சனி, 8 ஜூன், 2013

சின்ன சின்ன ஞாபகங்கள்

              

வன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு
மத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர்.
உழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்
சுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.
வன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் "விழி" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய்  இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,
எல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.
இதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞாபகத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய்   பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன்.   பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.
எங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.  அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை   உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும்  புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து விசுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.

 ஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி
செய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் விலையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை.  இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.

பாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்




-          ஓவியன் -



Share/Save/Bookmark

ஞாயிறு, 2 ஜூன், 2013

அம்மா சுகமாய் இருங்கோ

இணையங்களைப் பார்க்க மனம் மேலும் குழம்பியது.முன்பு எல்லாம் மனச்சோகம் வந்தால் துயிலும் இல்லம் போய் சிறிது நேரம் மரநிழலில்  இருந்து வந்தால் மனம் அமைதியாகும்.இன்று என்ன செய்யலாம் யோசிக்க படக் என்று அந்த ஞாபகம் வந்தது.சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மாவீரனின் தாயின் தொலைபேசி இலக்கம் கிடைத்திருந்தது.இன்றைக்கு அந்த அம்மாவோடு கதைப்போம்.
அம்மா அம்மா நான் என்னை அறிமுகப்படுத்தினேன்.
ஐயோ என்ர பிள்ளையே ! எப்படியிருக்கிறாய்?.நான் கேட்க வேண்டிய கேள்வியை அவ கேட்டா.
நான் நல்லா இருக்கிறன் அம்மா நீங்க எப்படி அம்மா.
நான் இருக்கிறன் .எனக்கு ஒரு குறையும் இல்லை.என்ர வீட்டுக்கு வந்திட்டன்.காலையில ஒருக்கா சமைச்சா மூன்று நேரமும் சாப்பிடுவன்.
தேங்காய் பொறுக்கி போடுவன்.ஓலை பின்னுவன். என்ர பாடு பிரச்சனை இல்லைத்தம்பி.நான் போன மாதம்தான் இந்த போனை வாங்கினனான்.அப்ப பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் கேட்டவை உனக்கேன் உதை. உன்னோட யார் கதைக்க போயினம் என்று.எனக்கு தெரியும் என்ர பிள்ளைகள் எங்காவது இருப்பாங்கள் என்று.
அம்மாவுக்கு ஒரு பெடியன்தான்.மனுசனும் பெடியனுக்கு பத்து வயதாய்
இருக்கும் போது இறந்து போனார்.அவர்களுக்கு பொருளாதார பிரச்சனை பெரிதாய் இருக்கவில்லை.
பெடியன் படிப்பிலையும் விளையாட்டிலையும் கெட்டிக்காரன்.அமைதியானவனாய் இருந்தாலும் துடியாட்டக்காரன்.தாயில் கொள்ளை பாசம் வைத்திருந்தான்.தாயும் அவனில் உயிரையே வைத்திருந்தாள்.முதலில் அவன் பதின்நான்கு வயதில் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.அவனது வயதைக்காரணம் காட்டி
வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.பின்பு பதினாறாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான் வீட்டில் ஒரு பிள்ளை என்பதற்காய்.இம்முறைதான் நான் அவனது வீட்டிற்கு முதல் தடவையாய் போயிருந்தேன். பின் இரண்டாம் தடவை அவனது வீரச்சாவுக்கு போனேன்.  
அவன் தனது பதினெட்டாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான். பயிற்சி முடித்து விடுமுறையில் நின்றபோது என்னைச் சந்திக்க வந்திருந்தான்.முழுமையாய் ஒரு போராளியாய் இருந்தான்.அளவாக கதைக்கின்ற அந்த பண்பு நிறைந்த போராளியின் மனதில் தாயின் சோகம் குத்தியிருந்தது.நானில்லாட்டிலும் அண்ணை (தலைவர்) என்ர அம்மாவைப்பார்ப்பார்.அவனில அந்த திருப்திஇருந்தது.
நான் ஆலோசனை கூறினேன்.நீர் ஒரு பிள்ளை என்றதால பின்னணி வேலைகளைச் செய்யலாம்.இடைக்கிடை அம்மாவையும் போய்ப் பார்க்கலாம்.நான் கதைத்துப்பார்க்கிறேன் என்றேன்.வேண்டாம் அவன் முழுமையாய் மறுத்துவிட்டான்.அவன் களமுனையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டான். 
இறுதியாய் அவனை முகமாலையில் பின்னனிப்பிரதேசத்தில் சந்தித்தேன்.நான் நிற்பதை அறிந்து அவன் சந்திக்க வந்திருந்தான்.மிகக் கலகலப்பாய் இருந்தான்.அம்மாவை போய்ப்பார்த்தீரா? என்றேன்.எங்க சரியான வேலை என்றான். நான் ஒரு வெள்ளைத்தாளைக்கொடுத்து
கடிதம் எழுதித்தாரும் நான் அம்மாவுக்கு கிடைக்க ஒழுங்கு செய்கிறேன் என்றேன். அவன்  சுமார் ஒருமணித்தியாலத்திட்கு  பிறகு ஏதோ எழுதி மடித்துத்தந்தான்.நான் அதை தாயிற்கு கிடைக்க ஒழுங்கு செய்தேன்.
அதுதான்  தாயிட்கான அவனது கடைசி செய்தியாய் போயிற்று.
அம்மா ஒரு இடமும் போறதில்லையோ?
இல்லைத்தம்பி பிள்ளையை விதைச்ச இடமும் இல்லை என்று பெரு மூச்சு விட்டவ. என்னைமாதிரி இன்னும் ஒரு ஆள் இருக்கிறா தம்பி அவவுக்கு உன்னைத்தெரியும்.அவவுக்கும் ஒரு பிள்ளைதான் அந்தப்பிள்ளை சரணடைந்து எங்கை என்று தெரியாது.அவ தேடாத இடம் இல்லை.இப்ப என்னட்டைதான் இடைக்கிடை வருவா .அவவின்ர போன் நம்பரைத்தாறன்   அவவிட்கும் எடு தம்பி என்று நம்பரைத் தந்தா. 

