சனி, 8 ஜூன், 2013

சின்ன சின்ன ஞாபகங்கள்

              

வன்னி விடுதலைப்புலிகளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அங்கு வாழ்ந்த பலருக்கு அழகான காலம்தான். சிறிலங்காவின் பொருளாதாரத்தடைக்கு மத்தியிலும், போர்ச்சூழலுக்கு
மத்தியிலும் வன்னி தன்னை நிமிர்த்தி வைத்திருந்தது.போராளிகள் பலத்த சவால்களை சந்தித்தனர்.மக்களும் சவால்களுடனேயே முன்னேறினர்.
உழைப்பின் பின் / களைப்பின் பின் மெல்ல வீசும் தென்றல்க்காற்றில்
சுற்றி இருந்து உணவருந்தும் சுகம் இருந்தது.கலகலப்பான மனம் இருந்தது.அநேகருக்கு விடுதலை நோக்கிய உழைப்பிருந்தது.அது ஆளாளுக்கு சற்று வேறுபடினும் எல்லோரிடமும் ஒரு திருப்தியிருந்தது.
வன்னியில் இருந்து பத்திரிகை வெளியானது.வானொலி ,தொலைக்காட்சியும் ஒலிபரப்பாயிற்று. புத்தக வெளியீடுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது.விரல் விட்டு எண்ணக்கூடிய சிற்றிதழ்களும் வெளியாகிக்கொண்டிருந்தது.நானும் ஒரு சிற்றிதழின் ஆசிரியராகவும் பொறுப்பாகவும் இருந்தேன். இதழின் பெயர் "விழி" மாதாந்த மருத்துவ இதழ்.இதழாசிரியராய்  இருப்பது போன்று பொறுப்பாய் இருப்பதும் சுமையானது. அச்சடித்த புத்தகங்களை விநியோகித்து கைகடிக்காமல் பார்த்தால்த்தான் அடுத்த இதழை வெளிக்கொண்டுவரமுடியும்.வன்னி போக்குவரத்து கடினமான பகுதி,
எல்லா குடியிருப்புக்களுமே தூர இடைவெளியில் இருக்கும்.அநேகரின் பொருளாதார நிலைமை சராசரி வாழ்வாகவே இருக்கும்.இவற்றுக்கு ஈடுகொடுத்து ஒரு இதழை பின்புல பலமற்று வெளியிடுவது ஓரளவு சவாலானதுதான். 2000ஆம் ஆண்டில் மருத்துவ இதழ் வெளியிடவேண்டும் என்ற அவா தோன்றிற்று.அப்பொழுது நாங்கள் அக்கராயனில் இருந்தோம்.
இதழை வெளியிடுவதற்கான பதிப்பகத்தையும் தெரிவு செய்தோம் .அந்த (கன்னிநிலம் பதிப்பகம்,ஸ்கந்தபுரம் )பதிப்பகம் இயக்கத்தின் ஒரு பிரிவின் கீழ் இயங்கியது.அது அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பத்திப்பகம் . என் ஞாபகத்தில் அப்போது கொம்புயுட்டரின் துணையுடன் அச்சடிக்கும் பதிப்பகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள் வரவில்லை.அந்த பதிப்பகத்தின் முகாமையாளராய்   பாண்டியனார் அண்ணா இருந்தார்.எனக்கு அவரை முன்பு தெரிந்திருக்கவில்லை.பாண்டியனார் அண்ணா என்றால் அளவான கதை,கடமையில் மட்டுமே கண் ,எளிமை,நல்ல தமிழறிவு இதுதான் அவர்.நான் பதிப்பகத்தை தெரிவு செய்துவிட்டேன்.   பாண்டியனார் அண்ணா விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி அண்ணையின் அண்ணன்.ஒரு பிரமச்சாரி.தமிழ்நாட்டு அரசியலில் நன்கு பரிச்சயமாய் இருந்தார்.பெரியார்,அண்ணா,காமராஜர் ஆகியோரில் மதிப்பு வைத்திருந்தார்.அவரது அச்சகம் என்பது வெறும் இரும்புதான் .ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை வரும் . பிரச்சனை தீரும்வரை சாப்பிடாமல் ஆட்களை வைச்சு வேலை செய்வார்.அவரது அச்சகத்தில் இருந்து இயக்கத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக்கு உரிய படிவங்கள் உள்ளீடாய் பல படிவங்கள் அச்சிடப்படும். அச்சுக்காய்கள் தேய்ஞ்சு அச்சிட சரியாய் கஸ்டப்பட்டார். எப்படியிருந்தாலும் சொன்ன சொன்ன நேரத்திற்கு அவரது ஓடர்களை செய்துகொடுப்பார். சமாதான காலத்தில் கொம்புயுட்டர் அச்சிடுதல்கள் எல்லாம் வந்த போதும் பாண்டியனார் அண்ணாவின் அச்சகத்தையே பயன்படுத்தினோம்.
எங்களுக்கு அச்சிடும் இதழ்களை மாதத்தின் கடைசி நாள் தரவேண்டும்.நாங்கள் தொண்ணூற்றி ஐந்து இதழ்களை வெளியிட்டோம் .ஒரு தடவை கூட அவர் பிந்திதரவில்லை.வன்னியில பல நிறுவனங்களில் முதலாம் திகதிதான் மாதக்கூட்டம் நடக்கும்.அந்த கூட்டங்களில நாங்கள் விநியோகிக்க வேண்டும்.ஒவ்வொரு இதழும் 1350இல் இருந்து 2000பிரதிகள் வரை அச்சிட்டோம்.சில சிறப்பு இதழ்கள் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது.  அறுவதாவது இதழ் வெளியீடு கிளிநொச்சி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தங்கன் வெளிட்டுவைத்தார்.விழி மருத்துவ இதழில் வந்த தங்கள் ஆக்கங்களை   உரிய எழுத்தாளர்கள் ஐவர் புத்தகங்களாய் வெளியிட்டு இருக்கிறார்கள். அன்புச்செல்வனின் இரண்டு தொடர் கட்டுரைகளும்,செல்வியின் விஞ்ஞானக்கட்டுரைகளும்  புத்தகமாக்கப்பட இருந்தன.தொண்ணூற்றி ஆறாவது இதழுக்கான வேலைகள் நடக்கும் போது அச்சகம் ஸ்கந்தபுரத்தில் இருந்து விசுவமடுக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டது. மீண்டும் அச்சகம் இயங்க போர் அனுமதிக்கவில்லை.

