காரினை மற்றையவர்கள் நல்லது கேட்டதிற்கு வாடகையிற்கு அமர்த்துவார்கள். அப்போதெல்லாம் அவச்சாவுகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
என் கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, தொலைகாட்சி பெட்டியில்லை ஆனாலும் கிராமம் வயல்களோடு செழித்திருந்தது. கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூகநிலையங்கள் எங்களை மகிழ்வூட்டின.ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு மாடு கோழிகள் இருந்தன. கிருமிநாசினி பாவிக்காத காய்கறிகள் , பழங்கள் இருந்தன. நாட்டுக்கோழிதான், புரொய்லர் கோழி இருக்கவில்லை. சலரோகம், பிரஷர் , கான்சர் கேள்விப்பட்டதில்லை.

புதன், 31 ஜூலை, 2024
திங்கள், 29 ஜூலை, 2024
நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை
26 .09 .2009 அன்று காலை நோர்வேயில் ஒரு அகதியாக வந்து இறங்கினேன். விமானநிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியில் வந்து தரிப்பிடத்தில் இருந்தேன். இன்று திலீபனின் நினைவுநாள் மதியம்வரையாவது எதுவும் சாப்பிடக்கூடாது என மனது சொல்லிக்கொண்டது. இலங்கையை விட்டு வெளிக்கிட முன் அப்பா அம்மா அம்மம்மாவையாவது ஒருமுறை பார்த்து வந்திருக்கலாம் என நினைத்தாலும் அடுத்தகணமே அது சாத்தியமில்லை , கையில் அடையாள அட்டை கூட இல்லாமல் அறவே சாத்தியமில்லை என்ற பதிலையும் சொல்லிக்கொண்டேன், இனி ஒரு போதும் அவர்களை சந்திக்கமுடியாமல் போகலாம். என்னோடு வாழ்ந்த பலரின் முகங்கள் எனக்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது, விரக்தியின் எல்லையில் இருந்தேன் இருந்தாலும் எதற்கும் தயாராக வேண்டும் என்ற பழக்கப்பட்ட மனநிலையும் என்னிடம் இருந்தது. இனி யாவும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், புதிய மொழியையும் அ, ஆவன்னாவிலிருந்து கற்கவேண்டும். அகதி அந்தஸ்து கிடைக்கவேண்டும். அந்த நாட்களை இப்போது நினைப்பது கூட கடினமாக இருக்கிறது.
எனது வாழ்நாளில் எனக்கு பலர் பல்வேறுவிதமான உதவிகளை நான் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றிக்கடனை இந்தப்பிறவியில் என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விடக்கூடும். நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை

நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை
ஞாயிறு, 14 ஜூலை, 2024
சனி, 6 ஜூலை, 2024
திரும்பிப்பார்க்கிறேன்
சாவகச்சேரி மருத்துவமனை பேசுபொருளாகிறது , மனது வலிக்கிறது.
1995 ஆம் ஆண்டு யாழ் வலிகாம பெரும் இடப்பெயர்வில் யாழ் மருத்துவமனை மந்திகை மருத்துவமனைக்கு இடம்மாற நானும் ஒரு சில மருத்துவர்களும் நூற்றுக்கணக்கான காயப்பட்ட நோயாளிகளுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு ஒரு இரவில் வந்து சேர்ந்தோம். நான் சத்திரசிகிச்சைப்பிரிவை பொறுப்பெடுத்து நடத்தினேன். சாவகச்சேரியே மக்களால் நிரம்பிவழிந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலம். நானும் எனக்குரிய அணியினரும் 24 மணிநேரமும் மருத்துவமனையிலேயே இருந்தோம்.மருத்துவமனையின் மற்றைய விடுதிகளில் பகல் நேரங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள், இரவுநேரங்களில் அத்தியாவசிய நோயாளிகளுக்கு நாங்களே உடன் சிகிச்சை வழங்கினோம் , இயன்றவரை சிறப்பான மக்கள் சேவை வழங்கினோம் .

திரும்பிப்பார்க்கிறேன்
நண்பா!
நினைத்திருக்கமாட்டோம்
ஒருபுள்ளியில் தொடங்கி
இரு வேறு திசையில்
இன்று
நீ எங்கோ நான் எங்கோ
உனக்கொரு உலகம்
எனக்கொரு உலகம்
அன்று
எம்வாழ்வு ஆலமரத்தின் கீழ் இருந்தது
இன்று(னு)ம்
உன்னை நினைக்கையில் நானும்
என்னை நினைக்கையில் நீயும்
சிலிர்த்துப்போகிறோம்
இடைவெளியில்லை
எனினும் தொடமுடியா தூரம்
விடைபெறும் காலம் நெருங்குகிறது
ஞாபகங்களுடன் முடியும் பயணம்

சனி, 22 ஜூன், 2024
அன்பு
அன்பு தொலைவதில்லை
அணிகலன் அணிவதில்லை
அது அதிசயம்
அடைபடா ஊற்று
அளவிடா ஆனந்தம்
அடைக்கலம் தரும் குடிசை
அரவமில்லா பிணைப்பு
ஆழமறியா கடல்
அர்த்தம் தரும் பிறவிப்பலன்

