வியாழன், 29 மார்ச், 2012

உண்மைக்கதைகள்-07

கணவன் ,மனைவி ஒரே தொழிலில் இருப்பது அருமை.சிலர் மருத்துவராக
இருந்திருக்கிறார்கள்.ஆசிரியராக இருந்திருக்கிறார்கள் .படைப்பாளிகளாக
இருந்திருக்கிறார்கள்.ஏன் வலைப்பதிவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஈழத்தில் போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.ஒருபடிமேல் போய்
மாவீரர்களாக இருக்கிறார்கள்.
                                                          அவள் 90 களின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள்
அமைப்பில் இணைந்து போராளியானாள்.அமலி  அவளது பெயர் . பெருஞ் சமரொன்றில் வயிற்றில் காயமடைந்து குடலில் ஒருபகுதி அகற்றப்பட்டது.
மருத்துவக்கல்லூரி ஆரம்பித்த  போது தகுதியின் அடிப்படையில் அதில்
கற்க தெரிவாகினாள் .மருத்துவப்படிப்புடன் காயமடையும் போராளிகளுக்கான
மருத்துவக்கடமையையும் செய்து வந்தாள் .இவள் ஒரு இளகிய மனம்
கொண்ட போராளி கடமையில் எப்போதும் கண்ணாய் இருப்பாள் .இவளது
தங்கையும் ஒரு போராளி ஜெயசுக்குறு சண்டையில் வயிற்றில் காயமடைந்து
சத்திர சிகிச்சையால் உயிர் தப்பினாள்  ,பின் கிளிநொச்சி சண்டையில் வீர
மரணம் எய்தினாள் . தங்கை மீது மிகுந்த பாசம் கொண்ட இவள் கலங்கினாலும்
கடமையில் உறுதியாய் இருந்தாள் .
                                                    களமுனைத்தளபதி ஒருவனை திருமணம் செய்தாள்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.போராளிக்குடும்பங்கள் மிகப்பாசமானவை
இக்குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.
                                                    2006 ஆம் ஆண்டு முழங்காவில் மருத்துவமனைக்கு
மருத்துவராய் கடமை செய்ய தொடங்கினாள் . ஓவியனுக்கு மூன்று
சத்திரசிகிச்சை கூடங்கள் இருந்தன.அதில் ஓன்று முழங்காவிலில் இயங்கிற்று.அச்சத்திரசிகிச்சைகூடத்தின் பொறுப்பு மருத்துவராய்
கடமை செய்தாள் .ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மக்களுக்கான
சத்திரசிகிச்சைகள்,பல்கிளினிக்,கண்கிளினிக் என்பன நடைபெறும் .
வேலைமுடிய சாப்பிடத்தொடங்குகையில் அவள் ஒருபோதும்
எங்களுடன் உணவருந்தியதில்லை.தனது குழந்தைகளுடன்தான்
சாப்பிட வேண்டும் என போய்விடுவாள் .அவள் பொறுப்பில்/பராமரிப்பில்  எப்போதும் இருநூறு காயமடைந்தவர்கள் இருப்பார்கள்.
                                                   அந்த சத்திரசிகிச்சைக்கூடம் ஜெயபுரம் ,வட்டக்கச்சி,
சுதந்திரபுரம்,தேவிபுரம், முள்ளிவாய்க்கால் என இடர்களுடன் இடம்பெயர்ந்து அவள்
கடமையின் போது முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் வீரச்சாவு
எய்தினாள். அவளது இறுதி நிகழ்வின்  போது கூட பாதுகாப்பு
காரணங்களால் அதிக பேர் பங்குபற்றவில்லை.அவளது வீரமரணம்
சாதாரணகாலத்தில் நிகழ்ந்திருந்தால் பலகிராம மக்கள் ஒன்றாய்
வந்திருப்பார்.குழந்தைகளுக்கு அவளது இறப்பை விளங்கும் வயது
அல்ல.அவளது பண்பான கணவன் விக்கி விக்கி அழுதது கண்முன் நிக்கிறது.
குழந்தைகளை  பேத்தியாருடன் இணைத்துவிட்டு களம் சென்றவன்
இறுதிக்களத்தில் மீளவில்லை.
                                             எத்தனையோ உயிர்களை காத்தவரை
கடவுள் காப்பாற்றாதது ஏன்? உண்மை மனிதர்களின் குழந்தைகள்
எங்கெங்கு இருப்பார்களோ?

                                                                              -நிரோன்-











Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share