மகன் வைச்ச மாமரம் , கொய்யாமரம் நல்லாய்க்காய்க்கிதாம்  . சுத்தி இருக்கிற எல்லாச் சனத்திட்கும் கொடுக்கிறதாம்.சின்னப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிய ஒருக்கா இந்தப்பக்கம் வந்துதான் போவாங்களாம்.
ஊரில முந்தி இயக்கத்திற்கு பின்னால திரிஞ்ச கொஞ்சம் இப்ப அவங்களோட நிற்கிறாங்கள் பச்சோந்திகள் பஞ்சமிகள் என்று பேசினா.

அம்மா சுகமாய் இருங்கோ பிறகு கதைக்கிறன்

- நிரோன்-  




Share/Save/Bookmark

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஒரு அகதியின் புலம்பல்




இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக்
கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்  சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும்  தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. 
   
எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை.
இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்மந்தமான அனைத்து தகவலும் தேடி கொண்டு போயிருந்தேன்.அதுல ஒரு கொஞ்சம் அங்க பிரயோசனப்பட்டுது. இப்ப இந்த தொழிற்சாலையைப் பார்க்கிறதுல
ஏதோ உயிரில ஒன்று விடுபட்ட மாதிரியான ஒரு உணர்வும் நெஞ்சில் ஒரு வலியும்தான் .      

இந்த தொழிற்சாலை பற்றி  நான் கதைக்க விரும்புபவர்கள் இப்போது உயிரோடு இல்லை.அவர்களை ஒவ்வொன்றாயும் கூட்டாயும் இழந்தாயிற்று. அவர்களைப்பற்றி , அவர்களின் விருப்புகளைப்பற்றி ,
அவர்களின் உழைப்பைப்பற்றி அவர்களின் அர்ப்பணிப்பைப்பைப்பற்றி
எழுதுபவர்கள் குறைந்து போயிற்று.உண்மைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் குறைந்து போகிறது.
போர் நெருக்கடி அதிகரித்தபோது எப்படியாவது விடுதலையை தக்கவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் தவித்தார்கள்.இரவு பகலென உழைத்தார்கள். எங்களுக்கு நிலம் இனி இல்லை என்றுவரும்வரை அவர்கள் பணி தொடர்ந்தது. பணியில் பலர் வீர மரணம்
அடைந்தனர். இறுதி நாட்களில் எல்லாம் இரு நேரக்கஞ்சிதான் வரும் அதிலும் ஒரு நேரத்தை மக்களிடம் கொடுத்துவிட்டு வாழ்ந்தவரில் இறந்தவர் அதிகம்.   அதனால் உண்மைகளின் கதைகளை படிக்கமுடியாது.

இறுதி நாள்வரை எங்களுடன் நின்ற மக்களை மனம் அசைபோடுகிறது. அந்த மணித்துளிகளில் வந்து என்ன செய்வது? என்று வினவி நின்ற மக்களை போய்வாருங்கள் என்று சொல்லவைத்த எமது ஏலாமையை எப்படி மீண்டும் நினைப்பது? தோற்றுப்போனோமா ? தேற்றமுடியாமல் நிலத்தில் சுருண்டு படுத்துக்கிடந்ததை யாரோடு மீட்டுவது? அந்த பறந்து திரிந்த துப்பாக்கிச்சன்னங்கள் ஏன் எங்கள் உயிரை விட்டுவைத்தன. விடை தெரியவில்லை எமக்கு. இறுதி கணத்திலும் சக போராளியின் வித்துடலை மணல் கிண்டி புதைத்து விட்டுத்தானே வந்தோம் கதைக்கமுடியாமல்.