அன்பு
ஞாயிறு, 16 ஜூன், 2024
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தேர்ந்த நூல்களை சேகரித்தல்
தித்திப்பு
ஓய்வில் தேர்ந்து வாசித்தல்
தென்றல் முத்தமிடும் தருணங்கள்
அனுபவங்கள் தித்திப்பானவை
சேகரிப்புகளை இழத்தல்
கொடியது
உறவுகளை இழப்பதுபோல
மீண்டும் மீண்டும் இழத்தல்
இதயத்தில் குதியிருக்கும் ஆணிகள்
வசந்தத்தை இழந்தாலும்
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தூர தேசத்தில்
துக்கம் தீரா கவலை
துருத்திக்கொண்டிருக்கிறது
தோளில் தூக்கி போகமுடியா கடமை
எந்தப்பணியும் செய்யா பிணி
என்னைத்தொடர்கிறது

மீண்டும் தொடங்கும் மிடுக்கு
வெள்ளி, 31 மே, 2024
புதன், 29 மே, 2024
ஞாயிறு, 26 மே, 2024
சிலந்திவலையில் சிக்கியது மனம்
நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு
கைவிடப்பட்டிருக்கிறது
பாழடைந்துவிட்டது
சிலந்திவலையில் சிக்கியது மனம்
மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில்
பல்லிகள் சொல்லும் சத்தம்
வளவின் ஒவ்வொரு சாணிலும்
நினைவுகள் சிந்தியிருக்கின்றன
நடைபாதையில் வடலிகள்
பாசி படர்ந்திருக்கும் கிணற்றில்
பழைய மீன்களின் வழித்தோன்றல்கள்
சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள்
காணாமல் போயிருந்த காலத்திலும்
ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது

சிலந்திவலையில் சிக்கியது மனம்
வெள்ளி, 24 மே, 2024
திரும்பிப்பார்க்கிறேன்.
நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே?
அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .

ஞாயிறு, 19 மே, 2024
முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக்
கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.

சுதர்சனின் நினைவ
சுதர்சனின் நினைவு வருகையில் அதிலிருந்து மீளுவது எனக்கு இலகுவல்ல. அவனது திருமணத்திலும் அவனது தந்தை தாயாக நானும் எனது மனைவியும்தான் இருந்து நடத்தினோம்.
அன்றொருநாள் தமிழ்வாணனின் வித்துடல் கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைத்துவிட்டு எமது பணிமனைக்கு வந்தும் எதுவும் செய்யமுடியவில்லை . இரவு பத்து மணியளவில் நான் வெளிக்கிட்டேன் , துயிலுமில்லத்திற்கு போய் அந்த அமைதியான சூழலில் சில மணிநேரம் இருந்தால் மனம் ஒருமைப்படும் , சுதர்சனும் என்னோடு வந்தான் . அவன் துயிலுமில்லத்தில் குலுங்கி அழுத காட்சி இப்போதும் என்னை அழுத்துகிறது.சிரித்துக்கொண்டே திரிபவனின் அழுகை துயர் நிறைந்தது.

சுதர்சனின் நினைவ
நாங்கள் சாதாரணமானவர்
எங்கள் வாழ்வை நாங்களும்
உங்கள் வாழ்வில் நீங்களும்
மகிழ்வில் செழிப்பதே எம்மனது
ஒருவர் வாழ்விற்காய் அடுத்தவர்
நசுக்கப்படல் தர்மமில்லை
ஆதலால் உங்களை எதிர்த்தோம்
சந்ததி வாழ வேறு தேர்வு இல்லை
எதிரியோடு பொருதுவது கடினமில்லை
துரோகிகளை களைவது இலகுமில்லை
காலம்தான் பச்சோந்திகளை வெளிக்காட்டும்
சிலவேளை வெற்றி தோல்வி முடிந்திருக்கும்

சனி, 18 மே, 2024
May-18
முல்லைத்தீவில்
கம்பிவேலிக்குள் மக்கள்
சூழ இராணுவம்
அகோர வெயில்
குடிக்க நீர் கிடைக்கவில்லை
முதுகிலும் காலிலும் இருந்த எரிகாயங்கள்
வியர்வையில் மேலும் எரிந்தன
சரணடையுமாறு அறிவிப்புகள்
மனது
நேற்று இரவுச்சண்டையில்
அண்ணையை நகர்த்தியிருப்பர்
என்று நம்பியிருந்தது
ஒரு சடப்பொருளாக இருந்தேன்
யாரையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியவில்லை

May-18
வியாழன், 16 மே, 2024
May-17
இன்றைய நாளின் ஒவ்வொரு மணித்துளியும்
ஒவ்வொரு நாளாய் இருந்தன
பதினைந்து வருடங்கள் கடந்தாலும்
அந்தநாள் வலி யாருக்கும் வரக்கூடாது
நேற்றுவரை முடிபுகள் இருந்தன
இன்று என்னவாயிற்று ?
யாராவது ஒழுங்கமைப்பார்களா?
அடுத்த நாள் நிச்சயமில்லை
சா பயம் துளியுமில்லை
இனி யாரையும் காணப்போவதுமில்லை
பழைய திட்டம் மட்டும் மனதில்
வேறு எதுவுமில்லை
கூப்பிடு தூரத்தில் எதிரி
யாரிடமும் விடை பெறமுடியவில்லை
அந்தரத்தில் நகர்ந்தேன்
இன்னும் நம்பமுடியவில்லை
என்ன நடந்தது?

