இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

செவ்வாய், 24 டிசம்பர், 2024

நான் அழ விரும்பவில்லை தானாக வருகிறது அழுகை சிவப்பு கம்பள வரவேற்பில்லை இருந்தாலும் கரைந்து போகிறது துயர் கருமுகில்கள் கலைந்துபோகின்றன வழிப்போக்கனின் கனவில் சடைத்த மரங்களே இருக்கிறது தரைக்கீழ் நீரோ வேர்களோ இல்லை


Share/Save/Bookmark

திங்கள், 23 டிசம்பர், 2024

கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு

அருகில் ஒரு சிறு கட்டற்ற கிணறு 50 குடும்பங்கள் நேற்று இங்கு இருந்திருக்கும் அழைப்பிற்காய் காத்திருக்கிறேன் சுதர்சன் ஆள் அரவத்திற்கு காது கொடுக்கிறான் வீரனொருவன் குழந்தையை கொஞ்சி மனைவியிடம் கொடுத்தனுப்பிவிட்டு தோள் சுமக்க திரும்புகிறான் வீரனின் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது சுதர்சனின் கண்களிலும் கண்ணீர் நிரம்புகிறது எங்களிடம் field compressor வாங்கிப்போகிறா ஜனனி அக்கா சன்னங்களின் பாடலுக்கு குறைவில்லை பயம் இல்லை பசியிருக்கிறது கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு


Share/Save/Bookmark

வெள்ளி, 20 டிசம்பர், 2024

திரும்பிப்பார்க்கிறேன்

எமது வன்னிப்பிரதேசத்தில் யுத்தகாலத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவசுகாதார பணியும் மக்களுக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இயங்கிய நடமாடும் மருத்துவசேவை , சுகாதார நிலையங்கள் இடர் தீர்க்க உதவின. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் பணிபுரிந்த community health worker (CHW ) ற்குரிய சேவைக்கால பயிற்சிகளை நானும் மருத்துவர் ஜெயகுலராஜா ஐயாவும் மூத்த பொது சுகாதார பரிசோதகர் குணரட்ணம் ஐயாவும் வழங்கி அவர்களுக்கான தர உயர்வு வாய்மொழி பரீட்சையை (1999 ஆம் ஆண்டு ) ஆணைவிழுந்தானில் இயங்கிய தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தினோம். சமாதான காலத்தில் community health worker களுக்கு ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி அதில் சித்தியடைந்தவர்களுக்கு community health promoter என்ற உயர்வு வழங்கப்பட்டது. இதில் நண்பன் சிவமனோகரனின் பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் எவ்வளவு மருத்துவ சுகாதார அறிவுள்ளவர்களை எங்கெங்கு உருவாக்க முடியுமோ அதை செய்வதே எனது நோக்காக இருந்தது.


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

மாத்தையா என்றும் சங்கேத மொழியில் மைக் அல்fவா என்றும் அழைக்கப்பட்டவர். இவருக்கும் எனக்குமான தொடர்பு நெருக்கமாக இருந்ததில்லை , தொண்ணூறுகளில் எங்களது பொறுப்பாகவும் இருந்தார்,அவரது பொதுச்சந்திப்புகளில் சந்தித்து இருந்தாலும் ஒருமுறை கூட மனம் விட்டு கதைத்ததில்லை . எண்பத்தியேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய நேரம் , யாழில் குளப்பிட்டி சந்திக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடைப்பட்ட பாதையில் மாத்தையா அண்ணை நின்று தாக்குதலுக்கான கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.நான் இன்னுமொரு போராளியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அவர் கேட்டதின் பேரில் சைக்கிளில் ஏற்றிக்கொண்டுபோய் அவர் சொன்ன இடத்தில விட்டேன், போகும் போதும் அவர் ஏதும் கதைக்கவில்லை, என்னை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, அது ஒரு பதற்றமான சூழலும்தான். கொக்குவிலில் இருந்த முகாம் ஒன்றில் தனி சந்திப்பை முடித்துவிட்டு அண்ணையுடன் வெளியில் வந்தேன். அண்ணை சந்திப்பு கொட்டிலை நோக்கிப்போனார். சந்திப்பு கொட்டிலிலிருந்து மாத்தையா அண்ணை வெளியில் வந்தார் , என்னைக்கண்டவுடன் அவரின் முகம் மாறியதை அவதானித்தேன். பின் அவர் அண்ணையுடன் கொட்டிலுக்குள் போய்விட்டார். தொண்ணூற்றியோராம் ஆண்டு ஆனையிறவு சண்டை நேரம் நான் மருதங்கேணியில் எனக்குரிய கள மருத்துவக்குழுவுடன் நின்றிருந்தேன். சண்டைக்களத்திலுள்ள கள மருத்துவக்குழுவின் மருத்துவர் காயமடைந்து பின் அதை பிரதி செய்த மருத்துவரும் காயமடைந்துவிட்டார். நான் எனது மருத்துவக்குழுவில் இருந்த மூத்த மருத்துவப்போராளியிடம் எனது அணியை வழிநடாத்த சொல்லிவிட்டு அதை மேலிடத்திற்கு அறிவித்துவிட்டு ஒரு மருத்துவப்போராளியையும் அழைத்துக்கொண்டு நேரடி களத்திலுள்ள கள மருத்துவக்குழுவை நோக்கி செல்வீச்சுகளுக்கிடையில் போய்க்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட தூரம் சென்றுகொண்டிருந்தபோது மாத்தையா அண்ணையின் அறிவிப்பு வந்தது " அங்கு போவது பாதுகாப்பு இல்லை,நின்ற இடத்திற்கே திரும்பவும்" . மாத்தையா அண்ணையிற்கு கீழிருந்த தாக்குதல் அணி பப்பா அல்fவா என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்டது. அந்த அணியிலிருந்த பலர் எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள். மாத்தையா அண்ணையுடனான எனது இறுதி சந்திப்பை நான் எழுதப்போவதில்லை.


Share/Save/Bookmark

சனி, 7 டிசம்பர், 2024

கடிதத்தை எழுதிவிட்டேன் எங்கு சேர்ப்பது? உன்னையும் என்னையும் ஒருகோடுதான் பிரித்தது கோடு கடலாகி மலையாயிற்று பெருநினைவுகளில் மனதினுள் சுனாமி எழுகிறது பாறையாகிக்கொண்டே இறுகுகிறது இதயம் கனவுகளில் பசுமையுமில்லை அனலுமில்லை ஒளியுமில்லை இருளுமில்லை உப்புசப்பில்லா வாழ்வின் கனவில் வேறு என்ன தெரியும்?


Share/Save/Bookmark

வியாழன், 5 டிசம்பர், 2024

எனது " கண்ணீர்த்துளிகள்" என்ற கவிதைத்தொகுதி சகோதர நண்பன் தமிழ்ச்செல்வன் அவர்களின் 45 வது நினைவுநாளில் 2007 ஆம் ஆண்டு மார்கழியில் வெளிவந்தது. சகோதரன் தனோஜன் இக்கவிதைகளை நூல்வடிவமாக்கினான். இக்கவிதைத்தொகுதி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சமர்பித்திருந்தேன் , அதில் " சகோதரா! உன் அருகில் ஒரு இடம் வை அருகில் வந்து உறங்குவதற்கு " என்றே எழுதியிருந்தேன். இன்று எங்கோ நிற்கிறேன் , மாவீரர்களுக்கும் எங்களுக்குமான தூரம் அருகிலில்லை, உயிரிழை அன்பில் மட்டும் இணைந்திருக்கிறேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சாவை தொட்டு வந்தாலும் மரணத்திற்கு ஒத்திகை இல்லை மரணம் ஒரு முற்றுப்புள்ளி இறுதிப்பார்வையில் பதிந்திருக்கும் படம் யாது? விஞ்ஞானம் செல்ல வேண்டியதூரம் அருகிலில்லை


Share/Save/Bookmark

சனி, 2 நவம்பர், 2024

ஒழுக்கமும் நேர்மையும் ஒன்றான தலைமகனே தலைவனாகி தாய்மண், மக்கள் மீதான அபரிதமான பாசத்தால் உடன் பிறவாத அண்ணனானாய் அண்ணனாகி கேட்காமலேயே தந்தைதாயின் அன்பையும் தந்தாய்


Share/Save/Bookmark

வெள்ளி, 1 நவம்பர், 2024

ஒரு சகோதர நண்பராகவும், எமது பொறுப்பாளராகவும் எங்களோடு ஒன்றி வாழ்ந்த தமிழ்ச்செல்வன்

ஒரு சகோதர நண்பராகவும், எமது பொறுப்பாளராகவும் எங்களோடு ஒன்றி வாழ்ந்த தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்து இன்றுடன் 17 வருடங்களாகிறது. அவர் எங்களை பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முந்திய நாளில் நான் அவரை இறுதியாக சந்தித்திருந்தேன்.இறுதி யுத்தம் ஆரம்பித்தபோது பூநகரி பிரதேசத்தின் பாதுகாப்பினையும் தமிழ்ச்செல்வன் அவர்களே பொறுப்பெடுத்திருந்தார். தமிழீழ சுகாதார சேவையினரான நாங்கள் சுட்டதீவு பகுதியில் காவல்க்கடமையையும் பூநகரிப்பிரதேசத்திற்குரிய களமருத்துவத்தையும் பொறுப்பெடுத்திருந்தோம். சுட்டதீவுப்பகுதியில்த்தான் இறுதியாக அவரை சந்தித்திருந்தேன்.அவர் ரேகா, மனோஜ் உள்ளிட்ட சிலருடன் அங்கு வந்திருந்தார். இறுதி சந்திப்பின் அத்தனை உரையாடல்களும் என் மனதில் அப்படியே இருக்கிறது. அவரது இழப்பு தாங்கமுடியாமல் உழன்று திரிந்த அந்தநாட்கள், அண்ணனின் கண்ணீரை பார்த்த அந்த கடின நொடிகள் யாவும் என்றும் எங்களோடு பயணிக்கும். சகோதரனின் நினைவுகளுடன் கைகூப்புகிறேன்.


