எந்த கட்டிடங்களுக்கும் வரைபட மூலங்கள் முக்கியமானவை. இக்கட்டிடங்களில் செய்யப்படுகின்ற வேலைகளை,சரியான அளவான அமைவிடங்களும் இலகுபடுத்தும்.இறுதி போர்க்காலத்திலும் இரு சத்திர சிகிச்சை கூடங்கள் நிரந்தரமாய் அமைக்கவேண்டியிருந்தன.ஒரு சத்திர சிகிச்சைகூடத்தை ஒரு மருத்துவமனையுடன் அமைத்தோம்.அதன் வரைபட மூலத்தை நான்தான் வழங்கினேன்.எமது மருத்துவப்பிரிவால் அச்சத்திரசிகிச்சைகூடம் மக்களுக்குமாக அமைக்கப்பட்டது. அடுத்த சத்திரசிகிச்சைகூடம் இரகசியமாய் அமைக்கவேண்டியிருந்தது. முதலில் அதற்கான வரைபட மூலத்தை எமது தலைமைதான் தேர்ந்தது.அது shock of sober முறையில் மாடி வடிவில் இருந்தது.நானும் ஒரு வரைபடமூலத்தை கொடுத்திருந்தேன். அது நிலத்திற்கு கீழ் y வடிவில் வரும்.வாகனம் உள் வந்து v பாதையால் வெளியில் போகும். எனது வரைபடமூலம்தான் தலைமையால் தெரிவாகியது.எமது பகுதியில் நிரந்தரமாய் இயங்கிய பெரிய சத்திரசிகிச்சைகூடங்களின் வரைபட மூலங்களில் எனக்கும் ஒரு பங்கு இருந்தது.இந்த அனுபவம் எனக்கு பல திட்டமிடல்களில் பேருதவியாய் அமைந்தது.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
வெள்ளி, 19 டிசம்பர், 2014
மூத்தவனும் இளையவனும்
மூத்தவன் மூன்று நேரம்
சாப்பிட்டு ,
இடைக்கிடை
கடைகளிலும் வெட்டி வருவான்
இளையவனோ களமுனையில்
காலை உணவு இரவில் வரும்
சிலவேளை புளித்தாலும்
மிச்சம் விடுவதில்லை
நாளை உணவு கிடைக்குமோ
கிடைக்காதோ
எல்லாம் எம் கையில் இல்லை
மூத்தவன் கறியில் உப்பு பார்ப்பான்
இருக்கும் உணவோடு
முட்டைப்பொரியலும் கேட்பான்
காலை மாலை என குளித்து
மடிப்பு கலையா உடுப்போடு
உந்துருளியில் வலம் வருவான்
இளையவனோ
பலநாள் போட்ட உடுப்போடு
ஈரம் ஊறி குளிர் பிடித்தாலும்
மாற்றி விட ஆள் இல்லாமல்
சென்றியில் குறிபார்த்து தவம் இருப்பான்
இளையவனுக்கு ஓய்வில்லை
படுக்க இடமில்லை
கோழித்தூக்கமே வாழ்க்கையாயிற்று
சதா
முகம் வீங்கியே இருப்பான்
மூத்தவனுக்கும்
முகம் வீங்கியே இருக்கும்
மிதமிஞ்சிய
நித்திரையால்
தாயிற்கு பிள்ளைகள்
இரு கண்கள்போல்
ஆனந்தமானாலும்
கவலையானாலும்
கண்ணீர்
இரு கண்களிலிருந்தும் தான்
மூத்தவனும் இளையவனும்
திங்கள், 15 டிசம்பர், 2014
போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை
போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை.அன்று அண்ணையை சந்தித்தோம்.அடுத்த நாள் ”கருணா” எதிர் நடவடிக்கையிற்கு வெளிக்கிடவேண்டும்.அண்ணையின் முகத்தில் ஈ ஆடவில்லை. எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக்கிடக்கிறது.அண்ணா சொல்கிறார் " ஒரு சத்திரசிகிச்சை அணி போதாது ,இரண்டு பக்கமும் எங்கடதான்" யார் வந்தால் நல்லாயிருக்கும்? மதிப்புக்குரிய மூத்தமருத்துவர் ஒருவரின் பெயரை நான் சொல்கிறேன்.அடுத்தநாள் புறப்படுகிறோம். மனது அந்தரப்படுகிறது. மாத்தையாவிற்கு எதிர் நடவடிக்கையிற்கு நிற்கும் போதும் இதே சஞ்சலம் இருந்தது.நல்ல காலம் காயம்வராததால் தப்பிவிட்டேன். கருணாவின் பக்கத்தில் நிற்கின்ற சத்திரசிகிச்சை அணியும் நாங்கள் பயிற்றுவித்து உருவாக்கிய அணிதான். அவர்கள் நல்லாச்செய்வார்கள் என்ற நம்பிக்கை மனதில் சிறு சந்தோசத்தைதர அந்த அணியினரின் முகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் வந்துபோகிறது.அவர்கள் அனுப்பிய Walkman உம் Oxford English Dictionary உம் போனமாதம்தான் கிடைத்தது.அவர்கள் எங்களின் உடன்பிறவா சகோதரர்கள்.இவற்றைவிட பல தடவைகள் ஜெயசுக்குறு எதிர் நடவடிக்கையில் காயப்பட்டு எம்மால் காப்பாற்றப்பட்ட பலர் அங்கால் நிற்கிறார்கள்.பலர் செஞ்சோற்றுக்கடனுக்காக நிற்கிறார்கள்.நடவடிக்கை முடியும் வரை மனது பட்ட அவஸ்தையை எப்படி எழுதுவது? காயப்பட்டுவந்தவர்களில் எந்தப்பாகுபாடும் காட்டப்படவில்லை. மாவீரர் என்பது உயர் கௌரவம். போராட்டத்திற்கு சென்று அநியாயமாய் இறந்தவரால் எம்மனது என்றும் ஆறாதபுண்தான்.
போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
போரின் இறுதிவரை
95,96 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்த போது மக்கள் தொகை வீக்கமாய் பெருத்தது.மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வது வன்னியின் மருத்துவ செயப்பாட்டு அணிக்கு பெரும் சவாலாக இருந்தது.அந்தக்காலத்தில் மக்களுக்கு கடமையாற்றிய அனைத்து மருத்துவ சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.அனைத்து மருத்துவ அடிப்படைகளும் கஷ்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்டன.
அந்த காலத்தில் அங்கு மக்களுக்கான கண் பார்வை திருத்தம் ( Refractory error correction )- (Optometry ) ஒரு அணியை உருவாக்கினேன். இந்த அணிக்கூடாக மக்கள் தங்களுக்கு உரிய கண்ணாடிகளுக்கான prescription பெறக்கூடியதாய் இருந்தது. 1999 ஆம் ஆண்டு கிளி முல்லை மாவட்டங்கள் உள்ளீடாய் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு ஊடாக கண் பரிசோதனை செய்து சுமார் 2000 மாணவர்களுக்கு unicef நிறுவனத்தின் உதவியோடு கண்ணாடிகள் வழங்கினோம்.சமாதானகாலத்தில் வடகிழக்கின் ஏனைய பிரதேசத்திலும் தம்பணியை இவ்வணி சிறப்புற செய்திற்று.போரின் இறுதிவரை இவ்வணி செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதிவரை
வியாழன், 11 டிசம்பர், 2014
குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
மனிதரில் வேற்றுமை இல்லை
மறு இனத்தை,மதத்தை மதிக்காதவர்
தன் இனத்தை,மதத்தை மதிப்பவறல்ல
"விடுதலை/சுதந்திரம்"இனம் மதம் கடந்தது
வாழ்வின் அத்திவாரம்
குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
அவ்மனதை சேறாக்குகிறான் மனிதன்
"அதிகாரம்/ஆணவம்" அது நோய் அல்ல
அதையும் கடந்தது
உயிரின் முதல் அசைவை
அறிந்தவள் அம்மா
அது "வலி"தராத உதை