May-17
சனி, 11 மே, 2024
போருக்கு பிந்திய காலம்
யார் யாரோடு என்று புரியவில்லை
முட்கம்பிகள் சிக்கிக்கிடக்கின்றன
முட்படுக்கையில் வாழ்வு
காணாமலான பட்டியலில்
புத்தபகவானே முதலிடம்
காவியுடையில் சாத்தான்கள்
சமாதானம் எட்டும் தூரத்திலில்லை
பாதாளத்தில் பொருளாதாரம்
பஜிரோவில் அதிகாரம்
மொய்க்கும் கொசுக்களாய் படையினர்
குடிசையில் பசியோடு குழந்தைகள்
வேர்களை பிடுங்கும் அரசு
உறங்குநிலை விதைகளை அறியுமா?
காலத்திடம் கேள்வி இருக்கும்
தகுந்த பதிலும் இருக்குமா?

திரும்பிப்பார்க்கிறேன்
நான் அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில்த்தான் செல்வது வழக்கம் , அன்று அவர்களுக்கு பயிற்சிநாள் இல்லை.
இங்கு பயிற்சி எடுப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அன்பாலும் கலகலப்பாலும் குறைந்தவர்கள் இல்லை. எனது மோட்டார் சைக்கிள் எப்போதும் தூசு படித்துதான் இருக்கும் ஆனால் இம்முகாமிலிருந்து நான் வெளிக்கிடும் போது கழுவி துடைக்கப்பட்டிருக்கும், உண்மையில் இது எனக்கு பிடிப்பதில்லை. நான் அங்கு சென்று எனது கடமைகளை முடித்தபின் முகாம் பொறுப்பாளர் வழமைபோல் சாப்பிடக்கூப்பிட்டார். நான் பொறுப்பாளரிடம் ஒரு போராளியை பற்றி வினாவி எங்கே அவர் எனக்கேட்டேன்.
பொறுப்பாளரும் நீங்கள் அவனை பார்க்கவில்லையா?
இல்லையே ,
அவனது குடும்பம் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறது. அவனின் தாயார் போன மாதம் இறந்து எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,இரண்டுநாளுக்கு முதல்த்தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது.
ஓ அப்படியா!
ஆனால் அவன் வழமைபோல பயிற்சி எடுக்கிறான், எப்பிடியென்றாலும் அவனுக்குள்ள சோகம் இருக்கு.
நான் வந்து சாப்பிடுகிறேன். அவன் தங்கும் கொட்டிலை கேட்டறிந்து அங்கு போனேன்.
அவனே வரவேற்றான் இருந்தாலும் அவன் மறைக்க முயலும் சோகம் வெளித்தெரிந்தது.
அம்மாவை நான் நாலு வருசமாய் பார்க்கவில்லை . எனக்கு முதல் அம்மாவிற்கு போயிருவாவென்று நான் நினைச்சிருக்கவில்லை. கதைக்கமுடியாமல் ததும்பியவன் தொடர்ந்து கதைத்தான். நான் சின்னனில சாப்பாட்டு பார்சலை எடுக்காமல் பெடியள் கூப்பிட அவங்களோட பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுடுவான். அம்மா சாப்பாட்டை கட்டிக்கொண்டு கலைச்சுக்கொண்டு ஓடிவருவா, ஒருநாள் இல்லை இப்பிடி பலநாள் , சாப்பாட்டை என்ர பாக்கில வைச்சிட்டு மூச்சு வாங்கியபடி நான் போறதையே பார்த்துக்கொண்டு நிற்பா. சிலநேரம் அவ நிற்கிற இடம் பள்ளிக்கூட வாசலாகவும் இருக்கும்.
அவனை தேற்ற கதைத்துக்கொண்டிருந்தேன். உங்களிட்ட அம்மாவின் படம் இருக்கா?
இல்லை என்றான்.
நான் உரியவர்களிடம் தெரியப்படுத்தினேன்.
நான் அடுத்த முறை அங்கு செல்கையில் அவனிடம் தாயின் படம் மட்டுமல்ல குடும்பப்படமும் இருந்தது.
இன்று அவர்கள் இல்லை.

திரும்பிப்பார்க்கிறேன்
வியாழன், 9 மே, 2024
செவ்வாய், 7 மே, 2024
சனி, 4 மே, 2024
நானும் வன்னியும் - சிலநினைவுகள்
எனக்கு இலக்கம் இருபத்தியாறு ஒரு பொருந்தா இலக்கம் போல் இருக்கிறது. கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் இணைப்பாளராக இருபத்தியாறு சேவைகளைத்தான் என்னால் நடாத்த முடிந்திருக்கிறது . இருபத்தியாறு தடவைகள்தான் என்னால் இரத்தம் வழங்கக்கூடியதாக இருந்திருக்கிறது.
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுகாதார நோய்த்தடுப்பு கடமைக்காக நான் சென்று வராத பாதைகள் ஒழுங்கைகள் இருக்கமுடியாது என நினைக்கிறேன்.
ஒரு சராசரி சத்திரசிகிச்சை மருத்துவர் தன் வாழ்நாளில் செய்கின்ற சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையைவிட நிச்சயமாக நான் அதிகம் செய்திருப்பேன்.என் சத்திரசிகிச்சைகளின் பெறுபேறுகளும் சிறந்தது என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியிருக்கிறது.

