சனி, 24 மே, 2014

என்னவளுக்கு !

என்னவளுக்கு !
இன்று 
தொழிலாளர் /உழைப்பாளர் தினம் 
இன்றுதான் 
உன் பிறந்த தினமும் 

"எட்டு மணி நேர வேலை "என்று
தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது 
என்னவளே !
எந்த புரட்சியும் இல்லாமல் 
இன்னும் 
இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் 
ஒற்றையாய்
ஒரு தசாப்தம் 
குடும்ப சுமை உன்மீது 
இரட்டையாய் ஒன்றானோம்
புலம் பெயர்ந்து
விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு

எனக்கு எல்லாமே போனஸ் தான்
நீயும் எனக்காய் மாறிப்போனாய்
குழந்தைகளுக்காய்
புதிய மண்ணில்
மீண்டுமொரு போராடியவாழ்வு
அத்திவாரத்திலிருந்து
ஆயுளின் கால்வாசிதான் மீதமிருக்க 

அலைகளில் அசைந்தவாழ்வு
சுனாமியாய் அடித்து ஓய்ந்தது

உயிரால் வரைந்த ஓவியம்
உலகால் கலைந்த சீவியம்

மனிதர்களுக்கு கடின வாழ்வு
பச்சோந்திகளுக்கு இலகு வாழ்வு

மரம் வேரோடு தீப்பற்ற
குருவிகளின் கூடு தொலைந்தது 
வேரற்ற மண்ணில் 
வேதனையோடு மீள கட்டும் கூடு 
குருவிகளுக்கானதா?


சோகங்களை
இயன்றவரை மறைத்து
அமைதியாய் அசைவோம்
காயம் ஏற்று மயிரிழையில்
உயிர் தப்பியவள் நீ
மயிரிழையே
எம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது
தொடர்ந்தும்
அன்பால் எமை கரை
இயல்பாய் கவிதை வரை
உன்னை வாழ்த்த
நானொன்றும் வேறல்ல
நானும் நீதான்




Share/Save/Bookmark

வெள்ளி, 9 மே, 2014

ஒரு கோழியைப்போல நான் எழுதிய குப்பைகளை என் ஞாபகங்களில் இருந்து கிளரிப்பார்க்கிறேன்.



எனது முதலாவது பிரசுரமான சிறுகதை "கல்லறைக்குள் தீபம் ஒன்று "
1987 ஆம் ஆண்டு உதயனின் சஞ்சீவியில் பிரசுரமாயிற்று. நான் எழுதிய ஏழு ஆரம்பகால கதைகளை " சமுதாயக்காயங்கள்" என்ற பெயரில் தொகுக்க இருந்தேன்.இந்திய இராணுவம் எரித்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றானதில் எனது முதல் தொகுப்பு கருவில் சிதைந்து போயிற்று.  1992  ஆம் ஆண்டு ஈழநாதம் நடத்திய இலக்கிய போட்டியில் எனது சிறுகதை( இவர்கள் புலிகள்) இரண்டாம் இடத்தை பெற்றது. 1994 ஆம் ஆண்டு பொருண்மிய நிறுவனம் நடாத்திய இலக்கிய போட்டியில் "மேம்பாடுகளைத்தேடி " என்ற கட்டுரை முதலாம் இடத்தை பெற்றது. 1998 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை நடாத்திய இலக்கிய போட்டியில் ”என்னவளுக்கு” என்ற கவிதை இரண்டாம் இடத்தை பெற்றது.
2004 ஆம் ஆண்டு சர்வதேச மாணவர் பேரவை நடாத்திய இலக்கிய போட்டியில் ”நிழல் ஓவியங்கள்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. இச்சிறுகதை தமிழீழ தொலைக்காட்சியினரால் குறும்படமாய் ஒளிபரப்பட்டதுமுல்லை கடற்தொழிலாளர்  சங்கம் கரும்புலிகள் நினைவாய் நடாத்திய ஓவியப்போட்டியில் எனது ஓவியமும் பரிசை தட்டிக்கொண்டது. என் இளமைக்காலத்தில் விளம்பரப்பலகைகளுக்கு எழுத்துருக்களை எழுதியிருக்கிறேன். திறந்த இலக்கிய போட்டிகளில் எனது பதினான்கு ஆக்கங்கள் பரிசு பெற்றுள்ளன.
எனது முதலாவது கவிதை தொகுதி ( அந்த நாளை அடைவதற்காய்)

1999 ஆம் ஆண்டு  வெளியானது.இந்நூலின் முன்னுரையை சு.. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருந்தார்எனது மூன்றாவதும்( அந்தநாள் எந்தநாளோ) நான்காவதும் ( கண்ணீர்த்துளிகள்) நூல்கள் எங்கு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை .தயவுசெய்து யாருக்கும் கிடைத்தால் தந்துதவுங்கள். முள்ளிவாய்க்காலில்  பல ஆக்கங்களை இழந்தாலும் , அது இழந்த உயிர்களுடன் ஒப்புநோக்குகையில் தூசாய் போகிறது


Share/Save/Bookmark
Bookmark and Share