எங்களுக்காய் போராடி ,அங்கமிழந்து
போரின் பின் உதவிகோரும் /பெறும்
அவன்முகத்தை பத்திரிகையில் பார்க்கையில்
வீழ்கிறது
நொறுங்கிய இதயமும்
கடைசிச்சொட்டு கண்ணீரும்
மறு இனத்தை,மதத்தை மதிக்காதவர்
தன் இனத்தை,மதத்தை மதிப்பவறல்ல
"விடுதலை/சுதந்திரம்"இனம் மதம் கடந்தது
வாழ்வின் அத்திவாரம்
குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
அவ்மனதை சேறாக்குகிறான் மனிதன்
"அதிகாரம்/ஆணவம்" அது நோய் அல்ல
அதையும் கடந்தது
உயிரின் முதல் அசைவை
அறிந்தவள் அம்மா
அது "வலி"தராத உதை
எங்களுக்காய் போராடி ,அங்கமிழந்து
போரின் பின் உதவிகோரும் /பெறும்
அவன்முகத்தை பத்திரிகையில் பார்க்கையில்
வீழ்கிறது
நொறுங்கிய இதயமும்
கடைசிச்சொட்டு கண்ணீரும்
குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
சனி, 6 டிசம்பர், 2014
மருத்துவசேவை
வன்னியின் இறுதிப்போர்க்காலத்தில் ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இந்த படையணியின் கிளைமோர்த்தாக்குதலால் மருத்துவ ஊழியர்,பாடசாலை மாணவர்,பாதிரியார்,உதவி அரச அதிபர்,முதலுதவியாளர்,சாதாரண மக்கள் ,புலிகள் என பலர் கொல்லப்பட்டனர்.எனவே சில பிரதேசங்கள் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தன.குறிப்பாக மன்னாரில் எமது கட்டுப்பாட்டு பிரதேசம் , நெடுங்கேணி ,ஒட்டுசுட்டான் பகுதிகளை சொல்லலாம். இந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை இயன்றவரை பூர்த்தி செய்வதற்கு எம்மாலானவற்றை செய்தோம்.மருத்துவ நிலையங்களுக்கு எம்மால் பயிற்றப்பட்ட மருத்துவர்களை நியமித்து நேரடியாய் மேற்பார்வை செய்து வந்தோம்.கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையை தேவையான ஊர்களுக்கு சென்று நடத்திவந்தோம்.எங்கள் உயிர்களை பணயம் வைத்து எங்கள் மக்களுக்கு சேவையை வழங்கினோம். ஒட்டுசுட்டானில் ,பெரியமடுவில் சேவை செய்த மருத்துவர்கள் இன்று எம்மோடு இல்லை.
எமது நடமாடும் மருத்துவ சேவை நீண்டகாலமாய் இயங்கிவந்தது.இச்சேவையினர் மருத்துவசேவை குறைந்த இடங்களுக்கு சென்று தங்கள் சேவையை செய்வதுடன் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்த அனைத்து சிறுவர்,முதியோர்,வேறுபாதிப்புற்றோர் நிலையங்களுக்கு கிரம ஒழுங்கில் சென்று மருத்துவசேவையை வழங்கி வந்தனர். இந்த சேவை அணியினரின் மீது ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி இருதடவைகள் கிளைமோர்த்தாக்குதல் நடத்திற்று. ஆனைவிழுந்தானில்
எமது ஒரு ஊழியரை நாம் இழந்தோம்.நடமாடும் சேவை அணியினர் போரின் இறுதியில் நடமாடமுடியாமல் போனாலும் ஒரு நிலையான இடத்தில் இருந்து இறுதிவரை மக்களுக்கு சேவையை வழங்கினர்.
இறுதி மூன்று வருட போர்க்காலத்தில் மக்களுக்கான மருத்துவ குறைநிரப்பி சேவையை இயன்றவரை வழங்க முயற்சித்தோம்.
மருத்துவசேவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)