 ஒரு இதழை பதினைந்து ரூபாய்க்கு விற்றோம்.எங்களுக்கு அச்சிட பதின்மூன்று ரூபாய் முடியும் . விற்பவருக்கு ஒரு இதழுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தோம் .சிறப்பு இதழ்களில் கொஞ்ச லாபம் வந்தது.எல்லா இதழ்களும் விற்று தீர்ந்துவிடும் . பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை கற்கைக்கு (ஒப்படை) இந்த இதழ்களை பின்பு தேடி வருவார்கள்.கொடுக்க இருக்காது.அலுவலக பிரதியை வாங்கி பிரதி பண்ணிவிட்டுத் தருவார்கள்.புத்தகக்கடைகளுக்கூடாகவும் விற்க முயற்சி
செய்தோம் .அது பலனளிக்கவில்லை.அவர்கள் விற்கும் இதழின் முற்பது விகிதத்தை கேட்டார்கள்.அப்படி கொடுத்தால் இதழ் பிரதியின் விலையை கூட்டவேண்டிவரும்.நான் சம்மதிக்கவில்லை.  இரண்டாயிரம் ஆண்டிலிருந்து இரண்டாயிரத்து எட்டுவரை மாதம் தவறாமல் வெளிட்டோம்.நூறாவது இதழ் வெளியிடும் கனவுகளுடன் இருந்தோம்.

பாண்டியனார் அண்ணா முள்ளிவாய்க்காலுக்குப்பின் வவுனியா முகாமில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். நான் விழி மூடுகிறேன்




-          ஓவியன் -



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share