சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆத்மா உலாவும் காணி

எழுபதில் கட்டிய வீடு,
முற்றத்தில் மல்லிகை பூக்களாய் சொரிய
வீடே மல்லிகை வாசம்
கிணற்றடியில்
செவ்வந்திபூக்கள் விரிந்திருக்க
நிலமெல்லாம் பாக்குகள்
தேசிமரத்தில் மஞ்சள் பல்ப்புகள்
மூடிக்கட்டியிருக்கும் மாதாளம் பழங்கள்
பழைய பூவரசிலிலும் பூக்கள் 
வளவில் ஆங்காங்கே செத்தல்கள்
அண்ணாந்து பார்த்தால் தேங்காய்க்குலைகள்
ஊஞ்சல் கட்டியிருக்கும் வேம்பு
அணில் ஓடிவிளையாடும் கொய்யா
திடுக்கிட நொங்கு விழும் சத்தம்
நாய் கூடபுகமுடியா வேலி

அம்மா,அம்மாவின் அம்மா,அம்மம்மாவின் அம்மா
அவர்களின் ஆத்மா உலாவும் காணி

கோடி ஆசையோடு வீடு பார்க்க போனோம்
வாசலில்  பூட்டு
முற்றத்தில் குறியீட்டுப்பலகை

" இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது"  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share