Share/Save/Bookmark

செவ்வாய், 29 அக்டோபர், 2024

ஆயுளின் முற்றுப்புள்ளிக்கு முன் மீள சந்திக்க விரும்பிய பால்ய நண்பர்கள் வாசிக்க விரும்பிய பல புத்தகங்கள் எழுத நினைத்தும் எழுதாத கவிதை என் சகாக்களின் வாரிசுகளை பார்த்து மனம் நிறைய தொட்டு ஒற்றிக்கொள்ள அவர் பாதம் பட்ட மண் வயல்களின் பசுமையில் கண்கள் குளிர்ந்துபோக கடற்கரையில் காற்று வாங்கி கையசைத்துபோனவரை நினைந்து ஒரு பறவையைப்போல திசையறிமால் பறக்கிறது மனது


Share/Save/Bookmark

வெள்ளி, 25 அக்டோபர், 2024

திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்)

திரும்பிப்பார்க்கிறேன் ( சுயபுராணம்) எங்களுக்கான யாழ் மாவட்ட கிறிக்கற் நடுவர் சங்கத்தின் கிறிக்கற் நடுவர்களுக்கான வகுப்புகள், பரீட்சை மற்றும் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை , செய்முறை பரீட்சை யாவும் யாழ் இந்துக்கல்லூரியில் வார இறுதி நாட்களில் நடைபெற்றது. எனது சக மாணவர்களாக அமரர்களான பத்மநாதன் ஐயா ( யாழ் பல்கலைக்கழக விளையாட்டு உத்தியோகத்தர்), சண்முகலிங்கம் அண்ணை ( இரும்பர்), றொகான் ராஜசிங்கம் ( விளையாட்டு உதவி கல்விப்பணிப்பாளர்) உள்ளிட்ட குறிப்பிட்ட பிரபலமானவர்கள் சிலர் இருந்தார்கள். யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான வகுப்புகள், பரீட்சை யாழ் ஸ்ரான்லி கல்லூரியில் நடைபெற்றது, ஆறு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம்.யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கப்டன் குணசிங்கம் இருந்தார். 1995 ஆம் ஆண்டிற்கு பின் இவர்களது தொடர்பு இல்லாமல் போய்விட்டது. 2000 ஆண்டுகளின் சமாதானகாலத்தில் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் வலைப்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான எழுத்துப் பரீட்சையை வவுனியாவிலும், செய்முறை பரீட்சையை கிளிநொச்சி சென் திரேசா பெண்கள் கல்லூரியிலும் எடுத்தோம், ஆறு அல்லது ஏழு பேர் பரீட்சையில் சித்தியடைந்தோம். பரீட்சையை நடத்துவதற்காக விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் தேசிய வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவி உட்பட சிலர் கொழும்பில் இருந்து வந்திருந்தார்கள். சில விடயங்கள் நேற்றுப்போல் இருக்கும் ஆனால் உண்மை அப்படியல்ல. எனக்கு விருப்பமான தொழில் sports journalism .


Share/Save/Bookmark

வியாழன், 17 அக்டோபர், 2024

சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !

சகோதரனே! அருகில்த்தானே இருந்தாய் எங்கு போனாய்? பதினைந்து வருடமாயிற்று மக்கள் நலனைவிட வேறு என்ன நீ அறிவாய்? எதையும் காணாமல் போய்விட்டாய் சிதறி உடைந்த கண்ணாடியில் என் தாயகம் தெரிகிறது செழித்து வளர்ந்திருக்கிறது நெருஞ்சிமுட்கள் நீ தப்பிவிட்டாய் ! சிறு வயது எண்ணங்கள் இங்கு இறந்தவர் வேறு உலகில் ஒன்றாய் வாழ்வர் அங்கு இறப்பவர் இங்கு வருவர் ஆத்மாவிற்கு இறப்பில்லையெனில்


Share/Save/Bookmark

திங்கள், 14 அக்டோபர், 2024

உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு

நீ ஏற்றுக்கொள்கிறாயோ இல்லையோ எனக்கு இன மத வெறியில்லை நீ கூட எனக்கு நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனானும் உன்னோடு என்வாழ்வும் சிலவேளை ஒத்துப்போகிறது உன் தந்தை இறந்தபோது இறுதிநிகழ்விலும் நீ பங்குபற்றமுடியவில்லை உன் ஒன்றுவிட்ட சகோதரனையும் தோழமைகளையும் அரச பயங்கரவாதத்திற்கு இழந்ததுபோல் நானும் என் சகோதரனையும் ஒன்றுவிட்ட சகோதரர்களையும் தோழமைகளையும் களத்தில் இழந்தேன் உன் வலி உனக்கு வலிமை தந்தது நான் நூலகம் எரித்த சாம்பலிலிருந்து வந்தவர்களிலொருவன் வந்த வழி மறந்தவனில்லை உன் எழுச்சி எனக்கு மகிழ்வுதான் என் தேசத்தை அழித்தவர்களுள் நீயுமொருவன் என்றபோதும் உன் கொள்கை மாறா வாழ்வு என்னை ஈர்த்தது உன் செயலால் அழிக்கப்பட்ட என் தாயக அடையாளங்களை மீளுருவாக்கம் செய்தபின்னாவது வா! வாக்கு கேட்க இப்போது போய்விடு உன் தலைவனை கூட என் தாயகம் பாதுகாத்து அனுப்பியதே வரலாறு


Share/Save/Bookmark

சனி, 12 அக்டோபர், 2024

இளம்புலி ஒரு மருத்துவப்போராளியும் கூட. இறுதியாக என்னை தனது சகோதரியுடன் வந்து கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துமனையில் சந்தித்துப்போனான். போனவன் மீளவும் தனியே வந்து என் காதுகளில் குசுகுசுத்துப்போனான்.


Share/Save/Bookmark

சனி, 31 ஆகஸ்ட், 2024

அது ஒரு வீரம் தியாகம் நிறைந்த சூழல் ஒவ்வொன்றாகவும் கூட்டாகவும் இழந்தபின் தரையில் வீசிய மீனானோம் நாள் ஒவ்வொன்றும் மாதங்களாய் நகர்த்தும் வலி நகரவே இல்லை செஞ்சோற்றுக்கடன் தீரவுமில்லை கடலில்லா பூமியில் கப்பல் கட்டிக்கொண்டிருக்கிறேன்


Share/Save/Bookmark

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

தமிழீழ சுகாதார சேவைகளின் நிர்வாக அலகினுள் ஒருவன் நீ மருத்துவத்தையும் சுகாதாரத்தையும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களுக்குள்ளும் வீடு வீடாக கொண்டு சென்றவருள் ஒருவன் நீ முள்ளிவாய்க்கால் இறுதிவரை மக்களை தொற்றுநோய் நெருங்காமல் காத்து சென்றவருள் ஒருவன் நீ கூரை அல்ல அத்திவாரக்கற்களில் ஒருவன் நீ


Share/Save/Bookmark

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமத்தில் ஒருவரிடமும் மோட்டார்சைக்கிள் இருக்கவில்லை, வீட்டுக்கொரு சைக்கிள் இருந்தது. கிராமத்தில் ஒருவரிடம் கார் இருந்தது, அந்தக்காரினை மற்றையவர்கள் நல்லது கேட்டதிற்கு வாடகையிற்கு அமர்த்துவார்கள். அப்போதெல்லாம் அவச்சாவுகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, தொலைகாட்சி பெட்டியில்லை ஆனாலும் கிராமம் வயல்களோடு செழித்திருந்தது. கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூகநிலையங்கள் எங்களை மகிழ்வூட்டின.ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு மாடு கோழிகள் இருந்தன. கிருமிநாசினி பாவிக்காத காய்கறிகள் , பழங்கள் இருந்தன. நாட்டுக்கோழிதான், புரொய்லர் கோழி இருக்கவில்லை. சலரோகம், பிரஷர் , கான்சர் கேள்விப்பட்டதில்லை.


Share/Save/Bookmark

புதன், 31 ஜூலை, 2024

நாடில்லாதவன் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கையில் வெந்துபோகிறான்



Share/Save/Bookmark

திங்கள், 29 ஜூலை, 2024



Share/Save/Bookmark

நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை

26 .09 .2009 அன்று காலை நோர்வேயில் ஒரு அகதியாக வந்து இறங்கினேன். விமானநிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு வெளியில் வந்து தரிப்பிடத்தில் இருந்தேன். இன்று திலீபனின் நினைவுநாள் மதியம்வரையாவது எதுவும் சாப்பிடக்கூடாது என மனது சொல்லிக்கொண்டது. இலங்கையை விட்டு வெளிக்கிட முன் அப்பா அம்மா அம்மம்மாவையாவது ஒருமுறை பார்த்து வந்திருக்கலாம் என நினைத்தாலும் அடுத்தகணமே அது சாத்தியமில்லை , கையில் அடையாள அட்டை கூட இல்லாமல் அறவே சாத்தியமில்லை என்ற பதிலையும் சொல்லிக்கொண்டேன், இனி ஒரு போதும் அவர்களை சந்திக்கமுடியாமல் போகலாம். என்னோடு வாழ்ந்த பலரின் முகங்கள் எனக்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது, விரக்தியின் எல்லையில் இருந்தேன் இருந்தாலும் எதற்கும் தயாராக வேண்டும் என்ற பழக்கப்பட்ட மனநிலையும் என்னிடம் இருந்தது. இனி யாவும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், புதிய மொழியையும் அ, ஆவன்னாவிலிருந்து கற்கவேண்டும். அகதி அந்தஸ்து கிடைக்கவேண்டும். அந்த நாட்களை இப்போது நினைப்பது கூட கடினமாக இருக்கிறது. எனது வாழ்நாளில் எனக்கு பலர் பல்வேறுவிதமான உதவிகளை நான் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றிக்கடனை இந்தப்பிறவியில் என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விடக்கூடும். நாங்கள் நினைப்பது எல்லாம் சாத்தியமாவதில்லை


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜூலை, 2024

இன்றுள்ள நாடுகள் நூறு வருடத்திற்கு பின்னும் இருக்கலாம் , மொழியும் இனங்களும் மதங்களும் கூட இருக்கக்கூடும் ஆனால் இன்றுள்ள மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.இதற்குள் மனிதனே தனக்குள் பிணக்குகளை உருவாக்குகிறான், சூழலையும் மாசாக்குகிறான். ஆறாம் அறிவில் என்ன இருக்கிறது?


Share/Save/Bookmark

சனி, 6 ஜூலை, 2024

திரும்பிப்பார்க்கிறேன்

சாவகச்சேரி மருத்துவமனை பேசுபொருளாகிறது , மனது வலிக்கிறது. 1995 ஆம் ஆண்டு யாழ் வலிகாம பெரும் இடப்பெயர்வில் யாழ் மருத்துவமனை மந்திகை மருத்துவமனைக்கு இடம்மாற நானும் ஒரு சில மருத்துவர்களும் நூற்றுக்கணக்கான காயப்பட்ட நோயாளிகளுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு ஒரு இரவில் வந்து சேர்ந்தோம். நான் சத்திரசிகிச்சைப்பிரிவை பொறுப்பெடுத்து நடத்தினேன். சாவகச்சேரியே மக்களால் நிரம்பிவழிந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலம். நானும் எனக்குரிய அணியினரும் 24 மணிநேரமும் மருத்துவமனையிலேயே இருந்தோம்.மருத்துவமனையின் மற்றைய விடுதிகளில் பகல் நேரங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள், இரவுநேரங்களில் அத்தியாவசிய நோயாளிகளுக்கு நாங்களே உடன் சிகிச்சை வழங்கினோம் , இயன்றவரை சிறப்பான மக்கள் சேவை வழங்கினோம் .


Share/Save/Bookmark
நண்பா! நினைத்திருக்கமாட்டோம் ஒருபுள்ளியில் தொடங்கி இரு வேறு திசையில் இன்று நீ எங்கோ நான் எங்கோ உனக்கொரு உலகம் எனக்கொரு உலகம் அன்று எம்வாழ்வு ஆலமரத்தின் கீழ் இருந்தது இன்று(னு)ம் உன்னை நினைக்கையில் நானும் என்னை நினைக்கையில் நீயும் சிலிர்த்துப்போகிறோம் இடைவெளியில்லை எனினும் தொடமுடியா தூரம் விடைபெறும் காலம் நெருங்குகிறது ஞாபகங்களுடன் முடியும் பயணம்


Share/Save/Bookmark

சனி, 22 ஜூன், 2024

அன்பு

அன்பு தொலைவதில்லை அணிகலன் அணிவதில்லை அது அதிசயம் அடைபடா ஊற்று அளவிடா ஆனந்தம் அடைக்கலம் தரும் குடிசை அரவமில்லா பிணைப்பு ஆழமறியா கடல் அர்த்தம் தரும் பிறவிப்பலன்


Share/Save/Bookmark

ஞாயிறு, 16 ஜூன், 2024

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

தேர்ந்த நூல்களை சேகரித்தல் தித்திப்பு ஓய்வில் தேர்ந்து வாசித்தல் தென்றல் முத்தமிடும் தருணங்கள் அனுபவங்கள் தித்திப்பானவை சேகரிப்புகளை இழத்தல் கொடியது உறவுகளை இழப்பதுபோல மீண்டும் மீண்டும் இழத்தல் இதயத்தில் குதியிருக்கும் ஆணிகள் வசந்தத்தை இழந்தாலும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு தூர தேசத்தில் துக்கம் தீரா கவலை துருத்திக்கொண்டிருக்கிறது தோளில் தூக்கி போகமுடியா கடமை எந்தப்பணியும் செய்யா பிணி என்னைத்தொடர்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 31 மே, 2024

நூலகங்களை எரிப்பதற்கு பெரும் வன்மம் இருக்கவேண்டும் . சாதாரண மனிதர்களால் அதை செய்யமுடியாது. இறுதிப்போரிலும் பாலர் நூல்கள் உட்பட எந்த நூல்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.நல்லிணக்கம் என்று எலும்புக்கூடுகள் கைகுலுக்கலாம், இதயம் மூளைக்கு அது சாத்தியமில்லை.


Share/Save/Bookmark

புதன், 29 மே, 2024

காலமாற்றத்தில் கரும்பலகை வெண்மையாயிற்று கலர்ச்சேலையும் வெள்ளையாயிற்று கடைசித்துளி கண்ணீரில் மிதக்கிறது பாசம் விடைபெறாமலே நித்திரையானது உடல்


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 மே, 2024

சிலந்திவலையில் சிக்கியது மனம்

நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு கைவிடப்பட்டிருக்கிறது பாழடைந்துவிட்டது சிலந்திவலையில் சிக்கியது மனம் மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில் பல்லிகள் சொல்லும் சத்தம் வளவின் ஒவ்வொரு சாணிலும் நினைவுகள் சிந்தியிருக்கின்றன நடைபாதையில் வடலிகள் பாசி படர்ந்திருக்கும் கிணற்றில் பழைய மீன்களின் வழித்தோன்றல்கள் சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள் காணாமல் போயிருந்த காலத்திலும் ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 24 மே, 2024

திரும்பிப்பார்க்கிறேன். நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே? அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .


Share/Save/Bookmark

ஞாயிறு, 19 மே, 2024

முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக் கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.


Share/Save/Bookmark

சுதர்சனின் நினைவ

சுதர்சனின் நினைவு வருகையில் அதிலிருந்து மீளுவது எனக்கு இலகுவல்ல. அவனது திருமணத்திலும் அவனது தந்தை தாயாக நானும் எனது மனைவியும்தான் இருந்து நடத்தினோம். அன்றொருநாள் தமிழ்வாணனின் வித்துடல் கனகபுரம் துயிலும் இல்லத்தில் விதைத்துவிட்டு எமது பணிமனைக்கு வந்தும் எதுவும் செய்யமுடியவில்லை . இரவு பத்து மணியளவில் நான் வெளிக்கிட்டேன் , துயிலுமில்லத்திற்கு போய் அந்த அமைதியான சூழலில் சில மணிநேரம் இருந்தால் மனம் ஒருமைப்படும் , சுதர்சனும் என்னோடு வந்தான் . அவன் துயிலுமில்லத்தில் குலுங்கி அழுத காட்சி இப்போதும் என்னை அழுத்துகிறது.சிரித்துக்கொண்டே திரிபவனின் அழுகை துயர் நிறைந்தது.


Share/Save/Bookmark
நாங்கள் சாதாரணமானவர் எங்கள் வாழ்வை நாங்களும் உங்கள் வாழ்வில் நீங்களும் மகிழ்வில் செழிப்பதே எம்மனது ஒருவர் வாழ்விற்காய் அடுத்தவர் நசுக்கப்படல் தர்மமில்லை ஆதலால் உங்களை எதிர்த்தோம் சந்ததி வாழ வேறு தேர்வு இல்லை எதிரியோடு பொருதுவது கடினமில்லை துரோகிகளை களைவது இலகுமில்லை காலம்தான் பச்சோந்திகளை வெளிக்காட்டும் சிலவேளை வெற்றி தோல்வி முடிந்திருக்கும்


Share/Save/Bookmark

சனி, 18 மே, 2024

நீ நடந்துலாவிய காடுகள் பறவைகளின் சத்தம் நீந்திய கடல் அலைகளின் நடனம் உருமறைத்த பயிற்சித்திடல் பதுங்கியிருக்கும் நிழல் ஒவ்வொருவரிலும் கரிசனை அது உனக்கேயானது எல்லாவற்றிற்கும் அருகில் நீ குழைத்துத்தரும் சொற்கள் இருக்கின்றன நீதான் இல்லை சூரியன் இல்லா பூமியில் ஒரு கைவிளக்காக உன்நினைவுகள்


Share/Save/Bookmark

May-18

முல்லைத்தீவில் கம்பிவேலிக்குள் மக்கள் சூழ இராணுவம் அகோர வெயில் குடிக்க நீர் கிடைக்கவில்லை முதுகிலும் காலிலும் இருந்த எரிகாயங்கள் வியர்வையில் மேலும் எரிந்தன சரணடையுமாறு அறிவிப்புகள் மனது நேற்று இரவுச்சண்டையில் அண்ணையை நகர்த்தியிருப்பர் என்று நம்பியிருந்தது ஒரு சடப்பொருளாக இருந்தேன் யாரையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியவில்லை


Share/Save/Bookmark

வியாழன், 16 மே, 2024

May-17

இன்றைய நாளின் ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு நாளாய் இருந்தன பதினைந்து வருடங்கள் கடந்தாலும் அந்தநாள் வலி யாருக்கும் வரக்கூடாது நேற்றுவரை முடிபுகள் இருந்தன இன்று என்னவாயிற்று ? யாராவது ஒழுங்கமைப்பார்களா? அடுத்த நாள் நிச்சயமில்லை சா பயம் துளியுமில்லை இனி யாரையும் காணப்போவதுமில்லை பழைய திட்டம் மட்டும் மனதில் வேறு எதுவுமில்லை கூப்பிடு தூரத்தில் எதிரி யாரிடமும் விடை பெறமுடியவில்லை அந்தரத்தில் நகர்ந்தேன் இன்னும் நம்பமுடியவில்லை என்ன நடந்தது?


Share/Save/Bookmark

சனி, 11 மே, 2024

போருக்கு பிந்திய காலம் யார் யாரோடு என்று புரியவில்லை முட்கம்பிகள் சிக்கிக்கிடக்கின்றன முட்படுக்கையில் வாழ்வு காணாமலான பட்டியலில் புத்தபகவானே முதலிடம் காவியுடையில் சாத்தான்கள் சமாதானம் எட்டும் தூரத்திலில்லை பாதாளத்தில் பொருளாதாரம் பஜிரோவில் அதிகாரம் மொய்க்கும் கொசுக்களாய் படையினர் குடிசையில் பசியோடு குழந்தைகள் வேர்களை பிடுங்கும் அரசு உறங்குநிலை விதைகளை அறியுமா? காலத்திடம் கேள்வி இருக்கும் தகுந்த பதிலும் இருக்குமா?


Share/Save/Bookmark
இரு அலைகளுக்கிடையில் நீ புன்னகைத்துப்போனாய் மெல்லிய இருளிலும் அது ஒளிர்ந்தது துயரின் வலி அகன்றது ஆழ்கடலாகவே உனை பார்த்தோம் இன்று அலைகள் இல்லா கடலில் ஒரு பெரும் அமைதி கனக்கிறது சூரிய சந்திரர் உலாவும் நீலவானமாய் பார்க்கிறோம் எம் வலியினை நீ அறியாய் அது போதும் எங்களுக்கு


Share/Save/Bookmark

திரும்பிப்பார்க்கிறேன்

நான் அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில்த்தான் செல்வது வழக்கம் , அன்று அவர்களுக்கு பயிற்சிநாள் இல்லை. இங்கு பயிற்சி எடுப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அன்பாலும் கலகலப்பாலும் குறைந்தவர்கள் இல்லை. எனது மோட்டார் சைக்கிள் எப்போதும் தூசு படித்துதான் இருக்கும் ஆனால் இம்முகாமிலிருந்து நான் வெளிக்கிடும் போது கழுவி துடைக்கப்பட்டிருக்கும், உண்மையில் இது எனக்கு பிடிப்பதில்லை. நான் அங்கு சென்று எனது கடமைகளை முடித்தபின் முகாம் பொறுப்பாளர் வழமைபோல் சாப்பிடக்கூப்பிட்டார். நான் பொறுப்பாளரிடம் ஒரு போராளியை பற்றி வினாவி எங்கே அவர் எனக்கேட்டேன். பொறுப்பாளரும் நீங்கள் அவனை பார்க்கவில்லையா? இல்லையே , அவனது குடும்பம் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்துவருகிறது. அவனின் தாயார் போன மாதம் இறந்து எல்லாம் நடந்து முடிந்துவிட்டது,இரண்டுநாளுக்கு முதல்த்தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஓ அப்படியா! ஆனால் அவன் வழமைபோல பயிற்சி எடுக்கிறான், எப்பிடியென்றாலும் அவனுக்குள்ள சோகம் இருக்கு. நான் வந்து சாப்பிடுகிறேன். அவன் தங்கும் கொட்டிலை கேட்டறிந்து அங்கு போனேன். அவனே வரவேற்றான் இருந்தாலும் அவன் மறைக்க முயலும் சோகம் வெளித்தெரிந்தது. அம்மாவை நான் நாலு வருசமாய் பார்க்கவில்லை . எனக்கு முதல் அம்மாவிற்கு போயிருவாவென்று நான் நினைச்சிருக்கவில்லை. கதைக்கமுடியாமல் ததும்பியவன் தொடர்ந்து கதைத்தான். நான் சின்னனில சாப்பாட்டு பார்சலை எடுக்காமல் பெடியள் கூப்பிட அவங்களோட பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுடுவான். அம்மா சாப்பாட்டை கட்டிக்கொண்டு கலைச்சுக்கொண்டு ஓடிவருவா, ஒருநாள் இல்லை இப்பிடி பலநாள் , சாப்பாட்டை என்ர பாக்கில வைச்சிட்டு மூச்சு வாங்கியபடி நான் போறதையே பார்த்துக்கொண்டு நிற்பா. சிலநேரம் அவ நிற்கிற இடம் பள்ளிக்கூட வாசலாகவும் இருக்கும். அவனை தேற்ற கதைத்துக்கொண்டிருந்தேன். உங்களிட்ட அம்மாவின் படம் இருக்கா? இல்லை என்றான். நான் உரியவர்களிடம் தெரியப்படுத்தினேன். நான் அடுத்த முறை அங்கு செல்கையில் அவனிடம் தாயின் படம் மட்டுமல்ல குடும்பப்படமும் இருந்தது. இன்று அவர்கள் இல்லை.


Share/Save/Bookmark

வியாழன், 9 மே, 2024

வயல்கள் கட்டிடங்களால் நிரம்ப வேலிகள் மதில்களாயின போதையை போல வாகனங்கள் பெருகுகின்றன குளம் புனரமையா மண்ணில் பெய்யும் மழையும் வீணாகிறது கட்டிடங்கள் வளர்ந்து காற்றோட்டத்தை ஊடறுக்க வெக்கை இலவசமாகிறது எங்கள் குழிகளை நாங்களே வெட்டுவோம்


Share/Save/Bookmark

செவ்வாய், 7 மே, 2024

காரிருளில் தோன்றிய பேரொளி எங்களை செதுக்கிய உளி அன்பில் உருவான பரந்த வெளி எளிமையே வாழ்வான விடிவெள்ளி நினைத்தாலே நெஞ்சினுள் விழும் மழைத்துளி நீங்கள் இல்லா வெற்றிடங்களில் எவருமில்லை தொட முயன்றும் தொட முடியா வானம் போல கனவுகளில் வந்தும் கலைந்து போகிறீர் ஒரு கை ஓசையை யாரும் கேட்டதுண்டா?


Share/Save/Bookmark

சனி, 4 மே, 2024

நானும் வன்னியும் - சிலநினைவுகள்

எனக்கு இலக்கம் இருபத்தியாறு ஒரு பொருந்தா இலக்கம் போல் இருக்கிறது. கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் இணைப்பாளராக இருபத்தியாறு சேவைகளைத்தான் என்னால் நடாத்த முடிந்திருக்கிறது . இருபத்தியாறு தடவைகள்தான் என்னால் இரத்தம் வழங்கக்கூடியதாக இருந்திருக்கிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுகாதார நோய்த்தடுப்பு கடமைக்காக நான் சென்று வராத பாதைகள் ஒழுங்கைகள் இருக்கமுடியாது என நினைக்கிறேன். ஒரு சராசரி சத்திரசிகிச்சை மருத்துவர் தன் வாழ்நாளில் செய்கின்ற சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையைவிட நிச்சயமாக நான் அதிகம் செய்திருப்பேன்.என் சத்திரசிகிச்சைகளின் பெறுபேறுகளும் சிறந்தது என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியிருக்கிறது.