நானும் வன்னியும் - சிலநினைவுகள்
வெள்ளி, 3 மே, 2024
புதன், 1 மே, 2024
எங்கும் நீ இல்லை
எந்த விம்பங்களிலும் நீ இல்லை
தொட்டுப்போகும் காற்றில் நீ இருக்கிறாய்
சுவாசமாய் நீ இருக்கிறாய்
பறவைகளின் நளினத்தில் நிறைகிறது வயல்
சில பறவைகளில் பூக்கள் பூத்திருந்தன
இசையோடு பூத்திருந்த பூக்கள்
அசைந்ததில்
நான் வானத்தில் இருந்தேன்
ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பெயர்
வெவ்வேறு மொழியிலும்
பறவைகளின் உறவுகளாய்
சுமந்து திரியும் மாடுகளை
வியந்து பார்க்கிறேன்

முற்றத்தில்
சிறுகுருவிகளின் குலாம்
ஒரே அளவில்
ஒன்றையொன்று ஒத்திருந்தன
என் சிறியமகள் விளையாடிக்கொண்டிருந்தாள்
அப்பா!
எனக்கு ஒரு குருவி வேண்டும்
அவவின் அம்மாவிடம் கேட்போமா?
தலையாட்டினேன்
என் கைபிடித்து தத்தித்தத்தி நடந்துவந்தாள்
இடைநடுவில் நின்றாள்
களைத்துவிட்டீங்களோ?
இல்லை
அப்பா!
அம்மாக்குருவி
என்னை தன்னிடம் தருமாறு
உங்களிடம் கேட்குமா?
என் விடையறியாமலே
திரும்புவோம் என்றாள்
தூக்கச்சொன்னாள்
என் கழுத்தை கட்டிக்கொண்டாள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024
நீ அமைதியாய் இருக்கிறாய்
மனதிலோ எண்ண அலைகள்
உறங்கும்வரை சதா ஏதோ ஓடும்
யாருமறியார்
நீ தத்தி நடந்து
எழுந்து ஓடித்திருந்த முற்றத்தில்
உன் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருக்கிறது
பிறப்பும் இறப்பும் எங்கோ எழுதப்பட்டன
அடுத்த ஐம்பது வருட இடைவெளிக்குள்
நீ வாழ்ந்த தடங்கள் மறைந்துவிடும்
இன்றும் நீ நிம்மதியாய் இல்லை
ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறாய்
அல்லது
ஏதோ பிரச்சனை உனை குடைந்துகொண்டிருக்கிறது

வியாழன், 25 ஏப்ரல், 2024
சனி, 20 ஏப்ரல், 2024
நினைவுகளில் தொக்கி நிற்கும்
கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை
இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும்
சன்னங்கள் சுடும் காயங்களும்
ஆறுவதில்லை
பிறந்தோம் வளர்ந்தோம்
தாய்(மண்)மனம் அறிந்தோம்
இலகு வாழ்வு துறந்தோம்
இலக்கு வாழ்விற்காய்
நாலு பேர் சுமந்து போனார்கள்
சாம்பலாய் பூத்தது வாழ்வு
யாரோ ஒருவன் நினைவை சுமப்பான்
இதுதான் நியதி

வெள்ளி, 19 ஏப்ரல், 2024
பசேலென்று
குடைபோல் விரிந்திருந்த ஆலமரம்
விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது
வழிப்போக்கருக்கு ஓய்விடம்
சிறார்களுக்கு ஒரு சிறுவானம்
திடீரென சந்தையாகும் ஆலடி
சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம்
ஆச்சியும் அறிந்த இடம்
எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
காலையும் மாலையும் ஊர்சுற்றி
மதியம் இங்கு சந்திப்போம்
இன்று
பிரதேசபை தறித்துவிட்டது
வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும்
எங்களுக்குள்ளும்
ஊருக்கே இணைப்பாக இருந்தது
இன்றில்லை
நாளை
பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர்
பறவைகள்
தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024
வெள்ளி, 12 ஏப்ரல், 2024
வேடர்கள் வருகிறார்கள்
வன அமைதியை கிழித்து செல்கிறது
ஒரு பறவையின் கூச்சல்
வேடர்கள் வருகிறார்கள்
வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது
பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது
தொங்குநாக்குகளுடன் நாய்கள்
அங்குமிங்கும் திரிகின்றன
நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை
இறைச்சியோடு வரும் வேடர்களை
வரவேற்கும் இருகால் உயிரினங்கள்
வேடரின் நாய்களை கவனிப்பதில்லை

வேடர்கள் வருகிறார்கள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2024
வயலை தொடர்ந்திருந்தது
பற்றைக்காடு
சிறார் எங்களுக்கு
வயல் ஒரு உலகம்
அக்காடு பிறிதொரு உலகம்
வயலின் குளிர்மையில் ஒன்றாவோம்
காற்றில் சிலிர்ப்போம் மிதப்போம்
செம்பகம் மைனா கிளியென
பறவைகள் எமை பரவசப்படுத்தும்
முயல்களை துரத்துவோம்
பற்றைக்காட்டில்
பனை கொய்யா ஈச்சமரங்கள்
இன்னும் பல
அணில் உடும்பு என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிய பல காட்சிகள்
எதுவும் இன்றில்லை

