வியாழன், 12 செப்டம்பர், 2013

மின்னஞ்சல்




இன்று காலை எனக்கு காந்தன் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பும் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.என்னை ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கிறீர்கள்?
அன்புடன் காந்தன் என்று மட்டும் இருந்தது.எனக்கு காந்தன் என்ற பெயரில் பலரை தெரியும் .அதில் சிலர் போராளிகள் அவர்களில் சிலர் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள்.நான் அவர் யார் என்று சரியாக அறியாததால் பதிலளிக்கவில்லை.
இன்று வந்த மின்னஞ்சலை திறந்தேன்.என்னை மறந்துவிட்டீர்களா?
முள்ளிவாய்க்காலின்  இறுதி நாளின் போது நான் தடி ஊன்றி  ஊன்றி
வந்தேன்.நீங்கள் ஒருவரை கூப்பிட்டு ஊன்றுகோல் ஒன்றை எடுத்து தந்தீர்களே. அந்த ஊன்றுகோலில் கூட இரத்தம் பட்டிருந்தது.நீங்கள் அதை கழுவி கொடுக்கச் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?. அன்புடன் காந்தன் என்றிருந்தது.

இந்த சம்பவம் என் ஞாபகபரப்பில்  ஏதோ ஒருமூலையில் கிடக்கிறது.ஆனால் இந்த காந்தனின் முகம் ஞாபகத்தில் இல்லை.வேறு காந்தர்களின் முகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகிறது.


Share/Save/Bookmark
Bookmark and Share