ஒரு சிறு பிரச்சனைதான்
அதனால்
தாயும் சாப்பிடவில்லை
மகனும் சாப்பிடவில்லை
அதனால்
மகளும் சாப்பிடவில்லை
குடிசையில்
வறுமை நிரம்பியிருந்தாலும்
ஒரு நாளும் இப்படி நடந்ததில்லை
மகனும் மகளும் பள்ளிபோய் வந்தனர்
தாய் சமைத்துவைத்தும்
யாரும் சாப்பிடவில்லை
கதைபேச்சும் இல்லை
தந்தையை முள்ளிவாய்க்காலில்
இராணுவத்திடம் ஒப்படைத்து
ஆறுவருடம்
தந்தையை தேடித்தேடியே
தாய் தேய்ந்து போனாள்
நேற்று மகன் சொன்னான்
அப்பா உயிரோடு இல்லை
அவங்கள் கொலை செய்திட்டாங்கள்
அப்பாவிற்கு உரியதை செய்வம் அம்மா
தாய் குழம்பிப்போனாள்
கணவனே உலகம் என வாழ்பவள்
மகனை அடித்துவிட்டாள்
ஒரு நாள் கழிந்தும்
குடிசையில் முன்னேற்றம் இல்லை
நேற்று தொலைபேசியில் கதைத்தேன்
இருவரும் தங்களில் பிழை என்றனர்
அழுதழுது
தங்களுக்குள் கதைக்கத்தொடங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக