இருள் இன்னும் கலையவில்லை
வேலையிடம் செல்லும் காலைப்பேருந்து
எனைப்பார்த்து புன்னகைத்து போகிறார்கள்
பொம்மைகள் போல உடையணிந்த குழந்தைகள்
அவர்களுக்குள் எப்போதும் ஆனந்தம்
அவர்களால் விடியும் எனது காலை
கண்களை மூடினேன்
காஸாவின் குழந்தைகள்
உணவில்லை, சேர்ந்து விளையாடியவர் இல்லை ,
தந்தையில்லை , இருட்டுலகம்
இழப்பின் வலி அவர்களுக்குத்தான்
மற்றவர்களுக்கு வெறும் செய்தி
வலிகளுக்குப்பின்னால் ஐநாவின் தோல்வி
மனிதர்களுக்குள் வாழும் மிருககுணம்
கூர்ப்புக்கொள்கையை உறுதிசெய்கிறது
பேருந்தின் மணியோசையில் திடுக்குற்றேன்
மீண்டும் கண்களை மூடுகிறேன்
நான் காவிய குழந்தைகளின் உடல்கள்,
சிறுவர்களின் கைகால்கள்,பிஞ்சு பாதங்கள்
நெஞ்சை உழுது அழுத்த
கண்ணீர் கன்னத்தை சுட
ஒட்டிய கண்கள் திறக்கின்றன
நான் இறங்கவேண்டிய இடம் கடந்தும்
இருள் இன்னும் கலையவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக