வெள்ளி, 21 ஜூன், 2013

தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள்

எங்களுக்கு நீண்ட காலமாய் வழங்கல் சாப்பாடுதான்.அது பல பேருக்கு சமைக்கிறதால எப்படி சமைச்சாலும் ஆக நல்லா வராது என்று தான் நான் சொல்லுவன்.சிலர் இதை மாறியும் சொல்லலாம்.சுவை என்றது அவரவர் மனதைப்பொருத்ததும்தான். இயக்கத்திற்கு கஸ்டம் வரயிக்க சாப்பாட்டிலும் பிரதி பலிக்கும்.ஜெயசுக்குறு காலத்தில கத்தரிக்காயும் சோறும் கொஞ்ச நாள் நிரந்தரமாயிற்றுது.சில நாட்களில நாங்களும் ஏதாவது கறி வைப்பம்.அது நாங்கள் எத்தனை பேர் இருக்கிறம் என்றதைப் பொறுத்தது . எப்படி என்றாலும் எல்லோரும் ஒரே சாப்பாடுதான் சாப்பிடுவம்.  இரண்டாயிரம் ஆண்டுக்குப்பிறகு சாப்பாட்டின்ர தரம் கூடிற்றுது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.தொன்நூறுகளின்ர   ஆரம்பத்தில சில நடவடிக்கைகளுக்கு போயிருக்கைக்க சாப்பாடு சரியாய் பிந்திவரும் ,சில நேரம் பழுதாகியும் வரும்.பலவேகய ஒன்றில நாற்பத்தியொரு நாளும் பலவேகய இரண்டில முற்பது நாளும் மின்னலில  முற்பது நாளும் இப்படி போயிற்று.   
நாங்கள் முகாமைவிட்டு வெளிக்கிட்டு களைச்சுப்போனால் சில வீடுகளில சாப்பிடுவம் . அநேகமாய் அவை மாவீரர் அல்லது போராளிகளின் வீடுகளாய் இருக்கும்.அந்த வீடுகளும் மட்டு மட்டான வாழ்க்கை வாழுற வீடுகளாய்த்தான் இருக்கும்.நாங்கள் இரண்டு பேர் அல்லது நாலு பேர் போவம்.வீட்டுச்சாப்பாடு சாப்பிடுற அவா இருந்தாலும் அதை தவிர்க்கத்தான் விரும்புவம் ஆனால் அதுகள் விடாதுகள்.சில நேரம் கடையில எங்களுக்கு என்று சாப்பாடு கட்டிப்போய் அதுகளிற்ற அதை குடுத்திற்று வீட்டுச் சாப்பாட்டை நாங்கள் சாப்பிடுவம் அது எங்களிற்ற இருக்கிற காசைப்பொருத்தது. நான் நெடுந்தீவுல இருந்து தம்பிலுவில் வரை  மக்களிற்ற வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். இறுதிப்போரில் தேவிபுரம், இரணைப்பாலை,மாத்தளன்,வலைஞர்மடம்,இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் என  ஒன்றன் பின் ஒன்றாக எங்களுக்கு தாங்கள் உண்ணாமல் உணவு தந்த பல உயிர்கள் உடல் சிதறிப்போயின.நாளும் உயிரிழந்த மக்களின் செய்திகள் எங்களைப்புண்ணாக்கின.இறுதி இரு கிழமைகளும் நாளுக்கு ஒரு நேர கஞ்சியுடன் எங்கள் கடமை முடிந்தது.


- ஓவியன்-


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share