சனி, 6 ஏப்ரல், 2024
காணாமல் போனவனின் தாய்
2008 ஆம் ஆண்டு காலம்
அவன்
தாயாருடன் மல்லாவியில் வசித்தவன்
வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை
உறவென்று ஒரு வளர்ப்புநாய்
குடிசை முன்குந்தில்த்தான்
அவன் உறங்குவான்
காலடியில் நாய் படுத்திருக்கும்
அவன் இல்லையெனில்
முற்றத்தில் விழித்திருக்கும்
இறுதி யுத்தத்தில்
மல்லாவி இடப்பெயர்வன்று
நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி
அங்கேயே இறந்து போயிற்று
2024 ஆம் ஆண்டு காலம்
அன்று தொட்டு இன்றுவரை
மகனை தேடி வவுனியா சென்று
கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை
அழுவதற்கு கண்ணீர் இல்லை
நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று
மூச்சிழந்து வீழ்ந்தாள்
காணாமல் போனவனின் தாய்
அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின்
அதன் வேதனையை யார் அறிவார்?
அழும் குரலின் கேரலை
கேட்டிருக்கிறாயா?
துயர்ப்பாடலில்
நடுங்குகிறது சுற்றம்
தாயே !
இனி உனக்கு சோகம் இல்லை
நீதியோடு உன் உடலும் எரியட்டும்

காணாமல் போனவனின் தாய்
வியாழன், 4 ஏப்ரல், 2024
வாழ்க்கையில் கணம் இல்லை
யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார்
இன்று அப்படியல்ல
இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில்
ஒற்றைக்கையை வைத்து
உன்னை அடையாளம் கண்டேன்
பசித்த வயிறுக்கு
சோறு போட்ட கையம்மா
சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய்
அன்பை பரிசளித்தார் கடவுள்
சாகாவரம்
இளமையில் இனிப்பாகவும்
முதுமையில் தனிமையில் கசப்பாகவும்

புதன், 3 ஏப்ரல், 2024
சனி, 30 மார்ச், 2024
வெள்ளி, 29 மார்ச், 2024
ஒளியும் இருளும் குழைந்திருந்த
மாலைப்பொழுதில்
பறவைகளின் வரிசை
குலையாதிருந்தது
குருதி உண்ணும் நுளம்புகளை போல
மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன
மின்மினி வெளிச்சத்தில்
சட்டென உயிர்கள் பிரிந்தன
முடிந்த நாட்களைப்போல
போன உயிர்களும் மீளவருவதில்லை
உயிர்த்தானம் கொடுக்க
வரிசைகுலையா அவதானம் தேவை
குழந்தையொன்று
பொத்து பொத்தென நடந்து வரும்
சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது
புதிய எதிர்பார்ப்புகளோடு

முள்ளிவாய்க்கால் இறுதிநாள்
இளைய போராளிதான் நீ
அரச கட்டுப்பாட்டுக்குள்
யாவும் அடங்கிக்கொண்டிருந்தது
கைக்குழந்தையை
இருகைகளால் தூக்கி முத்தமிட்டு
மனைவியுடன் அனுப்பிவிட்டு
போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய்
அவர்கள் போய்முடியும்வரை
தோளில் இருந்த துப்பாக்கியை
கைகளில் மாற்றியபடி
ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய்
ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம்
பிரிந்து நீ போனாய்
சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய்
நான் உனைப்பார்க்க
நீ கையசைத்துவிட்டு போனாய்
பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை

வியாழன், 28 மார்ச், 2024
சனி, 23 மார்ச், 2024
காலை விடிகிறது
அம்மா
அன்பிலான அழகான கவிதை
ஆண்டவன் எழுதியது
கவிஞனின் குழந்தை கவிதையா ?
வறுமையா?
பட்டிமன்றில் கவிஞன்
காலை விடிகிறது
மொட்டு பூவாக மலர்கிறது
இலைமீது பனித்துளி முகப்பரு போல
சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட
மனதில் கோலம் படிகிறது
நீலக்கடல் வானில் ஏறுகிறது
கடலலைகளில்
மனம் ஏறி இறங்குகிறது
கைவிடப்பட்ட ஒற்றைப்படகில்
என் இதயம் இருக்கிறது

காலை விடிகிறது
வியாழன், 21 மார்ச், 2024
உங்கள் நண்பனல்ல
எந்த இலட்சியத்திற்காய்
உங்களை தந்தீர்களோ
அந்த இலட்சியத்திற்கு
மாறாய் போபவன்
உங்கள் நண்பனல்ல
விலைபோகமுடியாதவனே போராளி
கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்

உங்கள் நண்பனல்ல
ஞாயிறு, 17 மார்ச், 2024
அவன்
என்னோடு பள்ளியில் படித்தவன்
வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான்
ஒரே அடிவாங்குவான் அழுவான்
அடுத்தநாளும் அப்படித்தான்
வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான்
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான்
ஊரடங்கு நேரத்தினுள்
இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான்
அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது
பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ
அது தெரிந்திருக்கவில்லை
பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை
காலப்புண் ஆறுவதில்லை

