வெள்ளி, 26 டிசம்பர், 2025

நான் வாழ்ந்த சூழல் எனக்கு கலைத்துவமான பரிச்சியத்தை தந்தது உண்மைதான் இருந்தாலும் எழுபதுகளில் சுதந்திரன் வாரப்பத்திரிகையின் தாக்கமும் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தையும் உருவாக்கியது.1977 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜகம் எனக்குள்ளும் தாக்கத்தை செலுத்தியது. அப்பொழுது "வேதனை சோதனை சாதனை" என்ற தலையங்கத்தில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன். அது பாடசாலையிலும் வெளியிலும் ஒரு சுற்றுவட்ட வாசிப்பிற்கு வரவேற்புடன் போய்வந்து. பின்பு இப்படி கட்டுரைகளை இடைக்கிடை எழுதுவது என்னை சமநிலைப்பத்தியது ஆனால் இவை அச்சாகியிருக்கவில்லை. என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. "ஓ எங்கள் அருணன் " என்ற கட்டுரை திலீபனுக்கு பிடித்திருந்தது.


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.

1998 ஆம் ஆண்டு எமது பொறுப்பாளராகவும் இருந்த சு ப தமிழ்செல்வன் அவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.எமது மருத்துவ அணியினர் கிளிநொச்சி தென்னியன்குள காட்டுப்பகுதியில் அமைந்திருந்த மருத்துவமுகாமொன்றில் தம்பதியினரிற்கான சிறு வரவேற்பு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தோம். அந்த நிகழ்வில் சகோதர நண்பன் சத்தியா நாங்கள் தம்பதியினருக்கு வழங்கவிருந்த வாழ்த்துமடலில் இருந்த கவிதையை தனக்கேயுரிய பாணியில் அமோக வரவேற்புடன் வாசித்தான்.கவிதையை வாசித்து முடித்தவுடன் என் அருகில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வன் நீங்கள்தான் இந்த கவிதையை எழுதியது என்று சிரித்தபடி சொன்னார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எங்கள் தமிழ்செல்வன் எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்தார். அடுத்தநாள் ஈழநாதம் தினசரியில் மருத்துவப்பிரிவு சார்பாக எனது பாடல்வடிவ துயர் கவிதை வெளிவந்தது. ஒரு படைப்பாளி மகிழ்விற்கும் துயருக்கும் எழுதவேண்டியிருக்கிறது. பத்மலோஜினி அக்கா (Dr அன்ரி ) அவர்களுக்கு திருமணம் முற்றாகியதை அறிந்து அவருக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அந்த கவிதையை மதி அக்காவிற்கும் காட்டியதாய் மதி அக்கா பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொன்னார். முள்ளிவாய்க்காலில் நானும் பத்மலோஜினி அக்காவும் ஒன்றாக கடமையில் இருந்தோம் , அப்போது அக்கா சொன்னார் அந்தக்கவிதையை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவ்வளவு இடப்பெயர்வுகளுக்கு பிறகும் அக்கவிதையை பத்திரப்படுத்தியதாய் சொன்னது ஒரு படைப்பாளியாய் அந்நேரத்திலும் இனித்தது. இப்பொழுதெல்லாம் ஒன்றாக வாழ்ந்தவர் பற்றி சிறுகுறிப்பாவது எழுத முனைந்தும் முடியாமல் எழுந்துபோவது வழக்கமாகி போயிற்று. ஒரு படைப்பாளியாய் தோற்றுப்போகிறேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

ஒரு இளவலின் முகப்பருபோல புல்நுனியில் ஒரு பனித்துளி எங்கிருந்தோ வந்து வீழும் மழைத்துளி தாய்நிலத்தில் எழும் மண்வாசம் தொழிலாளியின் வியர்வைத்துளி காயமுன் கொடுத்துவிடு கூலி காய்ந்த பின்னும் வலிக்கும் முள்ளிவாய்க்கால் கண்ணீர்த்துளி


Share/Save/Bookmark

சனி, 2 ஆகஸ்ட், 2025

மனதில் அவர் இருப்பார் அண்ணனாய் ஆலோசகனாய் என்றும் இதைவிட என்னிடம் எந்த வார்த்தைகளுமில்லை


Share/Save/Bookmark

திங்கள், 14 ஜூலை, 2025

போர்ச்சூழல் , அதற்குள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுவது மக்களின் சுகாதார போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நாளும் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொருநாள் வேலைத்திட்டங்களுக்கு பின்னும் புதுப்புதுச் செய்திகளை விழிப்புணர்வினை தாயக ஊடங்கங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த கடமையிற்கு சென்றேன். அந்தக்காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று எனது செய்தியாக்கம் தாயக ஊடங்கங்களில் நாளும் வந்துகொண்டிருந்தன.


Share/Save/Bookmark
திசையற்று பறக்கிறது கனவுகள் தொலைத்த பறவை சிறகடிக்கும் ஒலி ஒப்பாரியாகிறது சனநெரிசல் பாதைகள் நீங்கள் இல்லை மனசு வெறிச்சோடுகிறது இருள் கவ்விய இதயம் வெயில் சுடுகிறது எதுவும் நடக்கவில்லை


Share/Save/Bookmark

வெள்ளி, 20 ஜூன், 2025

நாங்கள் சுவாசிக்கும் காற்று

வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும் கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும் கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும் குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும் பட்டம் ஏறும் காற்றும் புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும் மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும் மகளே ! நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !! காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை நாடுமில்லை, பகையுமில்லைே


Share/Save/Bookmark

வியாழன், 19 ஜூன், 2025

"போர்"

"போர்" உனது தாயோ எனது தாயோ அழுவாள் வாழ்நாள் முழுவதும் சமத்துவம் வாழவில்லையெனில் போர் வாழும் சமத்துவமான உலகு ஆறறிவின் இலக்காகவேண்டும்


Share/Save/Bookmark

நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்

சந்தித்துக்கொண்டதும் பிரிந்துபோனதும் நண்ப ! அது உனக்கு வரலாறு எனக்கு ? நீ எப்போதும்போல தெளிவாக இருந்தாய் அப்போது கூட உன்னால் சிரிக்க முடிந்தது துப்பாக்கி ரவைகள் ஈசல்களாய் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்தன மீண்டும் சந்திப்போம் என்றுகூட சொல்லாமல் நீ நடந்து கொண்டிருந்தாய் நீ தந்த ரொட்டித்துண்டுடன் நீ போய்முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்


Share/Save/Bookmark

திங்கள், 16 ஜூன், 2025

திரும்பிப்பார்க்கிறேன்

1991 ஆம் ஆண்டு ஆரம்பகாலம், சுதுமலையில் இயங்கிய மூன்று மருத்துவவீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளுக்கான மருத்துவராக நான் பணி செய்தேன். அநேகமாக ஒவ்வொருநாளும் மூன்று வீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளையும் பார்த்துவருவேன். ஒரு காலில் காயமடைந்து மண் மூட்டை சிகிச்சையில் இருக்கும் ஒரு போராளி பற்றி அந்த வீட்டிற்குரிய மருத்துவ போராளி எனக்கு தகவல் தந்தான். அவன் சரியாக சாப்பிடுவதில்லை, மற்றையவர்களுடன் கதைப்பதில்லை, கதைப்பதையே குறைத்துவிட்டான். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் அவனோடு அரை மணித்தியாலமாவது கதைத்துவந்தேன். அவனது ஒடுங்கிய முகத்தில் விரிவும் சிரிப்பும் படிப்படியாக வருவதை எல்லோரும் உணர்ந்தார்கள். அவன் ஒரு தனித்துவமான மருத்துவ நிர்வாகியாய் வளர்ந்து , வரலாற்றில் பெயர் பதித்து, தான் நேசித்த மக்களுக்காய் தாய்மண்ணோடு கலந்தான் .அவன் வேறுயாருமல்ல, களமருத்துவப் பொறுப்பாளர் திவாகர்.


Share/Save/Bookmark

சனி, 17 மே, 2025

எதுவும் சொல்வதற்கில்லை

கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன யாருமில்லை ஓலமில்லை வெந்த பூமியை கழுகுகள் தின்றன உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை கனவை சுமக்காத வலியால் நிதம் உழன்றுகொண்டிருக்கிறது உயிர் எதுவும் சொல்வதற்கில்லை மனம் தவித்துக்கொண்டிருக்கிறது சாத்தியமேயில்லாத இன்னொரு சந்திப்புக்காய்


Share/Save/Bookmark

வெள்ளி, 2 மே, 2025

கண்ணீர்த்துளியினுள் பெருக்கெடுத்திருந்தது துயரின் வெள்ளம் தியாகங்களுக்குள் மலைபோல் குவிந்து கிடக்கிறது அளவிலா நேசம் குருதிமழையில் பொட்டு இட்டிருந்தாள் முள்ளிவாய்க்கால் ஈகங்களுக்கு பின் விதவையாகியது மண் ஓயாத அலைகளில் எழுதாத வரலாறு


Share/Save/Bookmark

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

நான் புலம்பெயர்ந்து பதினைந்து வருடங்களை கடந்துவிட்டது. நான் இங்கு வந்ததிலிருந்து வேறு இனத்தை சேர்ந்தவர்களோடும் பழக சந்தர்ப்பம் கிடைத்தது , எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை பற்றி சொல்லிவந்திருக்கிறேன். நான் சந்தித்த அநேகருக்கு எமது பிரச்சனை பற்றிய அறிவு அறவே இருந்திருக்கவில்லை என்பது கவலையானது.


Share/Save/Bookmark

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

நண்பா ! நானும் நீயும் குந்தியிருந்து கதைத்து சிரித்த தேர்முட்டி படிக்கல்லை எட்டி நின்று பார்க்கிறேன் பிரிவு அன்றுதான் நடந்தது ஏதோ சொல்லிப்போனாய்? என்னதான் சொல்லியிருப்பாய் நினைக்காத நாளில்லை கோயிலின் சிறுமடம் நீயும் நானும் தியாகியும் நினைவில் ஏதும் குறைவில்லை தனித்திருந்தாலும் அதே திசையில் சுமைதாங்கி நடந்திருந்தேன் இன்று கால்களில் அசைவிருந்தாலும் அந்த திசையை காணவில்லை கனவுகள் இல்லா உறக்கத்தில் நிம்மதி உண்டுதான் குடைந்தபடி வலி இருக்கிறதே


Share/Save/Bookmark

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

கனவு எரிந்த வெளிச்சத்தில் உன்னையும் என்னையும் அடையாளம் கண்டுகொள்கிறது ஐ நா எரிந்த சாம்பலில் தொட்டு கவிதையை கேறுகிறது மனது


Share/Save/Bookmark

சனி, 1 பிப்ரவரி, 2025

திரும்பிப்பார்க்கிறேன்

1996 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ( திகதி சரியாக தெரியவில்லை) யாழ் மாவட்டம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எமது சத்திரசிகிச்சை கூட உபகரணங்களை இயன்றளவு வன்னிக்கு அனுப்பிய பின் கிளாலியூடாக கடற்புலிகளின் படகில் பயணித்து பூநகரியில் இறங்கிய நினைவு இன்றுபோல் இருக்கிறது. அடுத்தநாளிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள் வரை சத்திரசிகிச்சையாளனாகவோ சத்திரசிகிச்சைகூடங்களை வழிநடத்துபவனாகவோ பயணித்தேன்.எங்கள் சத்திரசிகிச்சை அணிகளின் பணியென்பது சாதாரணமானது அல்ல, எமது பணிகள் சரியான முறையில் பதியப்பட்டிருக்குமானால் சாதனையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். எமது சத்திரசிகிச்சையின் வெற்றிவீதம் சர்வதேசத்தில் விதந்துரைக்கப்படுகின்ற வெற்றிவீதத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நடமாட்டங்களுக்கு நடுவிலும் சத்திர சிகிச்சை கூடங்களையோ மக்களுக்கான மருத்துவசேவைகளையோ நடத்தியிருக்கிறோம். எமது சகாக்களின் அநேகர் தங்களது பணியினூடாவே புடம் போடப்பட்டார்கள். அந்தகாலத்திலெல்லாம் எமது சகாக்களின் பணி நாளாந்தம் சுமார் இருபது மணித்தியாலங்களாய் இருந்திருக்கிறது. எமது சகாக்களின் சிலர் உடலில் ஓடும் குருதியின் அளவைவிட இன்னுமொரு மடங்கு குருதியை மொத்தமாக தமது பணிக்காலத்தில் தேவையானவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.இந்த பணிக்கு பல்வேறு விதத்திலும் உறக்கம் துறந்து உழைத்த பலர் இன்று எம்மோடு இல்லை ஆனால் அவர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள். எமது சகாக்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் தனித்துவமான வரலாறு இருக்கிறது. நாம் யாழ்ப்பாணத்தினை இழந்தபோது சிறிலங்கா அரசும் இராணுவ அரசியல் ஆய்வாளர்களும் புலிகளால் இனி பெரிய தாக்குதல்களை செய்யமுடியாது என கணித்தனர் ஆனால் அதற்கு பிறகுதான் பெரும் வரலாற்றுத்தாக்குதல்கள் நடந்தன. தலைமையினதும், மூத்த மருத்துவர்களதும் , மருத்துவநிர்வாகிகளதும், ஒட்டுமொத்த மருத்துவப்பிரிவினதும் கூட்டு முயற்சி யாவற்றையும் சாத்தியமாக்கின.