Share/Save/Bookmark
நான் நம்பியிருக்கவில்லை மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சி ஆவதை மயிர்கொட்டியோடு மரமும் எரிந்தது இருகிழமை பொறுத்திருந்தால் வண்ணாத்திப்பூச்சிகள் வண்ண மயமாக்கியிருக்கும் பொறுத்தார் பூமியாள்வார்


Share/Save/Bookmark

வெள்ளி, 3 மே, 2024

மருத்துவமனை தாயொருவர் கணுக்கால் சுளுக்கி வந்திருந்தார் மகன் திடீரென இறந்த துக்கம் முகத்தில் பூசப்பட்டிருந்தது எப்ப வந்தனீங்கள் அம்மா? ஒருமாதம் முகத்தில் ஒரு கலவரம் வலிக்குதா அம்மா ஓம் நீங்கள் நடக்கிறீங்கள்தானே அது பிரச்சனை இல்லை பேரன் வருவான் தம்பி மொழிபெயர்த்து சொல்லுவியா? முகத்தில் ஒரு ஏக்கம்


Share/Save/Bookmark

புதன், 1 மே, 2024

எங்கும் நீ இல்லை எந்த விம்பங்களிலும் நீ இல்லை தொட்டுப்போகும் காற்றில் நீ இருக்கிறாய் சுவாசமாய் நீ இருக்கிறாய் பறவைகளின் நளினத்தில் நிறைகிறது வயல் சில பறவைகளில் பூக்கள் பூத்திருந்தன இசையோடு பூத்திருந்த பூக்கள் அசைந்ததில் நான் வானத்தில் இருந்தேன் ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பெயர் வெவ்வேறு மொழியிலும் பறவைகளின் உறவுகளாய் சுமந்து திரியும் மாடுகளை வியந்து பார்க்கிறேன்


Share/Save/Bookmark
முற்றத்தில் சிறுகுருவிகளின் குலாம் ஒரே அளவில் ஒன்றையொன்று ஒத்திருந்தன என் சிறியமகள் விளையாடிக்கொண்டிருந்தாள் அப்பா! எனக்கு ஒரு குருவி வேண்டும் அவவின் அம்மாவிடம் கேட்போமா? தலையாட்டினேன் என் கைபிடித்து தத்தித்தத்தி நடந்துவந்தாள் இடைநடுவில் நின்றாள் களைத்துவிட்டீங்களோ? இல்லை அப்பா! அம்மாக்குருவி என்னை தன்னிடம் தருமாறு உங்களிடம் கேட்குமா? என் விடையறியாமலே திரும்புவோம் என்றாள் தூக்கச்சொன்னாள் என் கழுத்தை கட்டிக்கொண்டாள்


Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

நீ அமைதியாய் இருக்கிறாய் மனதிலோ எண்ண அலைகள் உறங்கும்வரை சதா ஏதோ ஓடும் யாருமறியார் நீ தத்தி நடந்து எழுந்து ஓடித்திருந்த முற்றத்தில் உன் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருக்கிறது பிறப்பும் இறப்பும் எங்கோ எழுதப்பட்டன அடுத்த ஐம்பது வருட இடைவெளிக்குள் நீ வாழ்ந்த தடங்கள் மறைந்துவிடும் இன்றும் நீ நிம்மதியாய் இல்லை ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறாய் அல்லது ஏதோ பிரச்சனை உனை குடைந்துகொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 25 ஏப்ரல், 2024

அன்று கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் இன்று மரணச்சடங்குகளே கடன் வாங்கி நடக்கிறது சுய பொருளாதாரம் கப்பலேறிவிட்டது கப்பலே இலங்கை வேந்தனுடையதுதான்


Share/Save/Bookmark

சனி, 20 ஏப்ரல், 2024

எந்த வீணையிலும் எழமுடியா இசையை மழலை மொழியில் கேட்டேன் உள்ளங்கைகளில் தெரியா ரேகைகளை ஏழையின் முகத்தில் பார்த்தேன் கவிதைகளில் எழுதா உணர்வுகளை கரும்புலியின் பிரிவில் உணர்ந்தேன் நெருப்பையும் கடந்த அனலை தாய்நிலம் பிரிகையில் சுமந்தேன்


Share/Save/Bookmark
நினைவுகளில் தொக்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும் சன்னங்கள் சுடும் காயங்களும் ஆறுவதில்லை பிறந்தோம் வளர்ந்தோம் தாய்(மண்)மனம் அறிந்தோம் இலகு வாழ்வு துறந்தோம் இலக்கு வாழ்விற்காய் நாலு பேர் சுமந்து போனார்கள் சாம்பலாய் பூத்தது வாழ்வு யாரோ ஒருவன் நினைவை சுமப்பான் இதுதான் நியதி


Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பசேலென்று குடைபோல் விரிந்திருந்த ஆலமரம் விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது வழிப்போக்கருக்கு ஓய்விடம் சிறார்களுக்கு ஒரு சிறுவானம் திடீரென சந்தையாகும் ஆலடி சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம் ஆச்சியும் அறிந்த இடம் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும் காலையும் மாலையும் ஊர்சுற்றி மதியம் இங்கு சந்திப்போம் இன்று பிரதேசபை தறித்துவிட்டது வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும் எங்களுக்குள்ளும் ஊருக்கே இணைப்பாக இருந்தது இன்றில்லை நாளை பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர் பறவைகள் தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

மனிதருள் வேற்றுமையில்லை அடங்கி வாழ போவதில்லை அகங்கார அதிகாரத்திற்கு எதிர் சமதர்மம் வாழ்வின் உயிர்


Share/Save/Bookmark
உன் நினைவில் இருந்தேன் பிறக்கடித்தது எங்கோ இருக்கிறாயா? மூடநம்பிக்கை எட்டிப்பார்த்தது கனவிலும் வந்தாய் கண் திறக்க மாயமானாய் தொடர்புகளில் நீ இல்லையெனினும் என் இயங்கியலை ஆக்கிரமிக்கிறாய்


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வேடர்கள் வருகிறார்கள்

வன அமைதியை கிழித்து செல்கிறது ஒரு பறவையின் கூச்சல் வேடர்கள் வருகிறார்கள் வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது தொங்குநாக்குகளுடன் நாய்கள் அங்குமிங்கும் திரிகின்றன நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை இறைச்சியோடு வரும் வேடர்களை வரவேற்கும் இருகால் உயிரினங்கள் வேடரின் நாய்களை கவனிப்பதில்லை


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வயலை தொடர்ந்திருந்தது பற்றைக்காடு சிறார் எங்களுக்கு வயல் ஒரு உலகம் அக்காடு பிறிதொரு உலகம் வயலின் குளிர்மையில் ஒன்றாவோம் காற்றில் சிலிர்ப்போம் மிதப்போம் செம்பகம் மைனா கிளியென பறவைகள் எமை பரவசப்படுத்தும் முயல்களை துரத்துவோம் பற்றைக்காட்டில் பனை கொய்யா ஈச்சமரங்கள் இன்னும் பல அணில் உடும்பு என அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிய பல காட்சிகள் எதுவும் இன்றில்லை


Share/Save/Bookmark

சனி, 6 ஏப்ரல், 2024

காணாமல் போனவனின் தாய்

2008 ஆம் ஆண்டு காலம் அவன் தாயாருடன் மல்லாவியில் வசித்தவன் வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை உறவென்று ஒரு வளர்ப்புநாய் குடிசை முன்குந்தில்த்தான் அவன் உறங்குவான் காலடியில் நாய் படுத்திருக்கும் அவன் இல்லையெனில் முற்றத்தில் விழித்திருக்கும் இறுதி யுத்தத்தில் மல்லாவி இடப்பெயர்வன்று நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி அங்கேயே இறந்து போயிற்று 2024 ஆம் ஆண்டு காலம் அன்று தொட்டு இன்றுவரை மகனை தேடி வவுனியா சென்று கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை அழுவதற்கு கண்ணீர் இல்லை நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று மூச்சிழந்து வீழ்ந்தாள் காணாமல் போனவனின் தாய் அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின் அதன் வேதனையை யார் அறிவார்? அழும் குரலின் கேரலை கேட்டிருக்கிறாயா? துயர்ப்பாடலில் நடுங்குகிறது சுற்றம் தாயே ! இனி உனக்கு சோகம் இல்லை நீதியோடு உன் உடலும் எரியட்டும்


Share/Save/Bookmark

வியாழன், 4 ஏப்ரல், 2024

வாழ்க்கையில் கணம் இல்லை யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார் இன்று அப்படியல்ல இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில் ஒற்றைக்கையை வைத்து உன்னை அடையாளம் கண்டேன் பசித்த வயிறுக்கு சோறு போட்ட கையம்மா சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய் அன்பை பரிசளித்தார் கடவுள் சாகாவரம் இளமையில் இனிப்பாகவும் முதுமையில் தனிமையில் கசப்பாகவும்


Share/Save/Bookmark

புதன், 3 ஏப்ரல், 2024

மகுடியில் எழும் இசைக்கு பாம்புகள் நாடிவருகின்றன இசையென்பது யாரையும் கட்டிப்போடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இசை பிடிக்கும் விலங்குகளுக்கும்தான் இசை வந்த திசையில் காற்றில் உலாவும்


Share/Save/Bookmark

சனி, 30 மார்ச், 2024

பாதங்களை போரில் தொலைத்தவன் சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன் துயரங்களை வெளிக்கு மறைத்தாலும் மனது வேர்த்துவிடுகிறது இப்போதெல்லாம் நினைவுகள் மறந்துபோகின்றன ஆனாலும் என் அண்ணனுடன் கதைக்க நிறைய வைத்திருக்கிறேன்