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
நான் எழுதியதை நீயோ
நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை
நண்பா !
நீ புலம்பெயர முடிவெடுத்தாய்
புகையிரத நிலையம்வரை வந்தேன்
நாற்பது வருடங்கள்
நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும்
நான் குருதி தொட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறோம்
நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய்
வலியின் விசாலம் நீ அறியாய்
பல உயிருறவுகளை பறிகொடுத்தேன்
இனி புது உலகம் சாத்தியமில்லை
நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல
வேறுமல்ல

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல
திங்கள், 11 மார்ச், 2024
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
என் அனுபவங்கள் எனக்கானவை
அதேபோல் உங்களதும்
நெருப்பு மழைக்குள் இறங்கியும்
ஏதோ ஒரு கரை சேர்ந்தேன்
உள்காயங்களோடு
ஆற்றுப்படுத்த
இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன்
நினைவு சோரும்வரை
இழப்புகளின் வலி திணறி எழ
மூச்சுத்திணறி மீள்வேன்
யாருமறியாமல்
நாளையும் விடியுமா?
கசியா இரகசியமாய்
மூடியிருந்த வாழ்வு
எரிந்துபோகுமா?
இதயசிறகு படபடக்க
உயிர் காவுகிறேன்
வழிப்போக்கனாக
மலையடிவாரத்தில்
ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன்
வழிமாறிய குயிலொன்று
அதை பாடுகிறது
இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது
அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்
சனி, 2 மார்ச், 2024
புதன், 28 பிப்ரவரி, 2024
சனி, 24 பிப்ரவரி, 2024
சத்தமில்லாத யுத்தம்
இரத்தம் குடிப்பது யுத்தம்
அடக்குமுறையும் ஆணவமும்
யுத்தத்தின் விதை
சமநீதி இல்லா உலகில்
யுத்தம் தளைத்துவிடுகிறது
கல்வி செல்வம் வீரம்
யுத்தத்திலும் ஊட்டச்சத்து
யுத்தம் இல்லையெனில்
இன்று பலநாடுகள் இல்லை
சில இனங்கள் இருந்திருக்கும்
யுத்தமில்லா பூமி ஓர் கனவு
நீதி அரசாண்டால் அது நனவு
நவீன உலகில்
சமாதானம் ஒரு பொறி
சத்தமில்லாத யுத்தம்

சத்தமில்லாத யுத்தம்
வியாழன், 22 பிப்ரவரி, 2024
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன
எழுவானம் சிவந்து கொண்டிருந்தது
நீ கையசைத்துப்போனாய் - ஏதோ
சொல்லவந்தும் சொல்லாமல் போனாய்
நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை
இடைவெளி அகன்றுகொண்டிருந்தது
நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
மாலைநேரம்
கடலோரம் நின்றுகொண்டிருந்தேன்
கடல் அலைகளற்று இருந்தது
"நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது
அடிவானில் செவ்வானம் மறைந்தது
விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று
உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன்
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்

அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024
சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
வெள்ளி, 16 பிப்ரவரி, 2024
வியாழன், 15 பிப்ரவரி, 2024
நீண்ட கனவுக்குப்பின்னால்
எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை
பெருங்கனவு கனவானதும்
இழப்புகளின் ஊமைக்காயம்
இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது
உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு
மருந்தில்லை முடிவுமில்லை
பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன்
பனிப்படர்க்கையின் வெண்நிறம்
ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது
மூச்சு விடவும் ஆவிவருகிறது
யாவும் உறைந்திருக்க
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது
சொல்வழி கேளாதவன் போல
குருதிற்குள் வாழ்ந்த என்னிடம்
"குருதியின் நிறம் சிகப்பு" என
சொல்கிறான் ஒருவன்
ஓ! அப்படியா என நகர்கிறேன்
ஆச்சரியமாய் பார்க்கிறான்
இரக்கமற்றவன் என நினைக்கிறான்
பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில்
எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்

சனி, 10 பிப்ரவரி, 2024
பறவை ஒன்று பறந்துபோகிறது
கூடவே அதன் நிழலும்
என்னை கடந்து போகிறது
செய்தியொன்றை தந்துவிட்டு
வானில் சிறகடித்துபோகிறது
இருள் வருகிறது வீடு போ !
நாடு இல்லாதவனுக்கு ஏது வீடு?
மஞ்சள்ஒளி அந்திவானை தந்துவிட்டு
கடல் மீது குந்தியிருக்கிறது சூரியன்
எச்சினமும் மறைகிறது அவ்வழகில்
இக்கணம் தொடராதோ?
சூரியனையும் விழுங்குகிறது கடல்
துயரில் அமிழ்ந்து கண்களை திறக்க
நிலாவொளி ஆறுதல் தருகிறது
அதில் அம்மாவின் முகம் தெரிகிறது