Share/Save/Bookmark

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

அந்த காலம் இன்றில்லை அங்கும் அந்த காலம் இன்றில்லை இங்கு காலம் பருவங்களோடு மாறிக்கொண்டிருக்கும் பனி உருகுவதை போல என் முதல் தலைமுறை அருகிவிட்டது என் ஆசிரியர்களும் என் கண்ணீர்த்திரையினூடேதான் தெரிகிறார்கள் ஒரு பெருங்கனவு கலைந்துவிட்டது புதிய உலகம் அந்நியதுதான் விரும்பியோ விரும்பாமலோ அந்நியோன்யமாகிவிட்டது


Share/Save/Bookmark

சனி, 18 ஜனவரி, 2025

வழிப்போக்கனிடம் திசை இல்லை

" மக்கள் விடுதலையடைவர் " கனவுடன் கண்மூடினர் அருகிலிருந்தவர் அந்தரிக்கின்றனர் அங்குமில்லை இங்குமில்லை அமைதியை குலைக்கிறது சாக்குருவி கேட்கவில்லை பிறந்த குழந்தையின் சத்தம் வழிப்போக்கனிடம் திசை இல்லை


Share/Save/Bookmark

புதன், 15 ஜனவரி, 2025

கிணற்றுத்தண்ணீரைப்போல தாகம் எந்த பாணமும் தீர்த்ததில்லை


Share/Save/Bookmark

சனி, 11 ஜனவரி, 2025

இடைவெளி

அன்று மாவீரர்களும் இன்றைய முன்னாள் போராளிகளும் அருகருகில் வாழ்ந்தார்கள் இன்று இடைவெளி மடுவுக்கும் மலைக்குமாகிறது


Share/Save/Bookmark

அது போதும் எனக்கு

என் தம்பி என் கூட இல்லைத்தான் இருந்தாலும் அவன் எங்களை தான் நேசித்த மக்களை எவ்வளவு நேசித்தான் என்பதை நான் அறிவேன் அது போதும் எனக்கு என் தந்தை எம்மோடு இல்லைத்தான் இருந்தாலும் அவர் எமை நேசித்த ஆழம் என் உயிரில் இருக்கிறது


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

சூரியன் மறைந்த பொழுதொன்றில் இருளாகியது உலகு என நினைத்துவிட்டேன் கண்களை இழந்ததை அறியாமல்


Share/Save/Bookmark

சனி, 4 ஜனவரி, 2025

எனது பதின்ம வயதுகளில் சிறுகதைகள் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது,குறிப்பிட்ட நூல்களை ருசித்து வாசித்திருந்தேன் ,அதற்கு பின்னான காலங்களில் விருப்பு இருந்தாலும் ஒரு சீரான வாசிப்பு இருந்ததில்லை. இவ்விடைவெளியில் கவிதைகள் குறிப்பாக புதுக்கவிதைகளை வாசிக்கக்கூடியதாய் இருந்தது. நான் விரும்பியும் ஆறி அமர்ந்து வாசிக்கமுடியாமல் போன நூல்களின் எண்ணிக்கை ஒன்று இரண்டல்ல. காலங்களோடு இரசனை மாறும் இருந்தாலும் சில நூல்களின் குளிர்மை இன்றும் நெஞ்சில் இருக்கிறது.


Share/Save/Bookmark
Bookmark and Share