வியாழன், 11 மார்ச், 2010

உண்மைக் கதை 03

மாசி மாதம் 2009. வன்னி.
இராணுவம் சுதந்திரபுரத்தை ஆக்கிரமித்தது. சுதந்திரபுரம்வள்ளிபுனம் எங்கும் பிணக் குவியல்கள். வள்ளிபுனம் சிறுவர் பாடசாலையில் மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் அதிக சுமையை சுமந்து கொண்டிருந்தது. கொத்து கொத்தாய் காயங்கள் வந்தன. சிகிச்சையின்  வினைத்திறன் உச்சமாகவே இருந்தது. இடைக்கிடை மருத்துவமனை எல்லைக்குள்ளும் செல்வந்து விழுந்தது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் இயன்றவரை பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தனர். புதிதாக அனுமதிக்கப் படுகிறவர்கள் மண் முற்றத்தில் கிடத்தப் பட்டிருந்தனர். சத்திர கிச்சை கூடம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.  

கீரன் சத்திர சிகிச்சை கூடத்தை எட்டிப்பார்த்தான். டாக்டர் ICU நோயாளிகள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் இருக்கினம். கீரன் மருத்துவப் போராளி, தனது தகுதியாலும், நம்பிக்கையாலும் ICU இற்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டிருந்தான். கடமை எனில் எந்த நேரமும் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டிருக்க வேணும். ICU இல் உள்ள நோயாளி களைப்பற்றி மணித்தியாலதிட்கு ஒரு தடவை டொக்டரிட்ட சொல்ல வேணும். அதுதான். அந்த சின்னப் பிள்ளை என்ன மாதிரி?  அவ கதைக்கிறா, வயிற்றிலேயும் பெரிதாய் நோ இல்லை என்று சொல்றா , பெயர் வைகறையாம். வயது ஆறு. தாய் தகப்பன்ர பெயரும் சொல்றா. நித்திரை இல்லா கீரனின் முகம் விகாரித்திருந்தது.

 நீர் ஏதாவது அவவின்ர  குடும்பத்தைப் பற்றி சொன்னீரோ? இல்லை. அடிக்கொருக்கா அம்மா என்று கூப்பிடுறா. அம்மா நாளைக்கு வருவா என்று சொல்லி இருக்கிறேன். எத்தனை தடவைதான் சொல்லுறது. அலுத்துக்கொண்டான். கீரன் பொம்பிளை  வாட்டில பார்க்கிறதுக்கு  வயதுபோன அம்மா ஒரு ஆள் நிற்கிறா எல்லோ, அவாவ கூப்பிட்டு இந்த பிள்ளையோட விடுங்கோ. இயன்றவரை வீட்டு யோசனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கோ. வாயால சொல்லலாம் செய்ய ஏலுமே? கீரன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
     
செல்லடியில  குடும்பம்  முழுக்க போயிற்று. இந்தப்பிள்ளை மட்டும் பாரிய வயிற்றுக் காயத்தோட வந்தது. அதீத முயற்சியால இந்தப் பிள்ளையை காப்பாற்றியாச்சு. காப்பாற்ற எவ்வளவு கஸ்டப்பட்டது. இப்ப அதுக்கு மேலால கஸ்டமாயிருக்கு. எப்படி? அந்த பிஞ்சுக் குழந்தையிற்ற அப்பா அம்மா இல்லை என்று சொல்லுறதுடொக்டர்  சொன்னவர் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்லுவமென்றுஇந்தப் பிள்ளையை  சரியான ஆட்களோட சேர்த்து விடவேணும். இந்தக் கஸ்டத்திட்குள்  எப்படி இது சாத்தியமாகும்.          

செல்லடி மருத்துவமனையை  நோக்கி அகோரமாயிற்று. நோயாளிகள் அவசர அவசரமாக இரணைப்பாலை பாடசாலைட்கு மாற்றப்பட்டனர். டொக்டர் அந்தப் பிள்ளையை கவனமாக மோட்டார் சைகிளில்ல வைச்சுக் கொண்டுபோகச் சொன்னார். வாகன வசதி இல்லாததால் மோட்டார்  சைக்கிளில்தான் அநேக நோயாளிகள் மாற்றப் பட்டனர். போக போக செல்லடி மோசமாகலாம். நோயாளிகள்,கடமையில் நின்றவர்கள் ,பொருட்கள் என எல்லாவற்றையும் இரணைப் பாலையிற்கு மாற்றியபின் இறுதியாக நானும் டொக்டரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். வள்ளிபுனம் கைவேலிப் பாதையில் ஆங்காங்கே பிணங்கள்.அருகில் உடைமைகள். மக்கள் செல்லும் பாதை மீதே செல்லடி திசை திரும்பி இருந்தது. 

திடீரென  டொக்டர் மோட்டார்  சைக்கிளை  நிற்பாட்டச்சொன்னார். பதற்றப்பட்டார். நிற்பாட்டு என மீண்டும் கத்தினார். நான் டொக்டருக்கு காயம் என்டு நினைச்சேன்.டொக்டர் இதில  நிற்பாட்டேலாது. செல் இதில தான் விழுகிது. டேய் எனக் கத்தினார். வேறு வழியற்று சைக்கிளை நிறுத்தினேன். டொக்டர் ஓடினார் .

ஐயோ  என்ன கொடுமை. கீரன் அந்தக் குழந்தையை பக்குவமாய்  கட்டிப் பிடித்த படி கருகிக் கிடந்தான். நித்திரை யற்று கடமை செய்தவன் நித்திரை கொள்கிறான் போல. பிள்ளையின் பிஞ்சு முகம் மட்டும் காயங்கள் அற்று அழகாய் இருந்தது. அதன் வதனத்தில் மட்டும் ஒரு சிரிப்புத் தெரிந்தது. அது தன் தாய், தந்தை, சகோதரங்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.   

பாதையில்  கிடந்த  பிணங்களை ட்ராக்டர்  ஓன்று ஏற்றி வந்தது. நாங்கள் கீரனுடன்  குழந்தை, மோட்டார்  சைக்கில் ஓட்டுனரின்  உடல்களை ஏற்றி விட்டோம். அவர்களது மோட்டார் சைக்கிள் எரிந்தபடி கிடந்தது. நாங்களும் எரியும் மனதுடன்  வெடிக்கும் செல்லுக்கு போட்டியாக கத்தி அழுது, புறப்பட்டோம். 

-- நிரோன் -- 


Share/Save/Bookmark

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நெஞ்சசை பிழிதிடும் பதிவு , தொடரட்டும் உங்களின் உண்மைப் பதிவுகள்.

சசிகுமார் சொன்னது…

படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன, வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை

கருத்துரையிடுக

Bookmark and Share