Share/Save/Bookmark
நாய் குரைக்கிறது பாம்பாகவும் இருக்கலாம் கள்ளனாகவும் இருக்கலாம் பாட்டி இல்லை குரைத்தலின் சத்தத்தில் சொல்லிவிடுவார் படபடப்பாக இருக்கிறது யாருக்குத்தெரியும் காற்றுக்கு ஆடும் மரக்கிளையின் நிழலை பார்த்துத்தான் நாய் குரைக்கிறது


Share/Save/Bookmark

வெள்ளி, 29 மார்ச், 2024

ஒளியும் இருளும் குழைந்திருந்த மாலைப்பொழுதில் பறவைகளின் வரிசை குலையாதிருந்தது குருதி உண்ணும் நுளம்புகளை போல மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன மின்மினி வெளிச்சத்தில் சட்டென உயிர்கள் பிரிந்தன முடிந்த நாட்களைப்போல போன உயிர்களும் மீளவருவதில்லை உயிர்த்தானம் கொடுக்க வரிசைகுலையா அவதானம் தேவை குழந்தையொன்று பொத்து பொத்தென நடந்து வரும் சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது புதிய எதிர்பார்ப்புகளோடு


Share/Save/Bookmark
முள்ளிவாய்க்கால் இறுதிநாள் இளைய போராளிதான் நீ அரச கட்டுப்பாட்டுக்குள் யாவும் அடங்கிக்கொண்டிருந்தது கைக்குழந்தையை இருகைகளால் தூக்கி முத்தமிட்டு மனைவியுடன் அனுப்பிவிட்டு போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய் அவர்கள் போய்முடியும்வரை தோளில் இருந்த துப்பாக்கியை கைகளில் மாற்றியபடி ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய் ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம் பிரிந்து நீ போனாய் சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய் நான் உனைப்பார்க்க நீ கையசைத்துவிட்டு போனாய் பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை


Share/Save/Bookmark
ஒரு உயிர்க்கனவிருந்தது கனவை நனவாக்க துயில் தொலைத்து இயங்கினோம் கனவு வெறும் நினைவாகியது வாழும் கணங்கள் சுமையாகியது சீர் துயிலற்ற வாழ்வில் கனவில்லை


Share/Save/Bookmark

வியாழன், 28 மார்ச், 2024

மயானம் மயான அமைதிதான் இடைக்கிடை தேம்பி வரும் அழுகை சத்தம் ஆற்றுகையின் நொடிகள் அல்லது துயர்க்கிடங்கின் கிளறல் வலியின் கட்டுடைப்பு பெத்த வயிறின் ஒலி


Share/Save/Bookmark
குழந்தைகள் முதல்முதலாய் கண்திறக்க பார்த்திருக்கிறேன் முதியவர் இறுதியாய் கண்மூடப்பார்த்திருக்கிறேன் பருவம் மாற செயல் மாறுவதை பார்த்திருக்கிறேன் யாம் அறியாமல் பிறந்தாலும் பிரிவினையை பார்த்திருக்கிறேன் பிரசவவலி குழந்தையை கண்டவுடன் மறைந்துவிடும் எங்கள் வலி புற்றெடுத்துக்கொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

சனி, 23 மார்ச், 2024

காலை விடிகிறது

அம்மா அன்பிலான அழகான கவிதை ஆண்டவன் எழுதியது கவிஞனின் குழந்தை கவிதையா ? வறுமையா? பட்டிமன்றில் கவிஞன் காலை விடிகிறது மொட்டு பூவாக மலர்கிறது இலைமீது பனித்துளி முகப்பரு போல சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட மனதில் கோலம் படிகிறது நீலக்கடல் வானில் ஏறுகிறது கடலலைகளில் மனம் ஏறி இறங்குகிறது கைவிடப்பட்ட ஒற்றைப்படகில் என் இதயம் இருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 21 மார்ச், 2024

உங்கள் நண்பனல்ல

எந்த இலட்சியத்திற்காய் உங்களை தந்தீர்களோ அந்த இலட்சியத்திற்கு மாறாய் போபவன் உங்கள் நண்பனல்ல விலைபோகமுடியாதவனே போராளி கூட்டுக்குள் வாழ்ந்தாலும் ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 மார்ச், 2024

நிலம் பறிபோகிறது குடியிருப்புகள் எழுகின்றன மதத்தின் பெயரில் ஆக்கிரமிப்பு பெரும்பான்மை, அரசபலம், படைகள் காக்கைவன்னியர் , ஒற்றுமையின்மை பூர்வீகமண்ணில் இனமழிகிறது யாரிடம் முறையிடுவது? ஏதும் சொல்வதற்கில்லை


Share/Save/Bookmark
மரங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது பறவைகளை அழைத்ததாய் மரங்கள் மறுக்கின்றன பறவைகள் காவிய விதைகள்தான் மரங்களாயினவாம் மரங்களை சோடிக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்க்கிறான் வழிப்போக்கன்


Share/Save/Bookmark
அவன் என்னோடு பள்ளியில் படித்தவன் வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான் ஒரே அடிவாங்குவான் அழுவான் அடுத்தநாளும் அப்படித்தான் வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான் ஊரடங்கு நேரத்தினுள் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான் அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ அது தெரிந்திருக்கவில்லை பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை காலப்புண் ஆறுவதில்லை


Share/Save/Bookmark

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல

நான் எழுதியதை நீயோ நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை நண்பா ! நீ புலம்பெயர முடிவெடுத்தாய் புகையிரத நிலையம்வரை வந்தேன் நாற்பது வருடங்கள் நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும் நான் குருதி தொட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய் வலியின் விசாலம் நீ அறியாய் பல உயிருறவுகளை பறிகொடுத்தேன் இனி புது உலகம் சாத்தியமில்லை நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல


Share/Save/Bookmark

திங்கள், 11 மார்ச், 2024

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

என் அனுபவங்கள் எனக்கானவை அதேபோல் உங்களதும் நெருப்பு மழைக்குள் இறங்கியும் ஏதோ ஒரு கரை சேர்ந்தேன் உள்காயங்களோடு ஆற்றுப்படுத்த இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன் நினைவு சோரும்வரை இழப்புகளின் வலி திணறி எழ மூச்சுத்திணறி மீள்வேன் யாருமறியாமல் நாளையும் விடியுமா? கசியா இரகசியமாய் மூடியிருந்த வாழ்வு எரிந்துபோகுமா? இதயசிறகு படபடக்க உயிர் காவுகிறேன் வழிப்போக்கனாக மலையடிவாரத்தில் ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன் வழிமாறிய குயிலொன்று அதை பாடுகிறது இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்


Share/Save/Bookmark

சனி, 2 மார்ச், 2024

நிலவில்லை கதைப்பதற்கு வேறு கதையில்லை துணையுமில்லை காரிருளில் ஆந்தையின் கண்கள் பயமில்லை இது யாராக இருக்கும் ? விடியும்வரை அசையாமல் இரு தாய் நிலத்து ஆத்மாவாக இருக்குமோ?


Share/Save/Bookmark

புதன், 28 பிப்ரவரி, 2024

மௌனம் புதைந்திருக்கிறது கவலைக்கடலுக்குள் அஞ்சலி சகோதரா! மரணம் எல்லோருக்கும் வரும் சிலருக்கு ஆயுள் கணக்கிலில்லை காலத்தை மீறி வாழ்வர்


Share/Save/Bookmark

சனி, 24 பிப்ரவரி, 2024

சத்தமில்லாத யுத்தம்

இரத்தம் குடிப்பது யுத்தம் அடக்குமுறையும் ஆணவமும் யுத்தத்தின் விதை சமநீதி இல்லா உலகில் யுத்தம் தளைத்துவிடுகிறது கல்வி செல்வம் வீரம் யுத்தத்திலும் ஊட்டச்சத்து யுத்தம் இல்லையெனில் இன்று பலநாடுகள் இல்லை சில இனங்கள் இருந்திருக்கும் யுத்தமில்லா பூமி ஓர் கனவு நீதி அரசாண்டால் அது நனவு நவீன உலகில் சமாதானம் ஒரு பொறி சத்தமில்லாத யுத்தம்


Share/Save/Bookmark

வியாழன், 22 பிப்ரவரி, 2024

அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்

கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன எழுவானம் சிவந்து கொண்டிருந்தது நீ கையசைத்துப்போனாய் - ஏதோ சொல்லவந்தும் சொல்லாமல் போனாய் நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை இடைவெளி அகன்றுகொண்டிருந்தது நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன் மாலைநேரம் கடலோரம் நின்றுகொண்டிருந்தேன் கடல் அலைகளற்று இருந்தது "நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது அடிவானில் செவ்வானம் மறைந்தது விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன் அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.