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024
சனி, 3 பிப்ரவரி, 2024
இறுதி கையசைப்பின் நினைவ
பஞ்சனைக்குள் வாழ்ந்த நீ
நெருப்பாற்றுக்குள் போய் வந்தாய்
ஒவ்வொரு தடவையும் போய்
திகிலூட்டும் கதைகளோடு வந்தாய்
சிலதடவை விழுப்புண்ணோடும்
போனாய் வந்தாய்
கதைகளற்று
வானமே இடிந்து எம்மீது வீழ்ந்தது
இறுதி கையசைப்பின் நினைவு
அம்மாவிடம்
இன்னும் உயிரோடு இருக்கிறது
ஏதோ ஒரு செய்தியோடு

இறுதி கையசைப்பின் நினைவ
வெள்ளி, 2 பிப்ரவரி, 2024
கேட்டது குழந்தை
கொட்டும் மழை நீரை
சேமிக்க முடியவில்லை
கேட்டது குழந்தை
எப்படி என் தாகம் தீர்ப்பாய்?
உடல் உழைப்பில்லை
கண்டதெல்லாம் உண்று
நோய் இறக்குமதி
கேட்டது குழந்தை
எப்படி என்னைக்காப்பாய்?

கேட்டது குழந்தை
செவ்வாய், 30 ஜனவரி, 2024
மீளவும் வரப்போவதில்லை
புகைப்படம் பார்க்கிறேன்
கண்கள் அசைய மறுக்கிறது
நீ உயிராய் என் முன்
யாவும் காட்சியாய் விரிகிறது
கனதியான வாழ்வு மீளவருகிறது
ஆவலில் உற்றுப் பார்க்கிறேன்
நீயில்லை எதுவும் நிஜமில்லை
கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது
பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று
சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன்
அது உயர பறக்கையில் பாடலாகிறது
நண்பா!
நீ மட்டுமில்லை
நீயும் நானும்
உலாவிய ஒழுங்கைகள்
வடலி நிறை பனை வெளி
உணவு தரும் குடிசைகள்
மீளவும் வரப்போவதில்லை

மீளவும் வரப்போவதில்லை
திங்கள், 29 ஜனவரி, 2024
ஞாயிறு, 28 ஜனவரி, 2024
வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
என் சிறுபராயம்
தாய்வழி பேரனுடனான சம்பாஷணை
இலக்கியத்தின் ஒரு முகம்
பூர்வீகம் மறுமுகம்
வாழ்வியல் அதன் அகம்
தோட்டமும் துரவும் வண்டிலுமாய்
எனக்குள் ஓடுகிறது பந்தம்
மூதாதையர்களை தேடும் பயணம்
என்னோடு முடிந்துவிடுமா?
புலம்பெயர்ந்ததின் விளைவு
எங்கு போய் முடியும்?
முதுசொம்களை தொலைத்த வாழ்வில்
பவுசு இருந்தென்ன?
இழப்பதற்கு எதுவுமில்லையெனினும்
தாய்நிலம் துறவாதீர் !
தாயைப்போல யாருமில்லை
வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை
வெள்ளி, 26 ஜனவரி, 2024
எனது வாழ்விடம் காணாமல் போயிற்று
ஒரு சிறிய ஊர்
அநேகருக்கு அநேகரை தெரியும்
ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும்
பொலிஸ் வந்ததில்லை
யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும்
பகட்டுமில்லை பட்டினியுமில்லை
ஆசிரியர் மாணவரை
தந்தை பெயர் சொல்லியே அழைப்பர்
செருப்புகளற்று நடந்துதிரியும்
பட்டம் ஏற்றும் மணல் வெளி
பறவையொன்று வானத்தில் படர்ந்து
கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று
என்ற புனைவற்ற கிராமம்
பறவைகள் மாடுகளில் மரங்களில்
முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு
கோலாகல கோயில் திருவிழாக்களும்
நாடகங்களும் தாச்சி விளையாட்டும்
வேறு என்ன வேணும்?
பொய் இல்லை போட்டி இருக்கும்
வண்டில்ச்சவாரி கிட்டியடியென
நாளும் பொழுதும் நீளும்
எனது அழகிய வாழ்விடம்
ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில்
காணாமல் போயிற்று

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று
ஞாயிறு, 21 ஜனவரி, 2024
இழப்பதற்கும் எதுவுமில்லை
மனதிற்குள் சுழலும் கூரான சக்கரம்
சதா உழலும் நெருடும்வலி
யாரோடும் பகிரா காயம்
உயிரிருக்கும்வரை தீமிதிப்பு
கனவுமில்லை இதயமுமில்லை
சிரிப்பதிலும் உயிரில்லை
நினைப்பதுபோல் நிஜமுமில்லை
இழப்பதற்கும் எதுவுமில்லை
இழப்பதற்கும் எதுவுமில்லை
சனி, 20 ஜனவரி, 2024
மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்
நான் சிறுவன்
வேலியில் ஒரு பெரிய பூவரசு
அம்மம்மாவின் வயதிருக்கும்
பச்சை இதயமாய் விரிந்த இலைகள்
மஞ்சள் இலைகளின் நிலக்கோலம்
இலைகள் ஆட்டுக்கு குழை
எங்களுக்கு பீப்பீ
சிறார்களுக்கு உள்ளங்கை கோப்பை
பூவரசு அணில்களின் கோட்டை
புலுனிகளின் கச்சேரி மேடை
கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்மை
பூவரசின் நீண்டகிளைகள்
கதியால்களாகும் நம்பிக்கை
பூவரசம்பூ பூவுலகின் அதிசயம்
பிறிதொருநாள்
பூவரசு பட்டு விறகாகியிருந்தது
அந்த இடத்தில மதில் ஓடிற்று
நிழல் இல்லை
மதில் மேல் பூனை
மனதில் வெட்கையெனினும்
வளவினுள் வெள்ளம்
மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்
வெள்ளி, 19 ஜனவரி, 2024
"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"
"கவிதையை எழுதாதே
கவிதையாய் வாழ்"
நண்பா!
நீ வாசிக்கமுடியாமல் போன
கவிதையை
நான் எழுதப்போவதில்லை
அதுவும்
உன்னோடு போனதாய் இருக்கட்டும்
உன்னருகில் வரும் நாள்
உனக்காய் நான் எழுதுவேன்
தோழ மை கொண்டு
"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
இன்னும் நாம் உயிர்க்கவில்லை
வாழவேண்டிய தோழன் வீழ்ந்தான்
ஒவ்வொரு தோழராய் இழந்தபடி - தினம்
மனம் பிசையும் வேதனையை சுமந்தபடி
தணல் மீது தொடர்ந்தும் நடந்தோம்
மயிரிழையில் உயிர்தப்பி தப்பி
எதற்கும் தயாராய் உழைத்தோம்
உலகமறியா அர்ப்பணிப்புகளுடன்
ஒருநாள் யாவும் முடிந்தாயிற்று
எதுவுமில்லை
யாரும் காணா இருள்
அழக்கூட முடியவில்லை
வெறும் துடிக்கும் இதயத்தை
கையிற்குள் இறுக்கிப் பொத்தியபடி
வாழும் பிணமாக ஊர்ந்தோம்
இன்னும் நாம் உயிர்க்கவில்லை
இன்னும் நாம் உயிர்க்கவில்லை
சனி, 13 ஜனவரி, 2024
வெள்ளி, 12 ஜனவரி, 2024
நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்
வழுக்கையாறு வாய்க்காலிருந்து
கூப்பிடு தூரத்தில் மூன்று வயல்கள்
வரம்புக்கட்டுவதும் மூலைகொத்துவதும்
நெல் விதைப்பதும் களைபிடுங்குவதும்
வயலின் பசுமையில் நாங்களும் இருந்தோம்
இருபோக விதைப்பு
சிலகாலம் ஒருபோகமானது
மூன்று வயல்களிலும்
வெவ்வேறு நெல்லினங்கள் விதைப்போம்
ஒன்று பிழைத்தாலும் மற்றையது கைவிடாது
நானறிந்து நட்டம் ஏற்பட்டதில்லை
இறுதி பலவருடங்கள்
யாரோதான் செய்தார்கள்
செய்தார்களோ இல்லையோ தெரியவில்லை
பயிர்களோடு சேர்ந்து அசையும் மனம்
புலுனிகளும் வேறு குருவிகளும் பாடும் இசை
வயலோடும் வயலை சுற்றியும் நட்புவட்டம்
முதல் நெல்லில் பொங்கும் பொங்கல்
அரிசிமா மணக்கும் கொழுக்கட்டை
அறுவடையும் சூடடிப்பும்
வைக்கோலும் அந்த சுனையும்
எப்படி மறப்பது?
மூன்று தலைமுறையின்
வியர்வை கலந்த மண்
பார்க்க ஆட்கள் இல்லை
வயல் விற்பனையாயிற்று
வயலில்லா முதல் பொங்கல் நெருங்குகிறது
நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்
வயல்கள் வீடாக மாறும் காலம்
நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்
ஞாயிறு, 7 ஜனவரி, 2024
சனி, 6 ஜனவரி, 2024
புலம்பெயர்வு
புலம்பெயர்வு
வசதி வாய்ப்புகளை தந்திருக்கலாம்
ஏன்?
(போலிப்)பெருமையை கூட தந்திருக்கலாம்
இருந்துமென்ன
அவரது சந்ததி அடையாளம் இழக்கும்நாள்
வெகுதொலைவில் இல்லை
உழைப்பின் வலி தீரமுன்
கொடுக்கும் விலை கொடியது
புலம்பெயர்ந்தோர் புலன்பெயர்ந்தவரல்ல
நீரும் எண்ணெயுமாய் அங்கும் இங்கும்
புலம்பெயர்வு
வெள்ளி, 5 ஜனவரி, 2024
குழந்தைகளுடன்
நட்பாகும் மருத்துவன்
வாழ்நாள் பேறுபோல
குழந்தை வளர வளர
நட்பின் வயதும் வளரும்
குழந்தை பெரியவராக
அவரது உலகம் வானத்தில் விரிந்திக்கும்
நட்சத்திரங்களாய்
குழந்தையும் மருத்துவனை மறப்பதில்லை
மருத்துவனும் குழந்தையை மறப்பதேயில்லை
நீண்ட இடைவெளியில் திடுதிப்பென சந்திக்கையில்
குழந்தையே மருத்துவனாகிறான்
மருத்துவனே குழந்தை போல்
ஒரு நோயாளியாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)