நாளும் மக்களின் துயர் அறிந்து மேலும் சிதைந்து போகிறது மனம்.அரசோடு சேர்ந்தியங்கும் கூலிகளைவிட ஏன்? அனைத்துத்தமிழரும் ஒன்றாக முடியாது . ஏன் நாங்களே சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்? எமது சண்டை எதிரிக்குத்தானே வாய்ப்பாகும்.அவிந்த மனத்தில் முள்ளாய் எழுகின்றன கேள்விகள்.
ஒன்றாகாவிட்டால்கூட பரவாய் இல்லை ஏன்? எங்களுக்குள் சண்டை பிடிப்பான்? நான் ஒரு சாதாரணன் . உங்களில் பலரைப்போல எமது மக்களின் விடிவே எனது கனவு.
ஏதோ ஒரு தூரத்தில் இருந்து அதைக்கேட்டால் போதும்.இந்த அகதிக்கு ஆசை கொஞ்சம் கூடத்தான் என்று நினைக்காதீர்கள்.

- நிரோன் -



Share/Save/Bookmark

சனி, 12 ஜனவரி, 2013

இது எப்படி சாத்தியமாகும்?


பின்னேரம் நாலு மணிக்கே இருட்டிவிட்டது.வெளியால சரியான குளிர்
சுருண்டு படுக்கையில் கிடந்தான் ரகு .அவன் இந்த நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகிறது இன்னும் அகதி அந்தஸ்த்து கிடைக்கவில்லை.நண்பனுடன் இந்த அறையில் இருக்கிறான்.நண்பன்
இங்கு வந்து ஏழு வருடங்கள் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்து
ஒரு கொம்பனியில வேலையும் செய்கிறான். இன்று நண்பனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டதாய் இவனது மனம்
சொல்லிக்கொள்கிறது.
இன்று இவனின் நண்பனின் நண்பனுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.அதற்கு வருமாறு நண்பன் இவனையும் அழைத்தான்.
இவன் மறுத்துவிட்டான்.நண்பன் தனது நண்பனிடம் சொல்லியும் அழைப்பு விட்டான்.ரகுவோ குறை நினைக்கவேண்டாம் என்றுவிட்டான்.
அது இவனது நண்பனுக்கு மனத்தாக்கமாய் இருக்கவேண்டும்.நண்பனோ
எதையும் வெளிக்காட்டவில்லை .  ரகு இருபத்தி ஐந்து வருடங்கள் இயக்கத்தில் இருந்தான்.பின் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான்.இவன் வெளி நாட்டுக்கு வரும் எல்லாச் செலவுகளையும் நண்பனே பொறுப்பேற்றான்.
இன்றைய இவனது செய்கை இவனைக்குடைகிறது.
 இந்த நாட்டில் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சாதாரணமானவை. அக்கொண்டாட்டங்கள் மன ரீதியாக நல்ல உத் வேகங்களையும் கொடுக்கும்.ரகுவுக்கு இப்படியான நிகழ்வுகளில்
பங்கு பற்றுவது மிகக்கடினமாக இருக்கிறது.அதனை அவனால் விளங்கப்படுத்தவும் முடியவில்லை.அவனை மற்றயவர்கள் புரியமாட்டார்கள் . அது அவனது பிரச்சனை.
இவனது வாழ்நாளில் முக்கிய காலங்களை தனது இனத்தின் விடுதலைப்போராட்டத்தில் கழித்திருந்தான்.அதனாலும் வெளி உலகம்
இவனுக்கு புரியாமல் போயிற்று.ஒரு முறை பாம்பு கடித்தபோது கூட
சிகிச்சைக்கான பரிசோதனைக்கு நடுவிலும் வேலை செய்து கொண்டிருந்தான். இவனது திருமண நாள் அன்று கூட வேலைக்குப்பிறகுதான் திருமண மண்டபத்திற்கு போனான்.அடுத்த நாள்
காலையே வேலைக்கு கூப்பிட்டுவிட்டார்கள்.இவனுக்கு உலகம் தெரிந்திருக்கவில்லை.இப்போது தனித்து புது உலகில் வந்து வாழும் போதும் நடைமுறைகளை அனுசரித்துப்போகும் பக்குவத்தை இவன்
பெறவில்லை. 
போராளிகள் வாழ்ந்த உலகிலிருந்து புது உலகிற்கு வரும்போது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
ரகுவிற்கு பதினைந்து வயதில் ஒரு பிள்ளை இருக்கிறது.மனைவியும்
பிள்ளையும் ஊரில் இருக்கிறார்கள்.திருமணம் செய்ததிற்கு ஒரு நாள் கூட
குடும்பமாய் சினிமா தியட்டரில் படம் பார்த்ததில்லை.மனைவியும் இதைப்பற்றி ஒரு நாளும் அவனிடம் கதைத்ததில்லை.ஆனாலும் போராட்ட காலத்தில் வாழ்ந்த வாழ்வே சிறந்தது என்று ரகுவும் அவனது
மனைவியும் சொல்கிறார்கள்.

- சுருதி -


Share/Save/Bookmark

வியாழன், 27 டிசம்பர், 2012

முல்லை மண்ணின் இன்றையநிலை




Share/Save/Bookmark

புதன், 26 டிசம்பர், 2012

ஹைக்கூ கவிதைகள்


01,

ஒரே பத்திரிகையில் 
பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் 
வாழ்க்கை 

02,

வீடு எரிகிறது 
ஒளி கிடைக்கிறதாம் 
வடக்கில் வசந்தம் 

03,

நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள்  
அழிக்கப்படுகின்றன
கிழக்கில் உதயம் 


Share/Save/Bookmark

வியாழன், 20 டிசம்பர், 2012

இவர்களை தெரியுமா



   கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம்
செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள்.  பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள்.
இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி
விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள்.
ஒரு அதிகாலைப்பொழுதில்  அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள்.
தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும்
இயக்கத்திற்கு போனான்.கமலம் சுருண்டு போனாள்.அடுத்த வருடமே
தம்பி வித்துடலாய் வீட்டுக்கு வந்தான்.கமலம் துயிலும் இல்லமும் வீடுமாய் இருப்பாள்.இடப்பெயர்வோடு வன்னிக்குப்போனாள் .
காலம் உருண்டோட மூத்தவன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம்
செய்தான்.மருமகள் கமலத்திற்கு மகள் இல்லா குறையை தீர்த்துவைத்தாள்.மூத்தவனுக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள்
பிறந்தன. கமலத்திற்கு சந்தோசத்திற்கு குறைவில்லை.வாழ் நாள் சந்தோசத்தை அனுபவித்தாள்.
வன்னி மீது போர் கட்டவிழ்த்துவிட துயரம் அவர்களையும் துரத்த
தொடங்கியது.பத்தாவது இடப்பெயர்வில் மாத்தளனுக்கு வந்தார்கள்.
மூத்தவன் பல நாட்களாய் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.அன்று வீழ்ந்த செல் ஒன்றில் மருமகள் சிதறிப்போனாள் .கமலம் நீண்ட நாட்களுக்குப்பின்
குளறினாள் .மூன்றாம் நாள் மூத்தவன் வந்து நிலத்தில் வீழ்ந்து கதறினான்.
இரண்டு பிள்ளைகளையும் கொஞ்சி தாயிடம் கொடுத்து சனம் செய்யிற
மாதிரி நீயும் செய்யம்மா!அழுது அழுது போனவனை பின்பு காணவேயில்லை.அவன் வீரச்சாவு என்று சொல்கிறார்கள்.
கமலம் மாத்தளனில  இருந்து வவுனியா வந்து இப்ப சொந்த ஊருக்கு
வந்திட்டா.இரண்டு பேரக்குஞ்சுகளோடையும்   பொழுது நல்லா
போகுது.  
போனகிழமை மூத்தவன் திடீரென கேட்டான் . அப்பா எப்படி இருப்பார்?
அம்மா எப்படி இருப்பா? சித்தப்பா எப்படி இருப்பார்? கமலத்திட்ட ஒரு
படமும் இல்லையே காட்ட . கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு மூத்தவனைப்பார்த்து அப்பா
சரியாய் உன்னை மாதிரி இருப்பார்.சின்னவன் சிரிச்சுக்கொண்டு உண்மையாவா எண்டான்.கமலம் ஆம் என தலையாட்டினாள்.அம்மா
சரியா சின்னக்குட்டி மாதிரி இருப்பா.மூத்தவன் உண்மையாவா உண்மையாவா என கெக்கட்டச் சிரிப்புடன் கேட்டான்.அந்த சிறுசுகளின்
புளுகத்திட்கு அளவில்லை.அந்த சிறுசுகள் அன்றிலிருந்து சண்டை பிடித்ததை கமலம் காணவில்லை.இன்றைக்குக்கூட ஒரு கோப்பையில்தான் சோறு வாங்கிச்சாப்பிட்டாங்கள். 


-          சுருதி -  


Share/Save/Bookmark