Share/Save/Bookmark

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

அவன் அப்படியொன்றும் அதிகம் கேட்கவில்லை சில்லறை இருந்தால் தாங்கோ சாமி பாவம் நவீன மகிழூந்தில் வந்திறங்கியவரிடம் அது இருந்திருக்க சாத்தியமில்லை துளிர்த்த போது விரிந்த போது தெரிந்த ஓளி பழுத்த இலைகள் வீழ்ந்த போது இல்லை இருந்தும் சருகாகி உரமாகியது தாய்மண்ணில்


Share/Save/Bookmark
சோ வென துரத்தி வருகிறது மழை கொடியில் காய்ந்த காயாத உடுப்புகளுடன் தாவாரத்திற்குள் ஓடி வர சொர் என பொழிகிறது தாய்மண்மடி வாசம் மூக்கினுள் மழைவிட்ட பின்பும் மனதிற்குள் தூவானம்


Share/Save/Bookmark

வியாழன், 15 பிப்ரவரி, 2024

பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது காலம் ஓடிக்கொண்டிருக்கிறது முதுமை வெளிவாசலில் நிற்கிறது நினைவுகளில் மட்டும் சில படங்கள் உணவுக்கும் சுவையில்லை எதுவும் கூடவரப்போவதில்லை கடைசியாய் கண்கள் மூடுகையில் எந்த படம் ஓடியிருக்கும் ?


Share/Save/Bookmark
நீண்ட கனவுக்குப்பின்னால் எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை பெருங்கனவு கனவானதும் இழப்புகளின் ஊமைக்காயம் இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு மருந்தில்லை முடிவுமில்லை பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன் பனிப்படர்க்கையின் வெண்நிறம் ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது மூச்சு விடவும் ஆவிவருகிறது யாவும் உறைந்திருக்க கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது சொல்வழி கேளாதவன் போல குருதிற்குள் வாழ்ந்த என்னிடம் "குருதியின் நிறம் சிகப்பு" என சொல்கிறான் ஒருவன் ஓ! அப்படியா என நகர்கிறேன் ஆச்சரியமாய் பார்க்கிறான் இரக்கமற்றவன் என நினைக்கிறான் பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில் எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்


Share/Save/Bookmark

சனி, 10 பிப்ரவரி, 2024

பறவை ஒன்று பறந்துபோகிறது கூடவே அதன் நிழலும் என்னை கடந்து போகிறது செய்தியொன்றை தந்துவிட்டு வானில் சிறகடித்துபோகிறது இருள் வருகிறது வீடு போ ! நாடு இல்லாதவனுக்கு ஏது வீடு? மஞ்சள்ஒளி அந்திவானை தந்துவிட்டு கடல் மீது குந்தியிருக்கிறது சூரியன் எச்சினமும் மறைகிறது அவ்வழகில் இக்கணம் தொடராதோ? சூரியனையும் விழுங்குகிறது கடல் துயரில் அமிழ்ந்து கண்களை திறக்க நிலாவொளி ஆறுதல் தருகிறது அதில் அம்மாவின் முகம் தெரிகிறது


Share/Save/Bookmark
மெல்லிய குளிரில் மனம் குளிரும் அதீத குளிரில் மனம் உறையும் உடலும் ஒருநாள் நிரந்தரமாய் குளிரும் குளிரும் வாழ்வில் வெப்பமும் இருக்கும்


Share/Save/Bookmark

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

எனக்குள் உண்மையாக வாழ்தல் என்பதே என் நடைமுறை யார் மீதும் கோபதாபம் இல்லை வாழ்வின் நிச்சயமின்மையை உன் போல் நானும் அறிவேன் எதுவும் எப்போதும் நடக்கலாம் ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்துவோம்


Share/Save/Bookmark

சனி, 3 பிப்ரவரி, 2024

அன்று காடு வெட்டி களனியாகி செழித்திருந்த ஊர் ஆட்டுக்குட்டிகள் மே மே சத்தமிட தாயாடு ஓடிவந்தது ஒளித்திருந்த ஓநாயொன்று அன்று தாயாடையிழந்தோம் குட்டிகள் தனித்தன வலி சுமந்து வளர்த்தோம் இன்று அநாதை இல்லங்கள் அங்கும் இங்கும் எங்கும்


Share/Save/Bookmark
அடர்ந்த வனம் துள்ளித்திரிந்த மான்கள் தெத்திய முயல்கள் தொங்கிய குருவிகளின் கூடு யாவும் பொசுக்கிப்போயிற்று காட்டுத்தீயின் கோரம் புகைந்து கொண்டிருக்கிறது (அஸ்த) மனம்


Share/Save/Bookmark

இறுதி கையசைப்பின் நினைவ

பஞ்சனைக்குள் வாழ்ந்த நீ நெருப்பாற்றுக்குள் போய் வந்தாய் ஒவ்வொரு தடவையும் போய் திகிலூட்டும் கதைகளோடு வந்தாய் சிலதடவை விழுப்புண்ணோடும் போனாய் வந்தாய் கதைகளற்று வானமே இடிந்து எம்மீது வீழ்ந்தது இறுதி கையசைப்பின் நினைவு அம்மாவிடம் இன்னும் உயிரோடு இருக்கிறது ஏதோ ஒரு செய்தியோடு


Share/Save/Bookmark

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

கேட்டது குழந்தை

கொட்டும் மழை நீரை சேமிக்க முடியவில்லை கேட்டது குழந்தை எப்படி என் தாகம் தீர்ப்பாய்? உடல் உழைப்பில்லை கண்டதெல்லாம் உண்று நோய் இறக்குமதி கேட்டது குழந்தை எப்படி என்னைக்காப்பாய்?


Share/Save/Bookmark

செவ்வாய், 30 ஜனவரி, 2024

மீளவும் வரப்போவதில்லை

புகைப்படம் பார்க்கிறேன் கண்கள் அசைய மறுக்கிறது நீ உயிராய் என் முன் யாவும் காட்சியாய் விரிகிறது கனதியான வாழ்வு மீளவருகிறது ஆவலில் உற்றுப் பார்க்கிறேன் நீயில்லை எதுவும் நிஜமில்லை கண்ணீர்ப்படலம் உன்னை மறைக்கிறது பறவையொன்று உள்ளங்கையில் இறங்கிற்று சிறகினில் கவிதையினை கிறுக்கிறேன் அது உயர பறக்கையில் பாடலாகிறது நண்பா! நீ மட்டுமில்லை நீயும் நானும் உலாவிய ஒழுங்கைகள் வடலி நிறை பனை வெளி உணவு தரும் குடிசைகள் மீளவும் வரப்போவதில்லை


Share/Save/Bookmark


Share/Save/Bookmark

திங்கள், 29 ஜனவரி, 2024

மலரன்னை " யாழ் முத்து" விருது பெறுகிறார்



Share/Save/Bookmark

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

வேரறுந்த வாழ்வில் வாசமில்லை

என் சிறுபராயம் தாய்வழி பேரனுடனான சம்பாஷணை இலக்கியத்தின் ஒரு முகம் பூர்வீகம் மறுமுகம் வாழ்வியல் அதன் அகம் தோட்டமும் துரவும் வண்டிலுமாய் எனக்குள் ஓடுகிறது பந்தம் மூதாதையர்களை தேடும் பயணம் என்னோடு முடிந்துவிடுமா? புலம்பெயர்ந்ததின் விளைவு எங்கு போய் முடியும்? முதுசொம்களை தொலைத்த வாழ்வில் பவுசு இருந்தென்ன? இழப்பதற்கு எதுவுமில்லையெனினும் தாய்நிலம் துறவாதீர் ! தாயைப்போல யாருமில்லை வேரறுந்த வாழ்வில் வாசமில்லை தாகத்திற்கு கானல் நீர் தீர்வுமில்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 26 ஜனவரி, 2024

எனது வாழ்விடம் காணாமல் போயிற்று

ஒரு சிறிய ஊர் அநேகருக்கு அநேகரை தெரியும் ஆள் ஆளுக்கு பட்டப்பெயர்கள் இருக்கும் பொலிஸ் வந்ததில்லை யாருக்கும் ஒன்றென்றால் ஊரே ஒன்றாகும் பகட்டுமில்லை பட்டினியுமில்லை ஆசிரியர் மாணவரை தந்தை பெயர் சொல்லியே அழைப்பர் செருப்புகளற்று நடந்துதிரியும் பட்டம் ஏற்றும் மணல் வெளி பறவையொன்று வானத்தில் படர்ந்து கடலில் இறங்கி வள்ளத்தில் ஏறிற்று என்ற புனைவற்ற கிராமம் பறவைகள் மாடுகளில் மரங்களில் முற்றத்தில் நாளும் கூடும் சந்தையோடு கோலாகல கோயில் திருவிழாக்களும் நாடகங்களும் தாச்சி விளையாட்டும் வேறு என்ன வேணும்? பொய் இல்லை போட்டி இருக்கும் வண்டில்ச்சவாரி கிட்டியடியென நாளும் பொழுதும் நீளும் எனது அழகிய வாழ்விடம் ஒரு பகலுக்கும் இரவுக்கும் இடையில் காணாமல் போயிற்று


Share/Save/Bookmark

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இழப்பதற்கும் எதுவுமில்லை

மனதிற்குள் சுழலும் கூரான சக்கரம் 

சதா உழலும் நெருடும்வலி 

யாரோடும் பகிரா காயம் 

உயிரிருக்கும்வரை தீமிதிப்பு 


கனவுமில்லை இதயமுமில்லை 

சிரிப்பதிலும் உயிரில்லை 

நினைப்பதுபோல் நிஜமுமில்லை 

இழப்பதற்கும் எதுவுமில்லை




Share/Save/Bookmark

சனி, 20 ஜனவரி, 2024

இடைநடுவில் 

நின்றுபோன தொடர்பாடல் 

எங்குபோனாய் நீ ?

நெருக்கடியில் 

நொறுங்கிப்போன இதயம் 

சரிசெய்துவர 

உன் தொடர்பு இல்லை 

விடைகள் இல்லா கேள்விகள்  

நீர்க்குமுழிகளாய் பெருத்து உடைகின்றன 

நிழலுக்குள் ஒளிந்திருக்கும் ஒளி போல 

எனக்குள் நீ இருப்பாய் 

இப்படிக்கு 

விடியாத காலையில் 

விடைபெற்றுப்போனவன் 



Share/Save/Bookmark

மனதில் வெட்கையெனினும் வளவினுள் வெள்ளம்

 நான் சிறுவன் 

வேலியில் ஒரு பெரிய பூவரசு 

அம்மம்மாவின் வயதிருக்கும்

பச்சை இதயமாய் விரிந்த இலைகள் 

மஞ்சள் இலைகளின் நிலக்கோலம் 

இலைகள் ஆட்டுக்கு குழை  

எங்களுக்கு பீப்பீ 

சிறார்களுக்கு உள்ளங்கை கோப்பை 

பூவரசு அணில்களின் கோட்டை   

புலுனிகளின் கச்சேரி மேடை 

கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் குளிர்மை     

பூவரசின் நீண்டகிளைகள்

கதியால்களாகும் நம்பிக்கை 

பூவரசம்பூ பூவுலகின் அதிசயம் 

  

பிறிதொருநாள் 

பூவரசு பட்டு விறகாகியிருந்தது

அந்த இடத்தில மதில் ஓடிற்று 

நிழல் இல்லை 

மதில் மேல் பூனை 

மனதில் வெட்கையெனினும்

வளவினுள் வெள்ளம்         



Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஜனவரி, 2024

"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"

 "கவிதையை எழுதாதே 

கவிதையாய் வாழ்"

 

நண்பா!

நீ வாசிக்கமுடியாமல் போன 

கவிதையை 

நான் எழுதப்போவதில்லை 

அதுவும் 

உன்னோடு போனதாய் இருக்கட்டும் 

உன்னருகில் வரும் நாள் 

உனக்காய் நான் எழுதுவேன் 

தோழ மை கொண்டு 




Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இன்னும் நாம் உயிர்க்கவில்லை

வாழவேண்டிய தோழன் வீழ்ந்தான் 

ஒவ்வொரு தோழராய் இழந்தபடி - தினம்   

மனம் பிசையும் வேதனையை சுமந்தபடி 

தணல் மீது தொடர்ந்தும் நடந்தோம் 

மயிரிழையில் உயிர்தப்பி தப்பி

எதற்கும் தயாராய் உழைத்தோம் 

உலகமறியா அர்ப்பணிப்புகளுடன் 

ஒருநாள் யாவும் முடிந்தாயிற்று 

எதுவுமில்லை 

யாரும் காணா இருள் 

அழக்கூட முடியவில்லை 

வெறும் துடிக்கும் இதயத்தை 

கையிற்குள் இறுக்கிப் பொத்தியபடி 

வாழும் பிணமாக ஊர்ந்தோம்  

இன்னும் நாம் உயிர்க்கவில்லை  



Share/Save/Bookmark

 போராளியாதல் 

ஒன்றும் இலகுவல்ல 

புலம்பெயர்வதை போல 

பாசம் கனவு உதறிப்போதல் 

ஒன்றும் எளிதல்ல 

அன்றே இறப்பது போல

நாடிழத்தல் 

ஒன்றும் இலகுவல்ல 

கண்களை இழப்பது போல    



Share/Save/Bookmark

சனி, 13 ஜனவரி, 2024

அவன் சரணடையமுன் நெஞ்சோடு அனைத்திருந்த மகனை மனைவியிடம் கொடுத்தான் மகனோ அவனின் சட்டையை பிடித்திருந்தான் தாய்தான் அந்த பிடியை இளக்கினார் தாய் மனைவியிடம் விடைபெற்று மகனை முத்தமிட்டு விட்டு பேரூந்தில் ஏறியவன்தான் எந்த செய்தியும் இல்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஜனவரி, 2024

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள்

 வழுக்கையாறு வாய்க்காலிருந்து 

கூப்பிடு தூரத்தில் மூன்று வயல்கள்

வரம்புக்கட்டுவதும் மூலைகொத்துவதும்

நெல் விதைப்பதும் களைபிடுங்குவதும் 

வயலின் பசுமையில் நாங்களும் இருந்தோம் 

இருபோக விதைப்பு 

சிலகாலம் ஒருபோகமானது 

மூன்று வயல்களிலும் 

வெவ்வேறு நெல்லினங்கள் விதைப்போம் 

ஒன்று பிழைத்தாலும் மற்றையது கைவிடாது 

நானறிந்து நட்டம் ஏற்பட்டதில்லை    

இறுதி பலவருடங்கள் 

யாரோதான் செய்தார்கள் 

செய்தார்களோ இல்லையோ தெரியவில்லை  


பயிர்களோடு சேர்ந்து அசையும் மனம்

புலுனிகளும் வேறு குருவிகளும் பாடும் இசை 

வயலோடும் வயலை சுற்றியும் நட்புவட்டம்      

முதல் நெல்லில் பொங்கும் பொங்கல் 

அரிசிமா மணக்கும் கொழுக்கட்டை 

அறுவடையும் சூடடிப்பும் 

வைக்கோலும் அந்த சுனையும் 

எப்படி மறப்பது?


மூன்று தலைமுறையின் 

வியர்வை கலந்த மண் 

பார்க்க ஆட்கள் இல்லை 

வயல் விற்பனையாயிற்று 

வயலில்லா முதல் பொங்கல் நெருங்குகிறது 

நெஞ்சினுள் ஒரு நெருஞ்சிமுள் 

வயல்கள் வீடாக மாறும் காலம் 



Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 அம்மா!

ஒரு அதிசய உலகம்தான் 

அம்மாவின் பாசவலைக்குள் சிக்கியிருக்கும் பிள்ளைகள் 

அம்மா நித்திரை கொள்வதை காணுவதில்லை 

நோய் நொடியிருந்தாலும்  

அம்மா குடும்பத்திற்காக இயங்கிக்கொண்டிருப்பார் 

அவரது துயர் யாரும் அறிவதில்லை 

அம்மா பிள்ளைகளை நிமிர்த்திவிடும் நெம்புகோல் மட்டுமல்ல 

   

தீரா கடனுடன் வாழும் பிள்ளைகள்  



Share/Save/Bookmark

 அரசியல் பகை நிரந்தரமுமில்லை 

தற்செயலானது  தற்குறியானது 

ஆபத்தானது  அதிசயமானதும் - அது 

மிகைப்படுத்தலால் உறங்குவதுமில்லை  

கொள்கைகளோடு சேர்ந்ததுமில்லை 

கூலிகளால் தீர்மானிக்கப்படுகிறது 

மதம் மதங்கொள்வதும் 

சிறிய இனம் இரையாவதும் 

இன்று நேற்று வந்ததில்லை 

உரிமையை பறிப்பதில் தொடங்கி 

உயிரெடுப்பதில் முடியும் 



Share/Save/Bookmark

சனி, 6 ஜனவரி, 2024

 அவரவருக்கு 

அவர் இலட்சியம் / எதிர்பார்ப்பு பெரியது 

அவர்களது வாழ்வு அவர்களுக்கானது 

அடுத்தவர் தலையிடுவது முறையல்ல

எல்லாராலும் எல்லாம் செய்யமுடிவதில்லை 

சொல்லும் செயலும் ஒன்றாயிரு  

தனித்திருந்தாலும் தனித்துவமாயிரு    



Share/Save/Bookmark

புலம்பெயர்வு

 புலம்பெயர்வு 

வசதி வாய்ப்புகளை தந்திருக்கலாம் 

ஏன்? 

(போலிப்)பெருமையை கூட தந்திருக்கலாம் 

இருந்துமென்ன 

அவரது சந்ததி அடையாளம் இழக்கும்நாள்

வெகுதொலைவில் இல்லை  

உழைப்பின் வலி தீரமுன்      

கொடுக்கும் விலை கொடியது

புலம்பெயர்ந்தோர் புலன்பெயர்ந்தவரல்ல 

நீரும் எண்ணெயுமாய் அங்கும் இங்கும்     



Share/Save/Bookmark

வெள்ளி, 5 ஜனவரி, 2024

 குழந்தைகளுடன் 

நட்பாகும் மருத்துவன் 

வாழ்நாள் பேறுபோல

குழந்தை வளர வளர 

நட்பின் வயதும் வளரும் 

குழந்தை பெரியவராக 

அவரது உலகம் வானத்தில் விரிந்திக்கும் 

நட்சத்திரங்களாய்

குழந்தையும் மருத்துவனை மறப்பதில்லை 

மருத்துவனும் குழந்தையை மறப்பதேயில்லை  

நீண்ட இடைவெளியில்  திடுதிப்பென சந்திக்கையில் 

குழந்தையே மருத்துவனாகிறான்

மருத்துவனே குழந்தை போல்

ஒரு நோயாளியாக     



Share/Save/Bookmark
Bookmark and Share